திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
உய்கைத் திருப்பதிகம்
uykait tiruppatikam
திருவண்ணப் பதிகம்
tiruvaṇṇap patikam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

077. ஆனந்தப் பதிகம்
āṉantap patikam

    திருவொற்றியூர்
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. குடிகொள் மலஞ்சூழ் நவவாயிற் கூட்டைக் காத்துக் குணமிலியாய்ப்
    படிகொள் நடையில் பரதவிக்கும் பாவி யேனைப் பரிந்தருளிப்
    பொடிகொள் வெள்ளைப் பூச்சணிந்த பொன்னே உன்னைப் போற்றிஒற்றிக்
    கடிகொள் நகர்க்கு வரச்செய்தாய் கைம்மா றறியேன் கடையேனே.
  • 2. சாதல் பிறத்தல் எனும்கடலில் தாழ்ந்து கரைகா ணாதழுந்தி
    ஈதல் இரக்கம் எள்அளவும் இல்லா தலையும் என்றனைநீ
    ஓதல் அறிவித் துணர்வறிவித் தொற்றி யூர்ச்சென் றுனைப்பாடக்
    காதல் அறிவித் தாண்டதற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.
  • 3. அற்ப அளவும் நிச்சயிக்கல் ஆகா உடம்பை அருமைசெய்து
    நிற்ப தலதுன் பொன் அடியை நினையாக் கொடிய நீலன்எனைச்
    சற்ப அணியாய் நின்றன்ஒற்றித் தலத்தைச் சார்ந்து நின்புகழைக்
    கற்ப அருள்செய் தனைஅதற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.
  • 4. உண்டு வறிய ஒதிபோல உடம்பை வளர்த்தூன் ஊதியமே
    கொண்டு காக்கைக் கிரையாகக் கொடுக்க நினைக்கும் கொடியன் எனை
    விண்டு அறியா நின்புகழை விரும்பி ஒற்றி யூரில்நினைக்
    கண்டு வணங்கச் செய்ததற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.
  • 5. நாய்க்கும் எனக்கும் ஒப்பாரி நாடி அதற்கு விருந்திடுவான்
    வாய்க்கும் ஒதிபோல் பொய்உடலை வளர்க்க நினைக்கும் வஞ்சன்எனை
    ஆய்க்கும் இனிய அப்பாஉன் ஒற்றி யூரை அடைந்திருளைக்
    காய்க்கும் வண்ணம் செய்ததற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.
  • 6. குருதி நிறைந்த குறுங்குடத்தைக் கொண்டோன் வழியில் சென்றிடவா
    யெருதின் மனத்தேன் சுமந்துநலம் இழந்து திரியும் எய்ப்பொழிய
    வருதி எனவே வழிஅருளி ஒற்றி யூர்க்கு வந்துன்னைக்
    கருதி வணங்கச் செய்ததற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.
  • 7. பாவம் எனும்ஓர் பெருஞ்சரக்குப் பையை எடுத்துப் பண்பறியாக்
    கோவம் எனும்ஓர் குரங்காட்டும் கொடியேன் தன்னைப் பொருட்படுத்தித்
    தேவர் அமுதே சிவனேநின் திருத்தாள் ஏத்த ஒற்றிஎனும்
    காவல் நகரம் வரச்செய்தாய் கைம்மா றறியேன் கடையேனே.
  • 8. பொள்ளற் குடத்தின் புலால்உடம்பைப் போற்றி வளர்த்துப் புலன் இழந்தே
    துள்ளற் கெழுந்த மனத்துடனே துள்ளி அலைந்த துட்டன் எனை
    உள்ளற் கறிவு தந்துன்றன் ஒற்றி யூர்க்கு வந்துவினைக்
    கள்ளப் பகைநீக் கிடச்செய்தாய் கைம்மா றறியேன் கடையேனே.
  • 9. கூட்டும் எலும்பால் தசையதனால் கோலும் பொல்லாக் கூரைதனை
    நாட்டும் பரம வீடெனவே நண்ணி மகிழ்ந்த நாயேனை
    ஊட்டுந் தாய்போல் உவந்துன்றன் ஒற்றி யூர்வந் துறநினைவு
    காட்டுங் கருணை செய்ததற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.
  • 10. ஊணத் துணர்ந்த பழுமரம்போல் ஒதிபோல் துன்பைத் தாங்குகின்ற
    தூணத் தலம்போல் சோரிமிகும் தோலை வளர்த்த சுணங்கன் எனை
    மாணப் பரிவால் அருட்சிந்தா மணியே உன்றன் ஒற்றிநகர்
    காணப் பணித்த அருளினுக்கோர் கைம்மா றறியேன் கடையேனே.
  • 11. புண்ணும் வழும்பும் புலால்நீரும் புழுவும் பொதிந்த பொதிபோல
    நண்ணுங் கொடிய நடைமனையை நான்என் றுளறும் நாயேனை
    உண்ணும் அமுதே நீஅமர்ந்த ஒற்றி யூர்கண் டென்மனமும்
    கண்ணுங் களிக்கச் செய்ததற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.

ஆனந்தப் பதிகம் // ஆனந்தப் பதிகம்

No audios found!