திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
ஆண்டருளிய அருமையை வியத்தல்
āṇṭaruḷiya arumaiyai viyattal
திருநடப் புகழ்ச்சி
tirunaṭap pukaḻchsi
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

049. இறைவனை ஏத்தும் இன்பம்
iṟaivaṉai ēttum iṉpam

    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. கருணைமா நிதியே என்னிரு கண்ணே
    கடவுளே கடவுளே என்கோ
    தருணவான் அமுதே என்பெருந் தாயே
    தந்தையே தந்தையே என்கோ
    தெருள்நிறை மதியே என்குரு பதியே
    தெய்வமே தெய்வமே என்கோ
    அருள்நிறை தரும்என் அருட்பெருஞ் சோதி
    ஆண்டவ நின்றனை அறிந்தே.
  • 2. ஒட்டியே என்னுள் உறும்ஒளி என்கோ
    ஒளிஎலாம் நிரம்பிய நிலைக்கோர்
    வெட்டியே என்கோ வெட்டியில்276 எனக்கு
    விளங்குறக் கிடைத்தஓர் வயிரப்
    பெட்டியே என்கோ பெட்டியின் நடுவே
    பெரியவர் வைத்ததோர் தங்கக்
    கட்டியே என்கோ அம்பலத் தாடும்
    கருணையங் கடவுள்நின் றனையே.
  • 3. துன்பெலாம் தவிர்த்த துணைவனே என்கோ
    சோதியுட் சோதியே என்கோ
    அன்பெலாம் அளித்த அன்பனே என்கோ
    அம்மையே அப்பனே என்கோ
    இன்பெலாம் புரிந்த இறைவனே என்கோ
    என்உயிர்க் கின்னமு தென்கோ
    என்பொலா மணியே என்கணே என்கோ
    என்னுயிர் நாதநின் றனையே.
  • 4. கருத்தனே எனது கருத்தினுக் கிசைந்த
    கணவனே கணவனே என்கோ
    ஒருத்தனே எல்லாம் உடையநா யகனே
    ஒருதனிப் பெரியனே என்கோ
    திருத்தனே எனது செல்வமே எல்லாம்
    செயவல்ல சித்தனே என்கோ
    நிருத்தனே எனக்குப் பொருத்தனே என்கோ
    நிறைஅருட் சோதிநின் றனையே.
  • 5. தாயனே எனது தாதையே ஒருமைத்
    தலைவனே தலைவனே என்கோ
    பேயனேன் பிழையைப் பொறுத்தருள் புரிந்த
    பெருந்தகைப் பெரும்பதி என்கோ
    சேயனேன் பெற்ற சிவபதம் என்கோ
    சித்தெலாம் வல்லசித் தென்கோ
    தூயனே எனது நேயனே என்கோ
    சோதியுட் சோதிநின் றனையே.
  • 6. அரும்பிலே மலர்வுற் றருள்மணம் வீசும்
    ஆனந்தத் தனிமலர் என்கோ
    கரும்பிலே எடுத்த சுவைத்திரள் என்கோ
    கடையனேன் உடையநெஞ் சகமாம்
    இரும்பிலே பழுத்துப் பேரொளி ததும்பி
    இலங்கும்ஓர் பசும்பொனே என்கோ
    துரும்பினேன் பெற்ற பெரும்பதம் என்கோ
    சோதியுட் சோதிநின் றனையே.
  • 7. தாகமுள் எடுத்த போதெதிர் கிடைத்த
    சர்க்கரை அமுதமே என்கோ
    மோகம்வந் தடுத்த போதுகைப் பிடித்த
    முகநகைக் கணவனே என்கோ
    போகமுள் விரும்பும் போதிலே வலிந்து
    புணர்ந்தஓர் பூவையே என்கோ
    ஆகமுட் புகுந்தென் உயிரினுட் கலந்த
    அம்பலத் தாடிநின் றனையே.
  • 8. தத்துவம் அனைத்தும் தவிர்த்துநான் தனித்த
    தருணத்தில் கிடைத்ததொன் றென்கோ
    சத்துவ நிரம்பும் சுத்தசன் மார்க்கந்
    தனில்உறும் அனுபவம் என்கோ
    ஒத்துவந் தெனைத்தான் கலந்துகொண் டெனக்குள்
    ஓங்கிய ஒருமையே என்கோ
    சித்துவந் தாடுஞ் சித்தனே என்கோ
    திருச்சிற்றம் பலத்தவ நினையே.
  • 9. யோகமெய்ஞ் ஞானம் பலித்தபோ துளத்தில்
    ஓங்கிய காட்சியே என்கோ
    ஏகமெய்ஞ் ஞான யோகத்திற் கிடைத்துள்
    இசைந்தபே ரின்பமே என்கோ
    சாகலைத் தவிர்த்தென் தன்னைவாழ் விக்கச்
    சார்ந்தசற் குருமணி என்கோ
    மாகமும் புவியும் வாழ்வுற மணிமா
    மன்றிலே நடிக்கின்றோய் நினையே.
  • 10. இரவிலா தியம்பும் பகலிலா திருந்த
    இயற்கையுள் இயற்கையே என்கோ
    வரவிலா வுரைக்கும் போக்கிலா நிலையில்
    வயங்கிய வான்பொருள் என்கோ
    திரையிலா தெல்லாம் வல்லசித் தெனக்கே
    செய்ததோர் சித்தனே என்கோ
    கரவிலா தெனக்குப் பேரருட் சோதி
    களித்தளித் தருளிய நினையே.

    • 276. கெட்டியே என்கோ கெட்டியில் - முதற்பதிப்பு., பொ. சு. பதிப்பு.
    • 277. நிலைக்கும் - முதற்பதிப்பு, பொ. சு. பதிப்பு.

இறைவனை ஏத்தும் இன்பம் // இறைவனை ஏத்தும் இன்பம்

No audios found!