திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
(பொது) தனித் திருமாலை
(potu) taṉit tirumālai
இன்ப மாலை
iṉpa mālai
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

058. அருண்மொழி மாலை
aruṇmoḻi mālai

    திருவொற்றியூர்
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. பொதுநின் றருள்வீ ரொற்றியுளீர் பூவுந் தியதென் முலையென்றேன்
    இதுவென் றறிநா மேறுகின்ற தென்றா ரேறு கின்றதுதான்
    எதுவென் றுரைத்தே னெதுநடுவோ ரெழுத்திட் டறிநீ யென்றுரைத்தார்
    அதுவின் றணங்கே யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
  • 2. மருகா வொற்றி வாணர்பலி வாங்க வகையுண் டேயென்றேன்
    ஒருகா லெடுத்தேன் காணென்றா ரொருகா லெடுத்துக் காட்டுமென்றேன்
    வருகா விரிப்பொன் னம்பலத்துள் வந்தாற் காட்டு வேமென்றார்
    அருகா வியப்பா மென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
  • 3. விட்டொற் றியில்வாழ் வீரெவனிவ் வேளை யருள நின்றதென்றேன்
    சுட்டுஞ் சுதனே யென்றார்நான் சுட்டி யறியச் சொல்லுமென்றேன்
    பட்டுண் மருங்கே நீகுழந்தைப் பருவ மதனின் முடித்ததென்றார்
    அட்டுண் டறியா ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
  • 4. வேலை ஞாலம் புகழொற்றி விளங்குந் தேவர் நீரணியும்
    மாலை யாதென் றேனயன்மால் மாலை யகற்று மாலையென்றார்
    சோலை மலரன் றேயென்றேன் சோலை யேநாந் தொடுத்ததென்றார்
    ஆலு மிடையா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
  • 5. உயிரு ளுறைவீர் திருவொற்றி யுள்ளீர் நீரென் மேற்பிடித்த
    வயிர மதனை விடுமென்றேன் மாற்றா ளலநீ மாதேயாஞ்
    செயிர தகற்றுன் முலைப்பதிவாழ் தேவ னலவே டெளியென்றார்
    அயிர மொழியா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
  • 6. தண்கா வளஞ்சூழ் திருவொற்றித் தலத்தி லமர்ந்த சாமிநுங்கை
    யெண்கார் முகமாப் பொன்னென்றே னிடையிட் டறித லரிதென்றார்
    மண்கா தலிக்கு மாடென்றேன் மதிக்குங் கணைவில் லன்றென்றார்
    அண்கார்க் குழலா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
  • 7. அலங்கும் புனற்செய் யொற்றியுளீ ரயன்மா லாதி யாவர்கட்கும்
    இலங்கு மைகாணீரென்றே னிதன்முன் னேழ்நீ கொண்டதென்றார்
    துலங்கு மதுதா னென்னென்றேன் சுட்டென் றுரைத்தா ராகெட்டேன்
    அலங்கற் குழலா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
  • 8. விண்டு வணங்கு மொற்றியுளீர் மென்பூ விருந்தும் வன்பூவில்
    வண்டு விழுந்த தென்றேனெம் மலர்க்கை வண்டும் விழுந்ததென்றார்
    தொண்டர்க் கருள்வீர் நீரென்றேன் றோகாய் நாமே தொண்டரென்றார்
    அண்டர்க் கரியா ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
  • 9. மட்டார் மலர்க்கா வொற்றியுளீர் மதிக்குங் கலைமேல் விழுமென்றேன்
    எட்டா மெழுத்தை யெடுக்குமென்றா ரெட்டா மெழுத்திங் கெதுவென்றேன்
    உட்டா வகற்று மந்தணர்க ளுறையூர் மாதே யுணரென்றார்
    அட்டார் புரங்க ளென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
  • 10. ஒற்றி நகரீர் மனவாசி யுடையார்க் கருள்வீர் நீரென்றேன்
    பற்றி யிறுதி தொடங்கியது பயிலு மவர்க்கே யருள்வதென்றார்
    மற்றி துணர்கி லேனென்றேன் வருந்தே லுணரும் வகைநான்கும்
    அற்றி டென்றா ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
  • 11. வான்றோய் பொழிற்சூ ழொற்றியுளீர் வருந்தா தணைவே னோவென்றேன்
    ஊன்றோ யுடற்கென் றார்தெரிய வுரைப்பீ ரென்றே னோவிதுதான்
    சான்றோ ருங்கண் மரபோர்ந்து தரித்த பெயர்க்குத் தகாதென்றார்
    ஆன்றோய் விடங்க ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
  • 12. தீது தவிர்க்கு மொற்றியுளீர் செல்ல லறுப்ப தென்றென்றேன்
    ஈது நமக்குந் தெரியுமென்றா ரிறையா மோவிங் கிதுவென்றேன்
    ஓது மடியர் மனக்கங்கு லோட்டு மியாமே யுணரென்றார்
    ஆது தெரியே னென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
  • 13. ஒண்கை மழுவோ டனலுடையீ ரொற்றி நகர்வா ழுத்தமர்நீர்
    வண்கை யொருமை நாதரென்றேன் வண்கைப் பன்மை நாதரென்றார்
    எண்க ணடங்கா வதிசயங்கா ணென்றேன் பொருளன் றிதற்கென்றார்
    அண்கொ ளணங்கே யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
  • 14. ஒருவ ரெனவா ழொற்றியுளீ ருமக்கம் மனையுண் டேயென்றேன்
    இருவ ரொருபே ருடையவர்காண் என்றா ரென்னென் றேனென்பேர்
    மருவு மீறற் றயலகரம் வயங்கு மிகர மானதென்றார்
    அருவு மிடையா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
  • 15. பேரா ரொற்றி யீரும்மைப் பெற்றா ரெவரென் றேனவர்தம்
    ஏரார் பெயரின் முன்பினிரண் டிரண்ட கத்தா ரென்றாரென்
    நேரா வுரைப்பீ ரென்றேனீ நெஞ்ச நெகிழ்ந்தா லாமென்றார்
    ஆரார் சடைய ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
  • 16. தளிநான் மறையீ ரொற்றிநகர் தழைத்து வாழ்வீர் தனிஞான
    வொளிநா வரைசை யைந்தெழுத்தா லுவரி கடத்தி னீரென்றேன்
    களிநா வலனை யீரெழுத்தாற் கடலில் வீழ்த்தி னேமென்றார்
    அளிநாண் குழலா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
  • 17. ஓமூன் றெழிலீ ரொற்றியுளீ ருற்றோர்க் களிப்பீ ரோவென்றேன்
    தாமூன் றென்பார்க் கயன்மூன்றுந் தருவே மென்றா ரம்மமிகத்
    தேமூன் றினநும் மொழியென்றேன் செவ்வா யுறுமுன் முறுவலென்றார்
    ஆமூன் றறுப்பா ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
  • 18. மன்னி வளரு மொற்றியுளீர் மடவா ரிரக்கும் வகையதுதான்
    முன்னி லொருதா வாமென்றேன் முத்தா வெனலே முறையென்றார்
    என்னி லிதுதா னையமென்றே னெவர்க்குந் தெரியு மென்றுரைத்தார்
    அன்னி லோதி யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே .
  • 19. வளஞ்சே ரொற்றி யீருமது மாலை கொடுப்பீ ரோவென்றேன்
    குளஞ்சேர் மொழியா யுனக்கதுமுன் கொடுத்தே மென்றா ரிலையென்றேன்
    உளஞ்சேர்ந் ததுகா ணிலையன்றோ ருருவு மன்றங் கருவென்றார்
    அளஞ்சேர் வடிவா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
  • 20. வீற்றா ரொற்றி யூரமர்ந்தீர் விளங்கு மதனன் மென்மலரே
    மாற்றா ரென்றே னிலைகாணெம் மாலை முடிமேற் காணென்றார்
    சாற்றாச் சலமே யீதென்றேன் சடையின் முடிமே லன்றென்றார்
    ஆற்றா விடையா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
  • 21. புயப்பா லொற்றி யீரச்சம் போமோ வென்றே னாமென்றார்
    வயப்பா வலருக் கிறையானீர் வஞ்சிப் பாவிங் குரைப்பதென்றேன்
    வியப்பா நகையப் பாவெனும்பா வெண்பா கலிப்பா வுடனென்றார்
    அயப்பா லிடையா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
  • 22. தண்ணம் பொழிற்சூ ழொற்றியுளீர் சங்கங் கையிற்சேர்த் திடுமென்றேன்
    திண்ணம் பலமேல் வருங்கையிற் சேர்த்தோ முன்னர் தெரியென்றார்
    வண்ணம் பலவிம் மொழிக்கென்றேன் வாய்ந்தொன் றெனக்குக் காட்டென்றார்
    அண்ணஞ் சுகமே யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
  • 23. உகஞ்சே ரொற்றி யூருடையீ ரொருமா தவரோ நீரென்றேன்
    முகஞ்சேர் வடிவே லிரண்டுடையாய் மும்மா தவர்நா மென்றுரைத்தார்
    சுகஞ்சேர்ந் தனவும் மொழிக்கென்றேன் றோகா யுனது மொழிக்கென்றார்
    அகஞ்சேர் விழியா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
  • 24. ஊரா மொற்றி யீராசை யுடையே னென்றே னெமக்கலது
    நேரா வழக்குத் தொடுக்கின்றாய் நினக்கே தென்றார் நீரெனக்குச்
    சேரா வணமீ தென்றேன்முன் சேர்த்தீ தெழுதித் தந்தவர்தாம்
    ஆரா ரென்றா ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
  • 25. வருத்தந் தவரீ ரொற்றியுளீர் மனத்த காத முண்டென்றேன்
    நிருத்தந் தருநம் மடியாரை நினைக்கின் றோரைக் கண்டதுதன்
    றிருத்தந் தருமுன் னெழுத்திலக்கஞ் சேருந் தூர மோடுமென்றார்
    அருத்தந் தெரியே னென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
  • 26. மைய லகற்றீ ரொற்றியுளீர் வாவென் றுரைப்பீ ரோவென்றேன்
    துய்ய வதன்மேற் றலைவைத்துச் சொன்னாற் சொல்வே மிரண்டென்றார்
    உய்ய வுரைத்தீ ரெனக்கென்றே னுலகி லெவர்க்கு மாமென்றார்
    ஐய விடையா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
  • 27. தாவென் றருளு மொற்றியுளீர் தமியேன் மோக தாகமற
    வாவென் றுரைப்பீ ரென்றேன்பின் வருமவ் வெழுத்திங் கிலையென்றார்
    ஓவென் றுயர்தீர்த் தருளுவதீ தோவென் றேன்பொய் யுரைக்கின்றாய்
    ஆவென் றுரைத்தா ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
  • 28. வயலா ரொற்றி மேவுபிடி வாதர் நும்பே ரியாதென்றேன்
    இயலா யிட்ட நாமமதற் கிளைய நாம மேயென்றார்
    செயலார் கால மறிந்தென்னைச் சேர்வீ ரென்றேன் சிரித்துனக்கிங்
    கயலா ரென்றா ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
  • 29. என்மே லருள்கூர்ந் தொற்றியுளீ ரென்னை யணைய நினைவீரேற்
    பொன்மேல் வெள்ளி யாமென்றேன் பொன்மேற் பச்சை யறியென்றார்
    மின்மேற் சடையீ ரீதெல்லாம் விளையாட் டென்றே னன்றென்றார்
    அன்மேற் குழலா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
  • 30. நாலா ரணஞ்சூ ழொற்றியுளீர் நாகம் வாங்கி யென்னென்றேன்
    காலாங் கிரண்டிற் கட்டவென்றார் கலைத்தோல் வல்லீர் நீரென்றேன்
    வேலார் விழிமாத் தோலோடு வியாளத் தோலு முண்டென்றார்
    ஆலார் களத்த ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
  • 31. முடியா வளஞ்சூ ழொற்றியுளீர் முடிமே லிருந்த தென்னென்றேன்
    கடியா வுள்ளங் கையின்முதலைக் கடிந்த தென்றார் கமலமென
    வடிவார் கரத்தி லென்னென்றேன் வரைந்த வதனீ றற்றதென்றார்
    அடியார்க் கெளியா ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.

அருண்மொழி மாலை // அருண்மொழி மாலை

No audios found!