திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
சுத்த சன்மார்க்க வேண்டுகோள்
sutta saṉmārkka vēṇṭukōḷ
சிவ தரிசனம்
siva tarisaṉam
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

022. ஆன்ம தரிசனம்
āṉma tarisaṉam

    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. திருஎலாம் தரும்ஓர் தெய்வமாம் ஒருவன்
    திருச்சிற்றம் பலந்திகழ் கின்றான்
    உருஎலாம் உணர்ச்சி உடல்பொருள் ஆவி
    உளஎலாம் ஆங்கவன் தனக்கே
    தெருஎலாம் அறியக் கொடுத்தனன் வேறு
    செயலிலேன் எனநினைத் திருந்தேன்
    அருஎலாம் உடையாய் நீஅறிந் ததுவே
    அடிக்கடி உரைப்பதென் நினக்கே.
  • 2. நினைத்தபோ தெல்லாம் நின்னையே நினைத்தேன்
    நினைப்பற நின்றபோ தெல்லாம்
    எனைத்தனி ஆக்கி நின்கணே நின்றேன்
    என்செயல் என்னஓர் செயலும்
    தினைத்தனை எனினும் புரிந்திலேன் எல்லாம்
    சிவன்செய லாம்எனப் புரிந்தேன்
    அனைத்தும்என் அரசே நீஅறிந் ததுவே
    அடிக்கடி உரைப்பதென் நினக்கே.
  • 3. களித்தபோ தெல்லாம் நின்இயல் உணர்ந்தே
    களித்தனன் கண்கள்நீர் ததும்பித்
    துளித்தபோ தெல்லாம் நின்அருள் நினைத்தே
    துளித்தனன் சூழ்ந்தவர் உளத்தைத்
    தெளித்தபோ தெல்லாம் நின்திறம் புகன்றே
    தெளித்தனன் செய்கைவே றறியேன்
    ஒளித்திரு வுளமே அறிந்ததிவ் வனைத்தும்
    உரைப்பதென் அடிக்கடி உனக்கே.
  • 4. உண்டதும் பொருந்தி உவந்ததும் உறங்கி
    உணர்ந்ததும் உலகியல் உணர்வால்
    கண்டதும் கருதிக் களித்ததும் கலைகள்
    கற்றதும் கரைந்ததும் காதல்
    கொண்டதும் நின்னோ டன்றிநான் தனித்தென்
    குறிப்பினில் குறித்ததொன் றிலையே
    ஒண்தகும் உனது திருவுளம் அறிந்த
    துரைப்பதென் அடிக்கடி உனக்கே.
  • 5. களவிலே களித்த காலத்தும் நீயே
    களித்தனை நான்களித் தறியேன்
    உளவிலே உவந்த போதும்நீ தானே
    உவந்தனை நான்உவந் தறியேன்
    கொளஇலே சமும்ஓர் குறிப்பிலேன் அனைத்தும்
    குறித்தனை கொண்டனை நீயே
    அளவிலே எல்லாம் அறிந்தனை அரசே
    அடிக்கடி உரைப்பதென் நினக்கே.
  • 6. திலகவாள் நுதலார் தமைக்கன விடத்தும்
    சிறிதும்நான் விழைந்திலேன் இந்த
    உலகவாழ் வதில்ஓர் அணுத்துணை எனினும்
    உவப்பிலேன் உலகுறு மாயைக்
    கலகவா தனைதீர் காலம்என் றுறுமோ
    கடவுளே எனத்துயர்ந் திருந்தேன்
    அலகிலாத் திறலோய் நீஅறிந் ததுநான்
    அடிக்கடி உரைப்பதென் நினக்கே.
  • 7. சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்
    சாத்திரக் குப்பையும் தணந்தேன்
    நீதியும் நிலையும் சத்தியப் பொருளும்
    நித்திய வாழ்க்கையும் சுகமும்
    ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
    அருட்பெருஞ் சோதிஎன் றறிந்தேன்
    ஓதிய அனைத்தும் நீஅறிந் ததுநான்
    உரைப்பதென் அடிக்கடி உனக்கே.
  • 8. பித்தெலாம் உடைய உலகர்தங் கலகப்
    பிதற்றெலாம் என்றொழிந் திடுமோ
    சத்தெலாம் ஒன்றென் றுணர்ந்தசன் மார்க்க
    சங்கம்என் றோங்குமோ தலைமைச்
    சித்தெலாம் வல்ல சித்தன்என் றுறுமோ
    தெரிந்திலேன் எனத்துயர்ந் திருந்தேன்
    ஒத்தெலாம் உனது திருவுளம் அறிந்த
    துரைப்பதென் அடிக்கடி உனக்கே.
  • 9. ஒன்றெனக் காணும் உணர்ச்சிஎன் றுறுமோ
    ஊழிதோ றுழிசென் றிடினும்
    என்றும்இங் கிறவா இயற்கைஎன் றுறுமோ
    இயல்அருட் சித்திகள் எனைவந்
    தொன்றல்என் றுறுமோ அனைத்தும்என் வசத்தே
    உறுதல்என் றோஎனத் துயர்ந்தேன்
    உன்திரு வுளமே அறிந்ததிவ் வனைத்தும்
    உரைப்பதென் அடிக்கடி உனக்கே.
  • 10. கள்ளாவா தனையைக் களைந்தருள் நெறியைக்
    காதலித் தொருமையில் கலந்தே
    உள்ளவா றிந்த உலகெலாம் களிப்புற்
    றோங்குதல் என்றுவந் துறுமோ
    வள்ளலே அதுகண் டடியனேன் உள்ளம்
    மகிழ்தல்என் றோஎனத் துயர்ந்தேன்
    ஒள்ளியோய் நினது திருவுளம் அறிந்த
    துரைப்பதென் அடிக்கடி உனக்கே.

ஆன்ம தரிசனம் // ஆன்ம தரிசனம்

No audios found!