திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
அன்பிற் பேதுறல்
aṉpiṟ pētuṟal
தரிசனை வேட்கை
tarisaṉai vēṭkai
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

039. கூடல் விழைதல்
kūṭal viḻaital

    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. சகம்ஆ றுடையார் அடையா நெறியார்
    சடையார் விடையார் தனிஆனார்
    உகமா ருடையார் உமைஓர் புடையார்
    உதவும் உரிமைத் திருமகனார்
    முகம்ஆ றுடையார் முகம்மா றுடையார்
    எனவே எனது முன்வந்தார்
    அகமா ருடையேன் பதியா தென்றேன்
    அலைவாய் என்றார் அஃதென்னே.
  • 2. விதுவாழ் சடையார் விடைமேல் வருவார்
    விதிமால் அறியா விமலனார்
    மதுவாழ் குழலாள் புடைவாழ் உடையார்
    மகனார் குகனார் மயில்ஊர்வார்
    முதுவாழ் வடையா தவமே அலைவேன்
    முன்வந் திடயான் அறியாதே
    புதுவாழ் வுடையார் எனவே மதிபோய்
    நின்றேன் அந்தோ பொல்லேனே.
  • 3. காயோ டுடனாய் கனல்கை ஏந்திக்
    காடே இடமாக் கணங்கொண்ட
    பேயோ டாடிப் பலிதேர் தரும்ஓர்
    பித்தப் பெருமான் திருமகனார்
    தாயோ டுறழும் தணிகா சலனார்
    தகைசேர் மயிலார் தனிவேலார்
    வேயோ டுறழ்தோள் பாவையர் முன்என்
    வெள்வளை கொண்டார் வினவாமே.
  • 4. பொன்னார் புயனார் புகழும் புகழார்
    புலியின் அதளார் புயம்நாலார்
    தென்னார் சடையார் கொடிமேல் விடையார்
    சிவனார் அருமைத் திருமகனார்
    என்நா யகனார் என்னுயிர் போல்வார்
    எழின்மா மயிலார் இமையோர்கள்
    தந்நா யகனார் தணிகா சலனார்
    தனிவந் திவண்மால் தந்தாரே.
  • 5. கல்லால் அடியார் கல்லடி உண்டார்
    கண்டார் உலகங் களைவேதம்
    செல்லா நெறியார் செல்லுறும் முடியார்
    சிவனார் அருமைத் திருமகனார்
    எல்லாம் உடையார் தணிகா சலனார்
    என்நா யகனார் இயல்வேலார்
    நல்லார் இடைஎன் வெள்வளை கொடுபின்
    நண்ணார் மயில்மேல் நடந்தாரே.
  • 6. காரூர் சடையார் கனலார் மழுவார்
    கலவார் புரமூன் றெரிசெய்தார்
    ஆரூர் உடையார் பலிதேர்ந் திடும்எம்
    அரனார் அருமைத் திருமகனார்
    போரூர் உறைவார் தணிகா சலனார்
    புதியார் எனஎன் முனம்வந்தார்
    ஏரூர் எமதூ ரினில்வா என்றார்
    எளியேன் ஏமாந் திருந்தேனே.
  • 7. கண்ணார் நுதலார் விடமார் களனார்
    கரமார் மழுவார் களைகண்ணார்
    பெண்ணார் புயனார் அயன்மாற் கரியார்
    பெரியார் கைலைப் பெருமானார்
    தண்ணார் சடையார் தருமா மகனார்
    தணிகா சலனார் தனிவேலார்
    எண்ணார் எளியாள் இவள்என் றெனையான்
    என்செய் கேனோ இடர்கொண்டே.
  • 8. மழுவார் தருகைப் பெருமான் மகனார்
    மயில்வா கனனார் அயில்வேலார்
    தழுவார் வினையைத் தணியார் அணியார்
    தணிகா சலனார் தம்பாதம்
    தொழுவார் அழுவார் விழுவார் எழுவார்
    துதியா நிற்பார் அவர்நிற்கப்
    புழுவார் உடலோம் பிடும்என் முனர்வந்
    தருள்தந் தருளிப் போனாரே.
  • 9. நிருத்தம் பயின்றார் கடல்நஞ் சயின்றார்
    நினைவார் தங்கள் நெறிக்கேற்க
    அருத்தம் பகர்வார் அருமைப் புதல்வர்
    அறுமா முகனார் அயில்வேலார்
    திருத்தம் பெறுவார் புகழும் தணிகைத்
    திருமா மலையார் ஒருமாதின்
    வருத்தம் பாரார் வளையும் தாரார்
    வாரார் அவர்தம் மனம்என்னே.
  • 10. பிரமன் தலையில் பலிகொண் டெருதில்
    பெயரும் பிச்சைப் பெருமானார்
    திரமன் றினிலே நடனம் புரிவார்
    சிவனார் மகனார் திறல்வேலார்
    தரமன் றலைவான் பொழில்சார் எழில்சேர்
    தணிகா சலனார் தமியேன்முன்
    வரமன் றவும்மால் கொளநின் றனனால்
    மடவார் அலரால் மனநொந்தே.

கூடல் விழைதல் // கூடல் விழைதல்