திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
காட்சிப் பெருமிதம்
kāṭsip perumitam
திருவருள் வேட்கை
tiruvaruḷ vēṭkai
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

015. கொடைமடப் புகழ்ச்சி
koṭaimaṭap pukaḻchsi

    திருவொற்றியூர்
    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. திரப்ப டும்திரு மால்அயன் வாழ்த்தத்
    தியாகர் என்னும்ஓர் திருப்பெயர் அடைந்தீர்
    வரப்ப டுந்திறத் தீர்உமை அடைந்தால்
    வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
    இரப்ப வர்க்கொன்றும் ஈகிலீர் ஆனால்
    யாதுக் கையநீர் இப்பெயர் எடுத்தீர்
    உரப்ப டும்தவத் தோர்துதித் தோங்க
    ஓங்கு சீர்ஒற்றி யூர்உடையீரே.
  • 2. வெள்ளி மாமலை வீடென உடையீர்
    விளங்கும் பொன்மலை வில்எனக் கொண்டீர்
    வள்ளி யீர்என நும்மைவந் தடைந்தால்
    வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
    எள்ளில் எண்ணெய்போல் எங்கணும் நின்றீர்
    ஏழை யேன்குறை ஏன்அறி யீரோ
    ஒள்ளி யீர்உமை அன்றிஒன் றறியேன்
    ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
  • 3. கள்ள மற்றவாக் கரசும்புத் திரரும்
    களிக்க வேபடிக் காசளித் தருளும்
    வள்ளல் என்றுமை வந்தடைந் தேற்றால்
    வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
    எள்ள ரும்புகழ்த் தியாகர்என் றொருபேர்
    ஏன்கொண் டீர்இரப் போர்க்கிட அன்றோ
    உள்ளம் இங்கறி வீர்எனை ஆள்வீர்
    ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
  • 4. அண்மை யாகும்சுந் தரர்க்கன்று கச்சூர்
    ஆலக் கோயிலில் சோறிரந் தளித்த
    வண்மை கேட்டிங்கு வந்தடைந் தேற்றால்
    வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
    திண்மை சேர்திரு மால்விடை ஊர்வீர்
    தேவ ரீருக்குச் சிறுமையும் உண்டோ
    உண்மை யான்உமை அன்றிமற் றறியேன்
    ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
  • 5. சிந்தை நொந்துல கில்பிறர் தம்மைச்
    சேர்ந்தி டாதுநும் திருப்பெயர் கேட்டு
    வந்த டைந்தஎற் குண்டிலை எனவே
    வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
    இந்த வண்ணம்நீர் இருந்திடு வீரேல்
    என்சொ லார்உமை இவ்வுல கத்தார்
    உந்தி வந்தவ னோடரி ஏத்த
    ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
  • 6. கல்லை யும்பசும் பொன்எனப் புரிந்த
    கருணை கேட்டுமைக் காதலித் திங்கு
    வல்லை வந்துநின் றேற்றிடில் சிறிதும்
    வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
    இல்லை நீர்பிச்சை எடுக்கின்றீ ரேனும்
    இரக்கின் றோர்களும் இட்டுண்பர் கண்டீர்
    ஒல்லை இங்கென துளங்கொண்ட தறிவீர்
    ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
  • 7. துளிக்கும் கண்ணுடன் சோர்வுற நெஞ்சம்
    தோன்ற லேஉமைத் துணைஎன நம்பி
    வளிக்குள் பஞ்சனை யேன்அடைந் தேற்றால்
    வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
    அளிக்கும் தன்மையீர் வாழ்ந்திவண் இருக்க
    அடிய னேன்அலை கின்றதும் அழகோ
    ஒளிக்கும் தன்மைதான் உமக்கும்உண் டேயோ
    ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
  • 8. குற்றம் எத்தனை அத்தனை எல்லாம்
    குணம்எ னக்கொளும் குணக்கடல் என்றே
    மற்றும் நான்நம்பி ஈங்குவந் தேற்றால்
    வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
    கற்ற நற்றவர்க் கேஅருள் வீரேல்
    கடைய னேன்எந்தக் கடைத்தலைச் செல்கேன்
    உற்ற நற்றுணை உமைஅன்றி அறியேன்
    ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
  • 9. பொய்யி லார்க்குமுன் பொற்கிழி அளித்த
    புலவர் ஏறெனப் புகழ்ந்திடக் கேட்டு
    மையல் கொண்டிடும் மனத்தொடும் வந்தால்
    வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
    ஐய நும்அடி அன்றிஓர் துணையும்
    அறிந்தி லேன்இஃத றிந்தரு ளீரேல்
    உய்யும் வண்ணம்எவ் வண்ணம்என் செய்கேன்
    ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
  • 10. தாயி லார்என நெஞ்சகம் தளர்ந்தேன்
    தந்தை உம்திருச் சந்நிதி அடைந்தேன்
    வாயி லார்என இருக்கின்றீர் அல்லால்
    வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
    கோயி லாகஎன் நெஞ்சகத் தமர்ந்த
    குணத்தி னீர்என்தன் குறைஅறி யீரோ
    ஒயி லாதுநல் தொண்டருக் கருள்வான்
    ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.

கொடைமடப் புகழ்ச்சி // கொடைமடப் புகழ்ச்சி