திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
சிறுமை விண்ணப்பம்
siṟumai viṇṇappam
இரங்கல் விண்ணப்பம்
iraṅkal viṇṇappam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

050. ஆற்றா விண்ணப்பம்
āṟṟā viṇṇappam

    திருவொற்றியூர்
    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. அன்னையில் பெரிதும் இனியஎன் அரசே அம்பலத் தாடல்செய் அமுதே
    பொன்னைஒத் தொளிரும் புரிசடைக் கனியே போதமே ஒற்றிஎம் பொருளே
    உன்னைவிட் டயலார் உறவுகொண் டடையேன் உண்மைஎன் உள்ளம்நீ அறிவாய்
    என்னைவிட் டிடில்நான் என்செய்வேன் ஒதிபோல் இருக்கின்ற இவ்வெளி யேனே.
  • 2. எளியனேன் மையல் மனத்தினால் உழன்றேன் என்செய்வேன் என்செய்வேன்பொல்லாக்
    களியனேன் வாட்டம் கண்டனை இன்னும் கருணைசெய் திலைஅருட் கரும்பே
    அளியனே திருச்சிற் றம்பலத் தொளியே அருமருந் தேவட வனத்துத்
    தனியனே ஒற்றித் தலத்தமர் மணியே தயையிலி போல்இருந் தனையே.
  • 3. இருந்தனை எனது நெஞ்சினுள் எந்தாய் என்துயர் அறிந்திலை போலும்
    முருந்தனை முறுவல் மங்கையர் மலைநேர் முலைத்தலை உருண்டன னேனும்
    மருந்தனை யாய்உன் திருவடி மலரை மறந்திலேன் வழுத்துகின் றனன்காண்
    வருந்தனை யேல்என் றுரைத்திலை ஐயா வஞ்சகம் உனக்கும்உண் டேயோ.
  • 4. உண்டநஞ் சின்னும் கண்டம்விட் டகலா துறைந்தது நாடொறும் அடியேன்
    கண்டனன் கருணைக் கடல்எனும் குறிப்பைக் கண்டுகண் டுளமது நெகவே
    விண்டனன் என்னைக் கைவிடில் சிவனே விடத்தினும் கொடியன்நான் அன்றோ
    அண்டர்கட் கரசே அம்பலத் தமுதே அலைகின்றேன் அறிந்திருந் தனையே.
  • 5. தனையர்செய் பிழையைத் தந்தையர் குறித்துத் தள்ளுதல் வழக்கல என்பார்
    வினையனேன் பிழையை வினையிலி நீதான் விவகரித் தெண்ணுதல் அழகோ
    உனையலா திறந்தும் பிறந்தும்இவ் வுலகில் உழன்றிடுந் தேவரை மதியேன்
    எனையலா துனக்கிங் காளிலை யோஉண்டென்னினும் ஏன்றுகொண் டருளே.
  • 6. ஏன்றுகொண் டருள வேண்டும்இவ் எளியேன் இருக்கினும் இறக்கினும் பொதுவுள்
    ஊன்றுகொண் டருளும் நின்னடி யல்லால் உரைக்கும்மால் அயன்முதல் தேவர்
    நான்றுகொண் டிடுவ ரேனும்மற் றவர்மேல் நாஎழா துண்மையீ திதற்குச்
    சான்றுகொண் டருள நினைத்தியேல் என்னுள் சார்ந்தநின் சரண்இரண் டன்றே.
  • 7. சரணவா ரிசம்என் தலைமிசை இன்னும் தரித்திலை தாழ்த்தனை அடியேன்
    கரணவா தனையும் கந்தவா தனையும் கலங்கிடக் கபமிழுத் துந்தும்
    மரணவா தனைக்கென் செய்குவம் என்றே வருந்துகின் றனன்மனம் மாழாந்
    தரணமூன் றெரிய நகைத்தஎம் இறையே அடியனை ஆள்வதுன் கடனே.
  • 8. கடம்பொழி ஓங்கல் உரிஉடை உடுக்கும் கடவுளே கடவுளர் கோவே
    மடம்பொழி மனத்தேன் மலஞ்செறிந் தூறும் வாயில்ஓர் ஒன்பதில் வரும்இவ்
    உடம்பொழிந் திடுமேல் மீண்டுமீண் டெந்தஉடம்புகொண் டுழல்வனோஎன்று
    நடம்பொழி பதத்தாய் நடுங்குகின் றனன்காண் நான்செயும் வகைஎது நவிலே.
  • 9. வகைஎது தெரிந்தேன் ஏழையேன் உய்வான் வள்ளலே வலிந்தெனை ஆளும்
    தகைஅது இன்றேல் என்செய்வேன் உலகர் சழக்குடைத் தமியன்நீ நின்ற
    திகைஎது என்றால் சொலஅறி யாது திகைத்திடும் சிறியனேன் தன்னைப்
    பகைஅது கருதா தாள்வதுன் பரங்காண் பவளமா நிறத்தகற் பகமே.
  • 10. கற்பன அறிந்து கற்கிலேன் சழக்குக் கல்விகற் றுழன்றனன் கருணை
    சொற்பன மதிலும் காண்கிலேன் பொல்லாச் சூகரம் எனமலம் துய்த்தேன்
    விற்பனன் எனவே நிற்பது விழைந்தேன் வீணனேன் விரகிலா வெறியேன்
    அற்பனேன் தன்னை ஆண்டநின் அருளை ஆய்ந்திடில் அன்னையின் பெரிதே.

ஆற்றா விண்ணப்பம் // ஆற்றா விண்ணப்பம்

No audios found!