திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
வேட்கை விண்ணப்பம்
vēṭkai viṇṇappam
போக் குரையீடு
pōk kuraiyīṭu
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

016. ஆறெழுத் துண்மை
āṟeḻut tuṇmai

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. பெருமை நிதியே மால்விடைகொள் பெம்மான் வருந்திப் பெறும்பேறே
    அருமை மணியே தணிகைமலை அமுதே உன்றன் ஆறெழுத்தை
    ஒருமை மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
    இருமை வளனும் எய்தும்இடர் என்ப தொன்றும் எய்தாதே.
  • 2. எய்தற் கரிய அருட்சுடரே எல்லாம் வல்ல இறையோனே
    செய்தற் கரிய வளத்தணிகைத் தேவே உன்றன் ஆறெழுத்தை
    உய்தற் பொருட்டிங் குச்சரித்தே உயர்ந்த திருவெண்ணீறிட்டால்
    வைதற் கில்லாப் புகழ்ச்சிவரும் வன்கண் ஒன்றும் வாராதே.
  • 3. வாரா இருந்த அடியவர்தம் மனத்தில் ஒளிரும் மாமணியே
    ஆரா அமுதே தணிகைமலை அரசே உன்றன் ஆறெழுத்தை
    ஓரா மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
    ஏரார் செல்வப் பெருக்கிகவா இடும்பை ஒன்றும் இகந்திடுமே.
  • 4. இகவா அடியர் மனத்தூறும் இன்பச் சுவையே எம்மானே
    அகவா மயில்ஊர் திருத்தணிகை அரசே உன்றன் ஆறெழுத்தை
    உகவா மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
    சுகவாழ் வின்பம் அதுதுன்னும் துன்பம் ஒன்றும் துன்னாதே.
  • 5. துன்னும் மறையின் முடிவில்ஒளிர் தூய விளக்கே சுகப்பெருக்கே
    அன்னை அனையாய் தணிகைமலை அண்ணா உன்றென் ஆறெழுத்தை
    உன்னி மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
    சென்னி அணியாய் அடிசேரும் தீமை ஒன்றும் சேராதே.
  • 6. சேரும் முக்கண் கனிகனிந்த தேனே ஞானச் செழுமணியே
    யாரும் புகழும் தணிகைஎம தன்பே உன்றன் ஆறெழுத்தை
    ஓரும் மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
    பாரும் விசும்பும் பதஞ்சாரும் பழங்கண் ஒன்றும் சாராதே.
  • 7. சார்ந்த அடியார்க் கருள்அளிக்கும் தருமக் கடலே தற்பரமே
    வார்ந்த பொழில்சூழ் திருத்தணிகை மணியே உன்றன் ஆறெழுத்தை
    ஓர்ந்து மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
    ஆர்ந்த ஞானம் உறும்அழியா அலக்கண் ஒன்றும் அழிந்திடுமே.
  • 8. அழியாப் பொருளே என்உயிரே அயில்செங் கரங்கொள் ஐயாவே
    கழியாப் புகழ்சேர் தணிகைஅமர் கந்தா உன்றன் ஆறெழுத்தை
    ஒழியா மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
    பழியா இன்பம் அதுபதியும் பனிமை ஒன்றும் பதியாதே.
  • 9. பதியே எங்கும் நிறைந்தருளும் பரம சுகமே பரஞ்சுடரே
    கதியே அளிக்கும் தணிகைஅமர் கடம்பா உன்றன் ஆறெழுத்தை
    உதியேர் மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
    துதிஏர் நினது பதந்தோன்றும் துன்பம் ஒன்றும் தோன்றாதே.
  • 10. தோன்றா ஞானச் சின்மயமே தூய சுகமே சுயஞ்சுடரே
    ஆன்றார் புகழும் தணிகைமலை அரசே உன்றன் ஆறெழுத்தை
    ஊன்றா மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
    ஈன்றாள் நிகரும் அருள்அடையும் இடுக்கண் ஒன்றும் அடையாதே.

ஆறெழுத் துண்மை // ஆறெழுத் துண்மை