திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
நற்றாய் கூறல்
naṟṟāy kūṟal
தலைவி தலைவன் செயலைத் தாய்க் குரைத்தல்
talaivi talaivaṉ seyalait tāyk kuraittal
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

076. பாங்கி தலைவிபெற்றி உரைத்தல்
pāṅki talaivipeṟṟi uraittal

    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. அம்மதவேள் கணைஒன்றோ ஐங்கணையும் விடுத்தான்
    அருள்அடையும் ஆசையினால் ஆருயிர்தான் பொறுத்தாள்
    இம்மதமோ சிறிதும்இலாள் கலவியிலே எழுந்த
    ஏகசிவ போகவெள்ளத் திரண்டுபடாள் எனினும்
    எம்மதமோ எக்குலமோ என்றுநினைப் புளதேல்
    இவள்மதமும் இவள்குலமும் எல்லாமும் சிவமே
    சம்மதமோ தேவர்திரு வாய்மலர வேண்டும்
    சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே.
  • 2. அங்கலிட்ட285 களத்தழகர் அம்பலவர் திருத்தோள்
    ஆசையெனும் பேய்அகற்றல் ஆவதிலை எனவே
    பொங்கலிட்ட தாயர்முகம் தொங்கலிட்டுப் போனார்
    பூவைமுகம் பூமுகம்போல் பூரித்து மகிழ்ந்தாள்
    எங்களிட்டம் திருவருள்மங் கலஞ்சூட்டல் அன்றி
    இரண்டுபடா தொன்றாக்கி இன்படைவித் திடவே
    தங்களிட்டம் யாதுதிரு வாய்மலர வேண்டும்
    சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே.
  • 3. பனம்பழமே எனினும்இந்தப் பசிதவிர்த்தால் போதும்
    பாரும்எனப் பகர்கின்ற பாவையர்போல் பகராள்
    இனம்பழமோ கங்கலந்தாள் சிவானுபவத் தல்லால்
    எந்தஅனு பவங்களிலும் இச்சைஇல்லாள் அவர்தம்
    மனம்பழமோ காயோஎன் றறிந்துவர விடுத்தாள்
    மற்றவர்போல் காசுபணத் தாசைவைத்து வருந்தாள்
    தனம்பழமோ தேவர்திரு வாய்மலர வேண்டும்
    சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே.
  • 4. புல்லவரே பொய்உலக போகம்உற விழைவார்
    புண்ணியரே சிவபோகம் பொருந்துதற்கு விழைவார்
    கல்லவரே மணிஇவரே என்றறிந்தாள் அதனால்
    கனவிடையும் பொய்யுறவு கருதுகிலாள் சிறிதும்
    நல்லவரே எனினும்உமை நாடாரேல் அவரை
    நன்குமதி யாள்இவளை நண்ணஎண்ணம் உளதோ
    வல்லவரே நுமதுதிரு வாய்மலர வேண்டும்
    வயங்குதிரு மணிமன்றில் வாழ்பெரிய துரையே.
  • 5. தத்துவரும் தத்துவஞ்செய் தலைவர்களும் பிறரும்
    தனித்தனியே வலிந்துவந்து தன்எதிர்நிற் கின்றார்
    எத்துணையும் மற்றவரை ஏறெடுத்துப் பாரான்
    இருவிழிகள் நீர்சொரிவாள் என்னுயிர்நா யகனே
    ஒத்துயிரில் கலந்துகொண்ட உடையாய்என் றுமையே
    ஓதுகின்றாள் இவள்அளவில் உத்தமரே உமது
    சித்தம்எது தேவர்திரு வாய்மலர வேண்டும்
    சிற்சபையில் பொற்சபையில் திகழ்பெரிய துரையே.
  • 6. அன்னையைக்கண் டம்மாநீ அம்பலத்தென் கணவர்
    அடியவளேல் மிகவருக அல்லள்எனில் இங்கே
    என்னைஉனக் கிருக்கின்ற தேகுகஎன் றுரைப்பாள்
    இச்சைஎலாம் உம்மிடத்தே இசைந்தனள்இங் கிவளை
    முன்னையள்என் றெண்ணாதீர் தாழ்த்திருப்பீர் ஆனால்
    முடுகிஉயிர் விடுத்திடுவாள் கடுகிவரல் உளதேல்
    மன்னவரே உமதுதிரு வாய்மலர வேண்டும்
    வயங்குதிரு மணிமன்றில் வாழ்பெரிய துரையே.
  • 7. கரவறியா அம்பலத்தென் கணவரைக்கண் டலது
    கண்துயிலேன் உண்டிகொளேன் களித்தமரேன் என்பாள்
    இரவறியாள் பகலறியாள் எதிர்வருகின் றவரை
    இன்னவர்என் றறியாள்இங் கின்னல்உழக் கின்றாள்
    வரவெதிர்பார்த் துழல்கின்றாள் இவள்அளவில் உமது
    மனக்கருத்தின் வண்ணம்எது வாய்மலர வேண்டும்
    விரவும்ஒரு கணமும்இனித் தாழ்க்கில்உயிர் தரியாள்
    மெய்ப்பொதுவில் நடம்புரியும் மிகப்பெரிய துரையே.
  • 8. ஊராசை உடலாசை உயிர்பொருளின் ஆசை
    உற்றவர்பெற் றவராசை ஒன்றுமிலாள் உமது
    பேராசைப் பேய்பிடித்தாள் கள்ளுண்டு பிதற்றும்
    பிச்சிஎனப் பிதற்றுகின்றாள் பிறர்பெயர்கேட் டிடிலோ
    நாராசஞ் செவிபுகுந்தால் என்னநலி கின்றாள்
    நாடறிந்த திதுஎல்லாம் நங்கைஇவள் அளவில்
    நீர்ஆசைப் பட்டதுண்டேல் வாய்மலர வேண்டும்
    நித்தியமா மணிமன்றில் நிகழ்பெரிய துரையே.
  • 9. என்னுயிரில் கலந்துகொண்டார் வரில்அவர்தாம் இருக்க
    இடம்புனைக என்கின்றாள் இச்சைமய மாகித்
    தன்னுயிர்தன் உடல்மறந்தாள் இருந்தறியாள் படுத்தும்
    தரித்தறியாள் எழுந்தெழுந்து தனித்தொருசார் திரிவாள்
    அன்னமுண அழைத்தாலும் கேட்பதிலாள் உலகில்
    அணங்கனையார் அதிசயிக்கும் குணங்கள்பல பெற்றாள்
    மின்னிவளை விழைவதுண்டேல் வாய்மலர வேண்டும்
    மெய்ப்பொதுவில் நடம்புரியும் மிகப்பெரிய துரையே.
  • 10. அம்பலத்தே நடம்புரியும் எனதுதனித் தலைவர்
    அன்புடன்என் உளங்கலந்தே அருட்பெருஞ்சோ தியினால்
    தம்பலத்தே பெரும்போகந் தந்திடுவார் இதுதான்
    சத்தியஞ்சத் தியமதனால் சார்ந்தவர்தாம் இருக்க
    எம்பலத்தே மலரணையைப் புனைகஎனப் பலகால்
    இயம்புகின்றாள் இவள்அளவில் இசைந்துநும தருளாம்
    செம்பலத்தே உறுதருணம் வாய்மலர வேண்டும்
    சிற்சபைபொற் சபைஓங்கித் திகழ்பெரிய துரையே.

    • 285. அங்கு அல் எனப்பிரித்து அவ்விடத்துஇருள் எனப் பொருள்கொள்க - முதற்பதிப்பு.இருள் - நஞ்சு.

பாங்கி தலைவிபெற்றி உரைத்தல் // பாங்கி தலைவிபெற்றி உரைத்தல்

No audios found!