திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
அருள்விடை வேட்கை
aruḷviṭai vēṭkai
நெஞ்சொடு நேர்தல்
neñsoṭu nērtal
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

020. எழுத்தறியும் பெருமான் மாலை
eḻuttaṟiyum perumāṉ mālai

    திருவொற்றியூர்
    கொச்சகக் கலிப்பா
    திருச்சிற்றம்பலம்
  • 1. சிந்தை மயங்கித் தியங்குகின்ற நாயேனை
    முந்தை வினைதொலைத்துன் மொய்கழற்காள் ஆக்காதே
    நிந்தைஉறும் நோயால் நிகழவைத்தல் நீதியதோ
    எந்தைநீ ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
  • 2. மத்தனைவன் நெஞ்சகனை வஞ்சகனை வன்பிணிகொள்
    பித்தனைவீண் நாள்போக்கும் பேயேனை நாயேனை
    முத்தனையாய் உன்றன் முளரித்தாட் காளாக்க
    எத்தனைநாள் செல்லும் எழுத்தறியும் பெருமானே.
  • 3. நன்னெறிசேர் அன்பர்தமை நாடிடவும் நின்புகழின்
    சென்னெறியைச் சேர்ந்திடவும் செய்தாய் எனக்குனக்கு
    முன்அறியேன் பின்அறியேன் மூடனேன் கைம்மாறிங்
    கென்அறிவேன் ஐயா எழுத்தறியும் பெருமானே.
  • 4. மைப்படியும் கண்ணார் மயல்உழக்கச் செய்வாயோ
    கைப்படிய உன்றன் கழல்கருதச் செய்வாயோ
    இப்படிஎன் றப்படிஎன் றென்னறிவேன் உன்சித்தம்
    எப்படியோ ஐயா எழுத்தறியும் பெருமானே.
  • 5. நில்லா உடம்பை நிலைஎன்றே நேசிக்கும்
    பொல்லாத நெஞ்சப் புலையனேன் இவ்வுலகில்
    சொல்லா மனநோயால் சோர்வுற் றலையும்அல்லல்
    எல்லாம் அறிவாய் எழுத்தறியும் பெருமானே.
  • 6. தீதறிவேன் நன்கணுவும் செய்யேன்வீண் நாள்போக்கும்
    வாதறிவேன் வஞ்சகனேன் வல்வினையேன் வாய்மையிலேன்
    சூதறிவேன் மால்அயனும் சொல்லறிய நின்பெருமை
    யாதறிவேன் ஐயா எழுத்தறியும் பெருமானே.
  • 7. மாறாத வன்பிணியால் மாழாந்து நெஞ்சயர்ந்தே
    கூறாத துன்பக் கொடுங்கடற்குள் வீழ்ந்தடியேன்
    ஆறா தரற்றி அழுகின்றேன் நின்செவியில்
    ஏறாதோ ஐயா எழுத்தறியும் பெருமானே.
  • 8. உண்ணாடும் வல்வினையால் ஓயாப் பிணிஉழந்து
    புண்ணாக நெஞ்சம் புழுங்குகின்றேன் புண்ணியனே
    கண்ணாளா உன்றன் கருணை எனக்களிக்க
    எண்ணாயோ ஐயா எழுத்தறியும் பெருமானே.
  • 9. புன்செய்கை மாறாப் புலையமட மங்கையர்தம்
    வன்செய்கை யாலே மயங்குகின்ற வஞ்சகனேன்
    கொன்செய்கை மாறாத கூற்றன் வருவானேல்
    என்செய்வேன் ஐயா எழுத்தறியும் பெருமானே.
  • 10. சங்குடையான் தாமரையான் தாள்முடியும் காண்பரிதாம்
    கொங்குடைய கொன்றைக் குளிர்சடையாய் கோதைஒரு
    பங்குடையாய் ஏழைமுகம் பாராது தள்ளிவிட்டால்
    எங்கடைவேன் ஐயா எழுத்தறியும் பெருமானே.
  • 11. மன்றி னிடைநடஞ்செய் மாணிக்க மாமலையே
    வென்றிமழுக் கையுடைய வித்தகனே என்றென்று
    கன்றின் அயர்ந்தழும்என் கண்­ர் துடைத்தருள
    என்று வருவாய் எழுத்தறியும் பெருமானே.
  • 12. மன்னளவில் சோதி மணிபோல்வாய் மாதவத்தோர்
    தென்னளவும் வேணிச் சிவமே எனஒருகால்
    சொன்னளவில் சொன்னவர்தம் துன்பொழிப்பாய் என்பர்அது
    என்னளவில் காணேன் எழுத்தறியும் பெருமானே.
  • 13. மின்போல்வார் இச்சையினால் வெம்புகின்றேன் ஆனாலும்
    தன்போல்வாய் என்ஈன்ற தாய்போல்வாய் சார்ந்துரையாப்
    பொன்போல்வாய் நின்அருள்இப் போதடியேன் பெற்றேனேல்
    என்போல்வார் இல்லை எழுத்தறியும் பெருமானே.
  • 14. பூமாந்தும் வண்டெனநின் பொன்னருளைப் புண்ணியர்கள்
    தாமாந்தி நின்னடிக்கீழ்ச் சார்ந்துநின்றார் ஐயோநான்
    காமாந்த காரம்எனும் கள்ளுண்டு கண்மூடி
    ஏமாந்தேன் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
  • 15. பன்னரும்இப் பார்நடையில் பாடுழன்ற பாதகனேன்
    துன்னியநின் பொன்னடியைச் சூழாதேன் ஆயிடினும்
    புன்னிகரேன் குற்றம் பொறுக்கப் பொறுப்புனக்கே
    என்னருமைத் தாய்நீ எழுத்தறியும் பெருமானே.
  • 16. வீட்டுக் கடங்கா விளையாட்டுப் பிள்ளைஎனத்
    தேட்டுக் கடங்காத தீமனத்தால் ஆந்துயரம்
    பாட்டுக் கடங்காநின் பத்தர் அடிப்புகழ்போல்
    ஏட்டுக் கடங்கா தெழுத்தறியும் பெருமானே.
  • 17. பன்னு மனத்தால் பரிசிழந்த பாதகனேன்
    துன்னுமல வெங்கதிரோன் சூழ்கின்ற சோடையினால்
    நின்னருள்நீர் வேட்டு நிலைகலங்கி வாடுகின்றேன்
    இன்னும்அறி யாயோ எழுத்தறியும் பெருமானே.
  • 18. கல்லை நிகராம் கடைமனம்போம் கான்நெறியில்
    புல்லை மதித் தையோபைம் பூஇழந்த பொய்யடியேன்
    ஒல்லைபடு கின்ற ஒறுவே தனைதனக்கோர்
    எல்லை அறியேன் எழுத்தறியும் பெருமானே.
  • 19. பொன்னைமதித் தையாநின் பொன்னடியைப் போற்றாத
    கன்னிகரும் நெஞ்சால் கலங்குகின்ற கைதவனேன்
    இன்னல் உழக்கின்ற ஏழைகட்கும் ஏழைகண்டாய்
    என்னை விடாதே எழுத்தறியும் பெருமானே.
  • 20. மாசுவரே என்னும் மலக்கடலில் வீழ்ந்துலகோர்
    ஆசுவரே என்ன அலைவேனை ஆளாயேல்
    கூசுவரே கைகொட்டிக் கூடிச் சிரித்தடியார்
    ஏசுவரே ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
  • 21. ஊர்சொல்வேன் பேர்சொல்வேன் உத்தமனே நின்திருத்தாள்
    சீர்சொல்வேன் என்றனைநீ சேர்க்கா தகற்றுவையேல்
    நேர்சொல்வாய் உன்றனக்கு நீதியீ தல்லஎன்றே
    யார்சொல்வார் ஐயா எழுத்தறியும் பெருமானே.
  • 22. நீக்கமிலா மெய்யடியர் நேசமிலாப் பொய்யடியேன்
    ஊக்கமிலா நெஞ்சத்தின் ஓட்டகலச் செய்வாயேல்
    தூக்கமிலா ஆனந்தத் தூக்கம்அன்றி மற்றும்இங்கோர்
    ஏக்கமிலேன் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
  • 23. போகின்ற வஞ்சகரைப் போக்கிஉன்றன் பொன்அடிக்காள்
    ஆகின்ற மேலோர் அடிவழுத்தா நாயேற்குப்
    பாகின் தனிச்சுவையிற் பாங்காகும் நின்அருளை
    ஈகின்ற தென்றோ எழுத்தறியும் பெருமானே.
  • 24. ஊழை அகற்ற உளவறியாப் பொய்யன்இவன்
    பீழைமனம் நம்மைப் பெறாதம் மனங்கொடிய
    தாழைஎன எண்ணிஎன்னைத் தள்ளிவிட்டால் என்செய்வேன்
    ஏழைநான் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
  • 25. மடுக்க முடியா மலஇருட்டில் சென்றுமனம்
    கடுக்கமுடி யாப்புலனால் கட்டிச் சுமக்கவைத்த
    தொடுக்க முடியாத துன்பச் சுமையைஇனி
    எடுக்கமுடி யாதே எழுத்தறியும் பெருமானே.
  • 26. முள்ளளவு நெஞ்ச முழுப்புலைய மாதர்களாம்
    கள்ளளவு நாயில் கடைப்பட்ட என்றனக்கு
    உள்ளளவும் அன்பர்க் குதவும்உன்தாட் கன்பொருசிற்
    றெள்ளளவும் உண்டோ எழுத்தறியும் பெருமானே.
  • 27. பண்ண முடியாப் பரிபவங்கொண் டிவ்வுலகில்
    நண்ண முடியா நலங்கருதி வாடுகின்றேன்
    உண்ணமுடி யாஅமுதாம் உன்னைஅன்றி எவ்வௌர்க்கும்
    எண்ணமுடி யாதே எழுத்தறியும் பெருமானே.
  • 28. வெங்கொளித்தேள் போன்ற வினையால் வெதும்பிமனம்
    அங்கொளிக்கா துன்னை அழைத்தழுது வாடுகின்றேன்
    இங்கொளிக்கா நஞ்சமுண்ட என்அருமை அப்பாநீ
    எங்கொளித்தாய் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
  • 29. பித்தளைக்கும் காமப் பெரும்பேய் மயக்குமயல்
    வித்தனைத்தாம் ஆணவம்பொய் வீறும்அழுக் காறுசினம்
    கொத்தனைத்தாம் வஞ்சம் கொலைமுதலாம் பாவங்கள்
    இத்தனைக்கும் நான்காண் எழுத்தறியும் பெருமானே.
  • 30. ஒல்லையே நஞ்சனைத்தும் உண்ட தயாநிதிநீ
    அல்லையோ நின்றிங் கயர்வேன்முன் வந்தொருசொல்
    சொல்லையோ ஒற்றியூர்த் தூயதிருக் கோயிலுள்நீ
    இல்லையோ ஐயா எழுத்தறியும் பெருமானே.
  • 31. நினையுடையாய் நீஅன்றி நேடில்எங்கும் இல்லாதாய்
    மனையுடையார் மக்கள்எனும் வாழ்க்கையிடைப் பட்டவமே
    இனையுடையான் என்றிங் கெனையாள்வ துன்கடனே
    எனையுடையாய் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.

எழுத்தறியும் பெருமான் மாலை // எழுத்தறியும் பெருமான் மாலை

No audios found!