திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
திருஅருட் பெருமிதம்
tiruaruṭ perumitam
ஆற்றா விரகம்
āṟṟā virakam
மூன்றாம் திருமுறை / Third Thirumurai

017. காதற் சிறப்புக் கதுவா மாண்பு
kātaṟ siṟappuk katuvā māṇpu

    தலைவி கழற் றெதிர்மறுத்தல்
    திருவொற்றியூர்
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. உலகம் உடையார் தம்ஊரை ஒற்றி வைத்தார் என்றாலும்
    அலகில் புகழார் காபாலி ஆகத் திரிந்தார் என்றாலும்
    திலகம் அனையார் புறங்காட்டில் சேர்ந்து நடித்தார் என்றாலும்
    கலக விழியாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
  • 2. பெருமை உடையார் மனைதொறும்போய்ப் பிச்சை எடுத்தார் ஆனாலும்
    அருமை மணியார் அம்பலத்தில் ஆடித் திரிந்தார் ஆனாலும்
    ஒருமை உடையார் கோவணமே உடையாய் உடுத்தார் ஆனாலும்
    கருமை விழியாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
  • 3. எல்லாம் உடையார் மண்கூலிக் கெடுத்துப் பிழைத்தார் ஆனாலும்
    கொல்லா நலத்தார் யானையின்தோல் கொன்று தரித்தார் ஆனாலும்
    வல்லார் விசையன் வில்அடியால் வடுப்பட் டுவந்தார் ஆனாலும்
    கல்லாம் முலையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
  • 4. என்னை உடையார் ஒருவேடன் எச்சில் உவந்தார் என்றாலும்
    அன்னை அனையார் ஒருமகனை அறுக்க உரைத்தார் என்றாலும்
    துன்னும் இறையார் தொண்டனுக்குத் தூதர் ஆனார் என்றாலும்
    கன்னி இதுகேள் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
  • 5. என்றும் இறவார் மிடற்றில்விடம் இருக்க அமைத்தார் என்றாலும்
    ஒன்று நிலையார் நிலையில்லா தோடி உழல்வார் என்றாலும்
    நன்று புரிவார் தருமன்உயிர் நலிய உதைத்தார் என்றாலும்
    கன்றுண் கரத்தாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
  • 6. என்கண் அனையார் மலைமகளை இச்சித் தணைந்தார் ஆனாலும்
    வன்கண் அடையார் தீக்கண்ணால் மதனை எரித்தார் ஆனாலும்
    புன்கண் அறுப்பார் புன்னகையால் புரத்தை அழித்தார் ஆனாலும்
    கன்னல் மொழியாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
  • 7. வாழ்வை அளிப்பார் மாடேறி மகிழ்ந்து திரிவார் என்றாலும்
    தாழ்வை மறுப்பார் பூதகணத் தானை உடையார் என்றாலும்
    ஊழ்வை அறுப்பார் பேய்க்கூட்டத் தொக்க நடிப்பார் என்றாலும்
    காழ்கொள் முலையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
  • 8. விமலை இடத்தார் இன்பதுன்பம் வேண்டா நலத்தார் ஆனாலும்
    அமலம் உடையார் தீவண்ணர் ஆமென் றுரைப்பார் ஆனாலும்
    நமலம் அறுப்பார் பித்தர்எனும் நாமம் உடையார் ஆனாலும்
    கமலை அனையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
  • 9. மான்கொள் கரத்தார் தலைமாலை மார்பில் அணிந்தார் என்றாலும்
    ஆன்கொள் விடங்கர் சுடலைஎரி அடலை விழைந்தார் என்றாலும்
    வான்கொள் சடையார் வழுத்துமது மத்தர் ஆனார் என்றாலும்
    கான்கொள் குழலாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
  • 10. போர்மால் விடையார் உலகமெலாம் போக்குந் தொழிலர் ஆனாலும்
    ஆர்வாழ் சடையார் தமைஅடைந்தோர் ஆசை அழிப்பார் ஆனாலும்
    தார்வாழ் புயத்தார் மாவிரதர் தவஞா னியரே ஆனாலும்
    கார்வாழ் குழலாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
  • 11. கோதே மருவார் மால்அயனும் குறியா நெறியார் என்றாலும்
    சாதே மகிழ்வார் அடியாரைத் தம்போல் நினைப்பார் என்றாலும்
    மாதே வருக்கும் மாதேவர் மௌன யோகி என்றாலும்
    காதேர் குழையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
  • 12. உடையார் உலகிற் காசென்பார்க் கொன்றும் உதவார் ஆனாலும்
    அடையார்க் கரியார் வேண்டார்க்கே அருள்வார் வலிய ஆனாலும்
    படையார் கரத்தர் பழிக்கஞ்சாப் பாசு பதரே ஆனாலும்
    கடையா அமுதே நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.

காதற் சிறப்புக் கதுவா மாண்பு // காதற் சிறப்புக் கதுவா மாண்பு

No audios found!