திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
வடிவுடை மாணிக்க மாலை
vaṭivuṭai māṇikka mālai
முதல் திருமுறை / First Thirumurai

008. இங்கித மாலை
iṅkita mālai

    கலைமகள் வாழ்த்து
    நேரிசை வெண்பா
    திருச்சிற்றம்பலம்
  • 1. அன்பர்பால் நீங்காஎன் அம்மையே தாமரைமேற்
    பொன்பொருவு மேனி அயன்பூவின்-மன்பெரிய
    வாக்கிறைவி நின்தாள் மலர்ச்சரணம் போந்தேனைக்
    காக்கக் கடனுனக்கே காண்.
  • காப்பு
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 2. ஒருமா முகனை யொருமாவை யூர்வா கனமா யுறநோக்கித்
    திருமான் முதலோர் சிறுமையெலாந் தீர்த்தெம் மிருகண் மணியாகிக்
    கருமா லகற்றுங் கணபதியாங் கடவு ளடியுங் களித்தவர்பின்
    வருமா கருணைக் கடற்குமர வள்ள லடியும் வணங்குவாம்.
  • பாடாண் திணை
    கடவுண்மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்
    (வினா உத்தரம்)
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 3. திருவார் கமலத் தடம்பணைசூழ் செல்வப் பெருஞ்சீ ரொற்றியில்வாழ்
    மருவார் கொன்றைச் சடைமுடிகொள் வள்ள லிவர்க்குப் பலிகொடுநா
    னொருவா தடைந்தே னினிநமக்கிங் குதவ வருந்தோ றுன்முலைமே
    லிருவா ரிடுநீ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 4. தண்ணார் மலரை மதிநதியைத் தாங்குஞ் சடையா ரிவர்தமைநா
    னண்ணா லொற்றி யிருந்தவரே யைய ரேநீர் யாரென்றே
    னண்ணா ரிடத்து மம்பலத்து நடவா தவர்நா மென்றுசொலி
    யெண்ணா தருகே வருகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 5. பிட்டி னதிமண் சுமந்தவொற்றிப் பிச்சைத் தேவ ரிவர்தமைநான்
    றட்டின் மலர்க்கை யிடத்தெதுவோ தனத்தைப் பிடியு மென்றுரைத்தேன்
    மட்டி னொருமூன் றுடனேழு மத்தர் தலையீ தென்றுசொலி
    யெட்டி முலையைப் பிடிக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 6. மடையிற் கயல்பா யொற்றிநகர் வள்ள லாகு மிவர்தமைநா
    னடையிற் கனிவாற் பணியென்றே யருளீ ருரியீ ருடையென்றேன்
    கடையிற் படுமோர் பணியென்றே கருதி யுரைத்தே மென்றுரைத்தென்
    னிடையிற் கலையை யுரிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 7. மன்றன் மணக்கு மொற்றிநகர் வாண ராகு மிவர்தமைநா
    னின்றன் பொடுங்கை யேந்தனத்தை யேற்றோர் கலத்திற் கொளுமென்றே
    னன்றன் புடையா யெண்கலத்தி னாங்கொண் டிடுவே மென்றுசொலி
    யென்றன் முலையைத் தொடுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 8. கோமாற் கருளுந் திருவொற்றிக் கோயி லுடையா ரிவரைமத
    மாமாற் றியநீ ரேகலவி மகிழ்ந்தின் றடியேன் மனையினிடைத்
    தாமாற் றிடக்கொண் டேகுமென்றேன் றாவென் றார்தந் தாலென்னை
    யேமாற் றினையே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 9. அம்மா லயனுங் காண்பரியீர்க் கமரும் பதிதான் யாதென்றே
    னிம்மா லுடையா யொற்றுதற்கோ ரெச்ச மதுகண் டறியென்றார்
    செம்மா லிஃதொன் றென்னென்றேன் றிருவே புரிமேற் சேர்கின்ற
    வெம்மான் மற்றொன் றென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 10. கண்கள் களிப்ப வீண்டுநிற்குங் கள்வ ரிவரூ ரொற்றியதாம்
    பண்க ளியன்ற திருவாயாற் பலிதா வென்றார் கொடுவந்தேன்
    பெண்க டரலீ தன்றென்றார் பேசப் பலியா தென்றேனின்
    னெண்கண் பலித்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 11. ஆரா மகிழ்வு தருமொருபே ரழக ரிவரூ ரொற்றியதா
    நேராய் விருந்துண் டோவென்றார் நீர்தான் வேறிங் கிலையென்றேன்
    வாரார் முலையாய் வாயமுது மலர்க்கை யமுது மனையமுது
    மேரா யுளவே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 12. அடுத்தார்க் கருளு மொற்றிநக ரைய ரிவர்தா மிகத்தாகங்
    கடுத்தா மென்றார் கடிதடநீர் கண்டீ ரையங் கொளுமென்றேன்
    கொடுத்தாய் கண்ட திலையையங் கொள்ளு மிடஞ்சூழ்ந் திடுங்கலையை
    யெடுத்தாற் காண்பே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 13. இந்தா ரிதழி யிலங்குசடை யேந்த லிவரூ ரொற்றியதாம்
    வந்தார் பெண்ணே யமுதென்றார் வரையின் சுதையிங் குண்டென்றே
    னந்தார் குழலாய் பசிக்கினும்பெண் ணாசை விடுமோ வமுதின்றே
    லெந்தா ரந்தா வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 14. தன்னந் தனியா யிங்குநிற்குஞ் சாமி யிவரூ ரொற்றியதா
    மன்னந் தருவீ ரென்றார்நா னழைத்தே னின்னை யன்னமிட
    முன்னம் பசிபோ யிற்றென்றார் முன்னின் றகன்றே னிவ்வன்ன
    மின்னந் தருவா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 15. மாறா வழகோ டிங்குநிற்கும் வள்ள லிவரூ ரொற்றியதாம்
    வீறா முணவீ யென்றார்நீர் மேவா வுணவிங் குண்டென்றேன்
    கூறா மகிழ்வே கொடுவென்றார் கொடுத்தா லிதுதா னன்றென்றே
    யேறா வழக்குத் தொடுக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 16. வண்மை யுடையார் திருவொற்றி வாண ரிவர்தாம் பலியென்றா
    ருண்மை யறிவீர் பலியெண்மை யுணர்கி லீரென் னுழையென்றேன்
    பெண்மை சிறந்தாய் நின்மனையிற் பேசும் பலிக்கென் றடைந்ததுநா
    மெண்மை யுணர்ந்தே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 17. திருவை யளிக்குந் திருவொற்றித் தேவ ரீர்க்கென் விழைவென்றேன்
    வெருவ லுனது பெயரிடையோர் மெய்நீக் கியநின் முகமென்றார்
    தருவ லதனை வெளிப்படையாற் சாற்று மென்றேன் சாற்றுவனே
    லிருவை மடவா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 18. முந்தை மறையோன் புகழொற்றி முதல்வ ரிவர்தம் முகநோக்கிக்
    கந்தை யுடையீ ரென்னென்றேன் கழியா வுன்றன் மொழியாலே
    யிந்து முகத்தா யெமக்கொன்றே யிருநான் குனக்குக் கந்தையுள
    திந்த வியப்பென் னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 19. துன்ன லுடையா ரிவர்தமைநீர் துன்னும் பதிதான் யாதென்றே
    னென்ன லிரவி லெமைத்தெளிவா னின்ற நினது பெயரென்றா
    ருன்ன லுறுவீர் வெளிப்படவீ துரைப்பீ ரென்றே னுரைப்பேனே
    லின்ன லடைவா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 20. சிமைக்கொள் சூலத் திருமலர்க்கைத் தேவர் நீரெங் கிருந்ததென்றே
    னெமைக்கண் டளவின் மாதேநீ யிருந்த தெனயா மிருந்ததென்றா
    ரமைக்கு மொழியிங் கிதமென்றே னாமுன் மொழியிங் கிதமன்றோ
    விமைக்கு மிழையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 21. நடங்கொள் பதத்தீர் திருவொற்றி நங்கள் பெருமா னீரன்றோ
    திடங்கொள் புகழ்க்கச் சூரிடஞ்சேர்ந் தீரென் றேனின் னடுநோக்காக்
    குடஞ்சேர்ந் ததுமாங் கஃதென்றார் குடம்யா தென்றே னஃதறிதற்
    கிடங்கர் நடுநீக் கென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 22. சங்க மருவு மொற்றியுளீர் சடைமே லிருந்த தென்னென்றேன்
    மங்கை நினது முன்பருவ மருவு முதனீத் திருந்ததென்றார்
    கங்கை யிருந்த தேயென்றேன் கமலை யனையாய் கழுக்கடையு
    மெங்கை யிருந்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 23. துதிசே ரொற்றி வளர்தரும துரையே நீர்முன் னாடலுறும்
    பதியா தென்றே னம்பெயர்முற் பகரீ ரெழுத்தைப் பறித்ததென்றார்
    நிதிசேர்ந் திடுமப் பெயர்யாது நிகழ்த்து மென்றே னீயிட்ட
    தெதுவோ வதுகா ணென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 24. உடற்கச் சுயிரா மொற்றியுளீ ருமது திருப்பேர் யாதென்றேன்
    குடக்குச் சிவந்த பொழுதினைமுன் கொண்ட வண்ண ராமென்றார்
    விடைக்குக் கருத்தா வாநீர்தாம் விளம்பன் மிகக்கற் றவரென்றே
    னிடக்குப் புகன்றா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 25. மணங்கே தகைவான் செயுமொற்றி வள்ளலிவரை வல்விரைவேன்
    பிணங்கேஞ் சிறிது நில்லுமென்றேன் பிணங்கா விடினு நென்னலென
    வணங்கே நினக்கொன் றினிற்பாதி யதிலோர் பாதி யாகுமிதற்
    கிணங்கேஞ் சிறிது மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 26. ஒற்றி நகரா ரிவர்தமைநீ ருவந்தே றுவதிங்கி யாதென்றேன்
    மற்றுன் பருவத் தொருபங்கே மடவா யென்றார் மறைவிடையீ
    திற்றென் றறிதற் கரிதென்றே னெம்மை யறிவா ரன்றியஃ
    தெற்றென் றறிவா ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 27. கண்ணின் மணிபோ லிங்குநிற்குங் கள்வ ரிவரூ ரொற்றியதாம்
    பண்ணின் மொழியாய் நின்பாலோர் பறவைப் பெயர்வேண் டினம்படைத்தான்
    மண்ணின் மிசையோர் பறவையதா வாழ்வாயென்றா ரென்னென்றே
    னெண்ணி யறிநீ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 28. சேடார் வளஞ்சூ ழொற்றிநகர் செல்வப் பெருமா னிவர்தமைநா
    னோடார் கரத்தீ ரெண்டோள்க ளுடையீ ரென்னென் றுரைத்தேனீ
    கோடா கோடி முகநூறு கோடா கோடிக் களமென்னே
    யீடா யுடையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 29. துருமஞ் செழிக்கும் பொழிலொற்றித் தோன்றா லிங்கு நீர்வந்த
    கருமஞ் சொலுமென் றேனிவண்யாங் கடாதற் குன்பா லெம்முடைமைத்
    தருமம் பெறக்கண் டாமென்றார் தருவ லிருந்தா லென்றேனில்
    லிருமந் தரமோ வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 30. ஒருகை முகத்தோர்க் கையரெனு மொற்றித் தேவ ரிவர்தமைநான்
    வருகை யுவந்தீ ரென்றனைநீர் மருவி யணைதல் வேண்டுமென்றேன்
    றருகை யுடனே யகங்காரந் தனையெம் மடியார் தமைமயக்கை
    யிருகை வளைசிந் தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 31. திருத்த மிகுஞ்சீ ரொற்றியில்வாழ் தேவ ரேயிங் கெதுவேண்டி
    வருத்த மலர்க்கா லுறநடந்து வந்தீ ரென்றேன் மாதேநீ
    யருத்தந் தெளிந்தே நிருவாண மாகவுன்ற னகத்தருட்க
    ணிருத்த வடைந்தே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 32. வளஞ்சே ரொற்றி மாணிக்க வண்ண ராகு மிவர்தமைநான்
    குளஞ்சேர்ந் திருந்த துமக்கொருகண் கோலச் சடையீ ரழகிதென்றேன்
    களஞ்சேர் குளத்தி னெழின்முலைக்கண் காண வோரைந் துனக்கழகீ
    திளஞ்சேல் விழியா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 33. பலஞ்சே ரொற்றிப் பதியுடையீர் பதிவே றுண்டோ நுமக்கென்றே
    னுலஞ்சேர் வெண்பொன் மலையென்றா ருண்டோ நீண்டமலையென்றேன்
    வலஞ்சே ரிடைத்தவ் வருவித்த மலைகா ணதனின் மம்முதல்சென்
    றிலஞ்சேர்ந் ததுவு மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 34. வயலா ரொற்றி வாணரிவர் வந்தார் நின்றார் வாய்திறவார்
    செயலார் விரல்கண் முடக்கியடி சேர்த்தீ ரிதழ்கள் விரிவித்தார்
    மயலா ருளத்தோ டென்னென்றேன் மறித்தோர் விரலா லென்னுடைய
    வியலார் வடிவிற் சுட்டுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 35. பேர்வா ழொற்றி வாணரிவர் பேசா மௌன யோகியராய்ச்
    சீர்வாழ் நமது மனையினிடைச் சேர்ந்தார் விழைவென் செப்புமென்றே
    னோர்வா ழடியுங் குழலணியு மொருநல் விரலாற் சுட்டியுந்தம்
    மேர்வா ழொருகை பார்க்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 36. பெருஞ்சீ ரொற்றி வாணரிவர் பேசா மௌனம் பிடித்திங்கே
    விரிஞ்சீர் தரநின் றுடன்கீழு மேலு நோக்கி விரைந்தார்யான்
    வருஞ்சீ ருடையீர் மணிவார்த்தை வகுக்க வென்றேன் மார்பிடைக்கா
    ழிருஞ்சீர் மணியைக் காட்டுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 37. வலந்தங் கியசீ ரொற்றிநகர் வள்ள லிவர்தாம் மௌனமொடு
    கலந்திங் கிருந்த வண்டசத்தைக் காட்டி மூன்று விரனீட்டி
    நலந்தங் குறப்பின் னடுமுடக்கி நண்ணு மிந்த நகத்தொடுவா
    யிலந்தங் கரத்தாற் குறிக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 38. தேனார் பொழிலா ரொற்றியில்வாழ் தேவ ரிவர்வாய் திறவாராய்
    மானார் கரத்தோர் நகந்தெரித்து வாளா நின்றார் நீளார்வந்
    தானா ருளத்தோ டியாதென்றேன் றங்கைத் தலத்திற் றலையையடி
    யேனா டுறவே காட்டுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 39. செச்சை யழகர் திருவொற்றித் தேவ ரிவர்வாய் திறவாராய்
    மெச்சு மொருகாற் கரந்தொட்டு மீண்டு மிடற்றக் கரம்வைத்தார்
    பிச்ச ரடிகேள் வேண்டுவது பேசீ ரென்றேன் றமைக்காட்டி
    யிச்சை யெனையுங் குறிக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 40. மன்றார் நிலையார் திருவொற்றி வாண ரிவர்தா மௌனமொடு
    நின்றா ரிருகை யொலியிசைத்தார் நிமிர்ந்தார் தவிசி னிலைகுறைத்தார்
    நன்றா ரமுது சிறிதுமிழ்ந்தார் நடித்தா ரியாவு மையமென்றே
    னின்றா மரைக்கை யேந்துகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 41. வாரா விருந்தாய் வள்ளலிவர் வந்தார் மௌன மொடுநின்றார்
    நீரா ரெங்கே யிருப்பதென்றே னீண்ட சடையைக் குறிப்பித்தா
    ரூரா வைத்த தெதுவென்றே னொண்கை யோடென் னிடத்தினில்வைத்
    தேரார் கரத்தாற் சுட்டுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 42. செங்கேழ் கங்கைச் சடையார்வாய் திறவா ராக வீண்டடைந்தா
    ரெங்கே யிருந்தெங் கணைந்ததுகா ணெங்கள் பெருமா னென்றேனென்
    னங்கே ழருகி னகன்றுபோ யங்கே யிறைப்போ தமர்ந்தெழுந்தே
    யிங்கே நடந்து வருகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 43. கொடையா ரொற்றி வாணரிவர் கூறா மௌன ராகிநின்றார்
    தொடையா ரிதழி மதிச்சடையென் துரையே விழைவே துமக்கென்றே
    னுடையார் துன்னற் கந்தைதனை யுற்று நோக்கி நகைசெய்தே
    யிடையாக் கழுமுட் காட்டுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 44. பொன்னைக் கொடுத்தும் புணர்வரிய புனித ரிவரூ ரொற்றியதா
    முன்னைத் தவத்தா லியாங்காண முன்னே நின்றார் முகமலர்ந்து
    மின்னிற் பொலியுஞ் சடையீரென் வேண்டு மென்றே னுணச்செய்யா
    ளின்னச் சினங்கா ணென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 45. வயலார் சோலை யெழிலொற்றி வாண ராகு மிவர்தமைநான்
    செயலா ரடியர்க் கருள்வீர்நுஞ் சிரத்து முரத்துந் திகழ்கரத்தும்
    வியலாய்க் கொண்ட தென்னென்றேன் விளங்கும் பிநாக மவைமூன்று
    மியலாற் காண்டி யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 46. பொதுநின் றருள்வீ ரொற்றியுளீர் பூவுந் தியதென் விழியென்றே
    னிதுவென் றறிநா மேறுகின்ற தென்றா ரேறு கின்றதுதா
    னெதுவென் றுரைத்தே னெதுநடுவோ ரெழுத்திட் டறிநீ யென்றுசொலி
    யெதிர்நின் றுவந்து நகைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 47. இட்டங் களித்த தொற்றியுளீ ரீண்டிவ் வேளை யெவனென்றேன்
    சுட்டுஞ் சுதனே யென்றார்நான் சுட்டி யறியச் சொலுமென்றேன்
    பட்டுண் மருங்குற் பாவாய்நீ பரித்த தன்றே பாரென்றே
    யெட்டுங் களிப்பா லுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 48. பாற்றக் கணத்தா ரிவர்காட்டு ப் பள்ளித் தலைவ ரொற்றியினின்
    றாற்றப் பசித்து வந்தாரா மன்ன மிடுமி னென்றுரைத்தேன்
    சோற்றுக் கிளைத்தோ மாயினும்யாஞ் சொல்லுக் கிளையேங் கீழ்ப்பள்ளி
    யேற்றுக் கிடந்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 49. குருகா ரொற்றி வாணர்பலி கொள்ள வகையுண் டோவென்றே
    னொருகா லெடுத்தீண் டுரையென்றா ரொருகா லெடுத்துக்காட்டுமென்றேன்
    வருகா விரிப்பொன் னம்பலத்தே வந்தாற் காட்டு கின்றாம்வீ
    ழிருகா லுடையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 50. வேலை ஞாலம் புகழொற்றி விளங்குந் தேவ ரணிகின்ற
    மாலை யாதென் றேனயன்மான் மாலை யகற்று மாலையென்றார்
    சோலை மலரன் றேயென்றேன் சோலை யேநாந் தொடுப்பதென
    வேல முறுவல் புரிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 51. உயிரு ளுறைவீர் திருவொற்றி யுடையீர் நீரென் மேற்பிடித்த
    வயிர மதனை விடுமென்றேன் வயிரி யலநீ மாதேயாஞ்
    செயிர தகற்றுன் முலையிடங்கொள் செல்வ னலகாண் டெளியென்றே
    யியல்கொண் முறுவல் புரிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 52. தண்கா வளஞ்சூழ் திருவொற்றித் தலத்தி லமர்ந்த சாமிநுங்கை
    யெண்கார் முகமாப் பொன் னென்றே னிடையிட் டறித லரிதென்றார்
    மண்கா தலிக்கு மாடென்றேன் மதிக்குங் கணைவி லன்றென்றே
    யெண்கா ணகைசெய் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 53. செய்காண் வளஞ்சூ ழொற்றியுளீர் திருமான் முதன்முத் தேவர்கட்கு
    மைகாணீரென் றேனிதன்மே லணங்கே நீயே ழடைதி யென்றார்
    மெய்கா ணதுதா னென்னென்றேன் விளங்குஞ் சுட்டுப் பெயரென்றே
    யெய்கா ணுறவே நகைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 54. விண்டு வணங்கு மொற்றியுளீர் மென்பூ விருந்தும் வன்பூவில்
    வண்டு விழுந்த தென்றேனெம் மலர்க்கை வண்டும் விழுந்ததென்றார்
    தொண்டர்க் கருள்வீர் மிகவென்றேன் றோகாய் நாமே தொண்டனென
    வெண்டங் குறவே நகைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 55. மட்டார் மலர்க்கா வொற்றியுளீர் மதிக்குங் கலைமேல் விழுமென்றே
    னெட்டா மெழுத்தை யெடுத்ததுநா மிசைத்தே மென்றா ரெட்டாக
    வுட்டா வுறுமவ் வெழுத்தறிய வுரைப்பீ ரென்றே னந்தணரூர்க்
    கிட்டார் நாம மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 56. ஒற்றி நகரீர் மனவசிதா னுடையார்க் கருள்வீர் நீரென்றேன்
    பற்றி யிறுதி தொடங்கியது பயிலு மவர்க்கே யருள்வதென்றார்
    மற்றி துணர்கி லேனென்றேன் வருந்தே லுள்ள வன்மையெலா
    மெற்றி லுணர்தி யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 57. வான்றோய் பொழில்சூ ழொற்றியுளீர் வருந்தா தணைவே னோவென்றே
    னூன்றோ யுடற்கென் றார்தெரிய வுரைப்பீ ரென்றே னோவிதுதான்
    சான்றோ ருமது மரபோர்ந்து தரித்த பெயர்க்குத் தகாதென்றே
    யேன்றோர் மொழிதந் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 58. தீது தவிர்க்கு மொற்றியுளீர் செல்ல லறுப்ப தென்றென்றே
    னீது நமக்குத் தெரிந்ததென்றா ரிறையா மோவிங் கிதுவென்றே
    னோது மடியார் மனக்கங்கு லோட்டு நாமே யுணரன்றி
    யேது மிறையன் றென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 59. ஒண்கை மழுவோ டனலுடையீ ரொற்றி நகர்வா ழுத்தமர்நீர்
    வண்கை யொருமை நாதரென்றேன் வண்கைப் பன்மை நாதரென்றா
    ரெண்கணடங்கா வதிசயங்கா ணென்றேன் பொருளன் றிவையதற்கென்
    றெண்சொன் மணிதந் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 60. ஒருவ ரெனவா ழொற்றியுளீ ருமக்கம் மனையுண் டோவென்றே
    னிருவ ரொருபே ருடையவர்கா ணென்றா ரென்னென்றே னெம்பேர்
    மருவு மீறற் றயலகரம் வயங்கு மிகர மானதென்றே
    யிருவு மொழிதந் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 61. பேரா ரொற்றி யீரும்பைப் பெற்றா ரெவரென் றேனவர்தம்
    மேரார் பெயரின் முன்பினிரண் டிரண்டா மெழுத்தா ரென்றாரென்
    னேரா யுரைப்பீ ரென்றேனீ நெஞ்ச நெகிழ்ந்தா லுரைப்பாமென்
    றேரா யுரைசெய் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 62. தளிநான் மறையீ ரொற்றிநகர் தழைக்க வாழ்வீர் தனிஞான
    வொளி நா வரசை யைந்தெழுத்தா லுவரி கடத்தி னீரென்றேன்
    களிநா வலனை யீரெழுத்தாற் கடலின் வீழ்த்தி னேமென்றே
    யெளியேற் குவப்பின் மொழிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 63. ஓமூன் றுளத்தீ ரொற்றியுளீ ருற்றோர்க் களிப்பீ ரோவென்றேன்
    றாமூன் றென்பார்க் கயன்மூன்றுந் தருவே மென்றா ரம்மமிகத்
    தேமூன் றினநும் மொழியென்றேன் செவ்வா யுறுமுன் னகையென்றே
    யேமூன் றுறவே நகைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 64. மன்னி விளங்கு மொற்றியுளீர் மடவா ரிரக்கும் வகையதுதான்
    முன்னி லொருதா வாமென்றேன் முத்தா வெனலே முறையென்றா
    ரென்னி லிதுதா னையமென்றே னெமக்குந் தெரியு மெனத்திருவா
    யின்ன லமுத முகுக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 65. வளஞ்சே ரொற்றி யீரெனக்கு மாலை யணிவீ ரோவென்றேன்
    குளஞ்சேர் மொழிப்பெண் பாவாய்நின் கோலமனைக்க ணாமகிழ்வா
    லுளஞ்சேர்ந் தடைந்த போதேநின் னுளத்தி லணிந்தே முணரென்றே
    யிளஞ்சீர் நகைசெய் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 66. வீற்றா ரொற்றி நகரமர்ந்தீர் விளங்கு மலரே விளம்புநெடு
    மாற்றா ரென்றே னிலைகாணெம் மாலை முடிமேற் பாரென்றார்
    சாற்றாச் சலமே யீதென்றேன் சடையின் முடிமே லன்றென்றே
    யேற்றா தரவான் மொழிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 67. புயப்பா லொற்றி யீரச்சம் போமோ வென்றே னாமென்றார்
    வயப்பா வலருக் கிறையானீர் வஞ்சிப் பாவிங் குரைத்ததென்றேன்
    வியப்பா நகையப் பாவெனும்பா வெண்பா கலிப்பா வுரைத்துமென்றே
    யியற்பான் மொழிதந் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 68. தண்ணம் பொழில்சூ ழொற்றியுளீர் சங்கங் கையிற்சேர்த் திடுமென்றேன்
    றிண்ணம் பலமேல் வருங்கையிற் சேர்த்தோ முன்னர் தெரியென்றார்
    வண்ணம் பலவிம் மொழிக்கென்றேன் மடவா யுனது மொழிக்கென்றே
    யெண்ணங் கொளநின் றுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 69. உகஞ்சே ரொற்றி யூருடையீ ரொருமா தவரோ நீரென்றேன்
    முகஞ்சேர் வடிவே லிரண்டுடையாய் மும்மா தவர்நா மென்றுரைத்தார்
    சுகஞ்சேர்ந் திடுநும் மொழிக்கென்றேன் றோகா யுனது மொழிக்கென்றே
    யிகஞ்சேர் நயப்பா லுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 70. ஊரா மொற்றி யீராசை யுடையே னென்றே னெமக்கலது
    நேரா வழக்குத் தொடுக்கின்றாய் நினக்கே தென்றார் நீரெனக்குச்
    சேரா வணமீ தென்றேன்முன் சேர்த்தீ தெழுதித் தந்தவர்தாம்
    யாரார் மடவா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 71. வருத்தந் தவிரீ ரொற்றியுளீர் மனத்தி லகாத முண்டென்றே
    னிருத்தந் தொழுநம் மடியவரை நினைக்கின் றோரைக் காணினது
    வுருத்தன் பெயர்முன் னெழுத்திலக்க முற்றே மற்ற வெல்லையகன்
    றிருத்த லறியா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 72. மைய லகற்றீ ரொற்றியுளீர் வாவென் றுரைப்பீ ரோவென்றேன்
    செய்ய வதன்மேற் சிகரம்வைத்துச் செவ்வ னுரைத்தா லிருவாவென்
    றுய்ய வுரைப்பே மென்றார்நும் முரையென் னுரையென் றேனிங்கே
    யெய்யுன் னுரையை யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 73. தாவென் றருளு மொற்றியுளீர் தமியேன் மோக தாகமற
    வாவென் றருள்வீ ரென்றேனவ் வாவின் பின்னர் வருமெழுத்தை
    மேவென் றதனிற் சேர்த்ததிங்கே மேவி னன்றோ வாவென்பே
    னேவென் றிடுகண் ணென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 74. என்மே லருள்கூர்ந் தொற்றியுளீ ரென்னை யணைவா னினைவீரேற்
    பொன்மேல் வெள்ளி யாமென்றேன் பொன்மேற் பச்சை யாங்கதன்மே
    லன்மேற் குழலாய் சேயதன்மே லலவ னதன்மேன் ஞாயிறஃ
    தின்மே லொன்றின் றென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 75. வயலா ரொற்றி மேவுபிடி வாதர் நாம மியாதென்றேன்
    மயலா யிடுமிப் பெயர்ப்பின்னர் வந்த விளைய நாமமென்றார்
    செயலார் கால மறிந்தென்னைச் சேர்வீ ரென்றேன் சிரித்துனக்கிங்
    கியலா ரயலா ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 76. நாலா ரணஞ்சூ ழொற்றியுளீர் நாகம் வாங்க லென்னென்றேன்
    காலாங் கிரண்டிற் கட்டவென்றார் கலைத்தோல் வல்லீர் நீரென்றேன்
    வேலார் விழிமாப் புலித்தோலும் வேழத் தோலும் வல்லேமென்
    றேலா வமுத முகுக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 77. முடியா வளஞ்சூ ழொற்றியுளீர் முடிமே லிருந்த தென்னென்றேன்
    கடியா வுள்ளங் கையின்முதலைக் கடிந்த தென்றார் கமலமென
    வடிவார் கரத்தி லென்னென்றேன் வரைந்த வதனீ றகன்றதென்றே
    யிடியா நயத்தி னகைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 78. ஒன்றும் பெருஞ்சீ ரொற்றிநக ருடையீர் யார்க்கு முணர்வரியீ
    ரென்றும் பெரியீர் நீர்வருதற் கென்ன நிமித்த மென்றேன்யான்
    றுன்றும் விசும்பே காணென்றார் சூதா முமது சொல்லென்றே
    னின்றுன் முலைதா னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 79. வானார் வணங்கு மொற்றியுளீர் மதிவாழ் சடையீர் மரபிடைநீர்
    தானா ரென்றே னனிப்பள்ளித் தலைவ ரெனவே சாற்றினர்கா
    ணானா லொற்றி யிருமென்றே னாண்டே யிருந்து வந்தனஞ்சே
    யீனா தவ­ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 80. பற்று முடித்தோர் புகழொற்றிப் பதியீர் நுமது பசுவினிடைக்
    கற்று முடித்த தென்னிருகைக் கன்று முழுதுங் காணென்றேன்
    மற்று முடித்த மாலையொடுன் மருங்குற் கலையுங் கற்றுமுடிந்
    திற்று முடித்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 81. வானங் கொடுப்பீர் திருவொற்றி வாழ்வீ ரன்று வந்தெனது
    மானங் கெடுத்தீ ரென்றுரைத்தேன் மாநன் றிஃதுன் மானன்றே
    யூனங் கலிக்குந் தவர்விட்டா ருலக மறியுங் கேட்டறிந்தே
    யீனந் தவிர்ப்பா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 82. ஞானம் படைத்த யோகியர்வாழ் நகரா மொற்றி நலத்தீர்மா
    லேனம் புடைத்தீ ரணையென்பீ ரென்னை யுவந்திப் பொழுதென்றே
    னூனந் தவிர்த்த மலர்வாயி னுள்ளே நகைசெய் திஃதுரைக்கே
    மீனம் புகன்றா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 83. கருமை யளவும் பொழிலொற்றிக் கணத்தீர் முனிவர் கலக்கமறப்
    பெருமை நடத்தி னீரென்றேன் பிள்ளை நடத்தி னானென்றார்
    தரும மலவிவ் விடையென்றேன் றரும விடையு முண்டென்பா
    லிருமை விழியா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 84. ஒசிய விடுகு மிடையாரை யொற்றி யிருந்தே மயக்குகின்ற
    வசியர் மிகநீ ரென்றேனெம் மகன்கா ணென்றார் வளர்காமப்
    பசிய தொடையுற் றேனென்றேன் பட்ட மவிழ்த்துக் காட்டுதியே
    லிசையக் காண்பே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 85. கலையா ளுடையீ ரொற்றிநின்றீர் காம மளித்தீர் களித்தணைவீர்
    மலையா ளுமது மனையென்றேன் மருவின் மலையா ளல்லளென்றா
    ரலையாண் மற்றை யவளென்றே னறியி னலையா ளல்லளுனை
    யிலையா மணைவ தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 86. சீலம் படைத்தீர் திருவொற்றித் தியாக ரேநீர் திண்மையிலோர்
    சூலம் படைத்தீ ரென்னென்றேன் றோன்று முலகுய்ந் திடவென்றா
    ராலங் களத்தீ ரென்றேனீ யாலம் வயிற்றா யன்றோநல்
    லேலங் குழலா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 87. ஞால நிகழும் புகழொற்றி நடத்தீர் நீர்தா னாட்டமுறும்
    பால ரலவோ வென்றேனைம் பாலர் பாலைப் பருவத்திற்
    சால மயல்கொண் டிடவருமோர் தனிமைப் பால ரியாமென்றே
    யேல முறுவல் புரிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 88. வண்மை தருவீ ரொற்றிநகர் வாழ்வீ ரென்னை மருவீரென்
    னுண்மை யறியீ ரென்றேன்யா முணர்ந்தே யகல நின்றதென்றார்
    கண்மை யிலரோ நீரென்றேன் களமை யுடையேங் கண்மையுற
    லெண்மை நீயே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 89. தவந்தங் கியசீ ரொற்றிநகர் தனைப்போ னினைத்தென் மனையடைந்தீ
    ருவந்தென் மீதிற் றேவர்திரு வுள்ளந் திரும்பிற் றோவென்றேன்
    சிவந்தங் கிடநின் னுள்ளமெம்மேற் றிரும்பிற் றதனைத் தேர்ந்தன்றே
    யிவர்ந்திங் கணைந்தா மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 90. ஒன்னார் புரமூன் றெரிசெய்தீ ரொற்றி யுடையீ ரும்முடைய
    பொன்னார் சடைமேல் வெள்ளெருக்கம் பூவை மிலைந்தீ ரென்னென்றே
    னின்னா ரளகத் தணங்கேநீ நெட்டி மிலைந்தா யிதிலதுகீ
    ழென்னா ருலக ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 91. கனிமா னிதழி முலைச்சுவடு களித்தீ ரொற்றிக் காதலர்நீர்
    தனிமா னேந்தி யாமென்றேன் றடங்கண் மடந்தாய் நின்முகமும்
    பனிமா னேந்தி யாமென்றார் பரைமான் மருவி னீரென்றே
    னினிமான் மருவி யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 92. சிறியேன் றவமோ வெனைப்பெற்றார் செய்த தவமோ வீண்டடைந்தீ
    ரறியே னொற்றி யடிகேளிங் கடைந்த வாறென் னினைத்தென்றேன்
    பொறிநே ருனது பொற்கலையைப் பூவார் கலையாக் குறநினைத்தே
    யெறிவேல் விழியா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 93. அளிக்குங் குணத்தீர் திருவொற்றி யழக ரேநீ ரணிவேணி
    வெளிக்கொண் முடிமே லணிந்ததுதான் விளியா விளம்பத் திரமென்றேன்
    விளிக்கு மிளம்பத் திரமுமுடி மேலே மிலைந்தாம் விளங்கிழைநீ
    யெளிக்கொண் டுரையே லென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 94. வாசங் கமழு மலர்ப்பூங்கா வனஞ்சூ ழொற்றி மாநகரீர்
    நேசங் குறிப்ப தென்னென்றே னீயோ நாமோ வுரையென்றார்
    தேசம் புகழ்வீர் யானென்றேன் றிகழ்தைத் திரிதித் திரியேயா
    மேசங் குறிப்ப தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 95. பேசுங் கமலப் பெண்புகழும் பெண்மை யுடைய பெண்களெலாங்
    கூசும் படியிப் படியொற்றிக் கோவே வந்த தென்னென்றேன்
    மாசுந் தரிநீ யிப்படிக்கு மயங்கும் படிக்கு மாதருனை
    யேசும் படிக்கு மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 96. கொடியா லெயில்சூ ழொற்றியிடங் கொண்டீ ரடிகள் குருவுருவாம்
    படியா லடியி லிருந்தமறைப் பண்பை யுரைப்பீ ரென்றேனின்
    மடியா லடியி லிருந்தமறை மாண்பை வகுத்தா யெனிலதுநா
    மிடியா துரைப்பே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 97. என்னே ருளத்தி னமர்ந்தீர்நல் லெழிலா ரொற்றி யிடையிருந்தீ
    ரென்னே யடிகள் பலியேற்ற லேழ்மை யுடையீர் போலுமென்றே
    னின்னே கடலி னிடைநீபத் தேழ்மை யுடையாய் போலுமென
    வின்னே யங்கொண் டுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 98. நல்லார் மதிக்கு மொற்றியுளீர் நண்ணு முயிர்க டொறுநின்றீ
    ரெல்லா மறிவீ ரென்னுடைய விச்சை யறியீர் போலுமென்றேன்
    வல்லா யறிவின் மட்டொன்று மனமட் டொன்று வாய்மட்டொன்
    றெல்லா மறிந்தே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 99. மறிநீர்ச் சடையீர் சித்தெல்லாம் வல்லீ ரொற்றி மாநகரீர்
    பொறிசே ருமது புகழ்பலவிற் பொருந்துங் குணமே வேண்டுமென்றேன்
    குறிநே ரெமது விற்குணத்தின் குணத்தா யதனால் வேண்டுற்றா
    யெறிவேல் விழியா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 100. ஊரூ ரிருப்பீ ரொற்றிவைத்தீ ரூர்தான் வேறுண் டோவென்றே
    னோரூர் வழக்கிற் கரியையிறை யுன்னி வினவு மூரொன்றோ
    பேரூர் தினையூர் பெரும்புலியூர் பிடவூர் கடவூர் முதலாக
    வேரூ ரனந்த மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 101. விழியொண் ணுதலீ ரொற்றியுளீர் வேதம் பிறவி யிலரென்றே
    மொழியு நுமைத்தான் வேயீன்ற முத்த ரெனலிங் கென்னென்றேன்
    பழியன் றணங்கே யவ்வேய்க்குப் படுமுத் தொருவித் தன்றதனா
    லிழியும் பிறப்போ வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 102. விண்ணார் பொழில்சூ ழொற்றியுளீர் விளங்குந் தாம மிகுவாசத்
    தண்ணார் மலர்வே தனையொழிக்கத் தருதல் வேண்டு மெனக்கென்றேன்
    பண்ணார் மொழியா யுபகாரம் பண்ணாப் பகைவ ரேனுமிதை
    யெண்ணா ரெண்ணா ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 103. செம்பான் மொழியார் முன்னரெனைச் சேர்வீரென்கோ திருவொற்றி
    யம்பார் சடையீ ருமதாட லறியே னருளல் வேண்டுமென்றேன்
    வம்பார் முலையாய் காட்டுகின்றா மன்னும் பொன்னா ரம்பலத்தே
    யெம்பால் வாவென் றுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 104. மைக்கொண் மிடற்றீ ரூரொற்றி வைத்தீ ருண்டோ மனையென்றேன்
    கைக்க ணிறைந்த தனத்தினுந்தந் கண்ணி னிறைந்த கணவனையே
    துய்க்கு மடவார் விழைவரெனச் சொல்லும் வழக்கீ தறிந்திலையோ
    வெய்க்கு மிடையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 105. ஆறு முகத்தார் தமையீன்ற வைந்து முகத்தா ரிவர்தமைநான்
    மாறு முகத்தார் போலொற்றி வைத்தீர் பதியை யென்னென்றே
    னாறு மலர்ப்பூங் குழனீயோ நாமோ வைத்த துன்மொழிமன்
    றேறு மொழியன் றென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 106. வள்ளன் மதியோர் புகழொற்றி வள்ளா லுமது மணிச்சடையின்
    வெள்ள மகண்மேற் பிள்ளைமதி விளங்க லழகீ தென்றேனின்
    னுள்ள முகத்தும் பிள்ளைமதி யொளிகொண் முகத்தும் பிள்ளைமதி
    யெள்ள லுடையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 107. உள்ளத் தனையே போலன்ப ருவக்குந் திருவா ழொற்றியுளீர்
    கள்ளத் தவர்போ லிவணிற்குங் கரும மென்னீ ரின்றென்றேன்
    மெள்ளக் கரவு செயவோநாம் வேட மெடுத்தோ நின்சொனினை
    யெள்ளப் புரிந்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 108. அச்சை யடுக்குந் திருவொற்றி யவர்க்கோர் பிச்சை கொடுமென்றேன்
    விச்சை யடுக்கும் படிநம்பான் மேவினோர்க்கிவ் வகில நடைப்
    பிச்சை யெடுப்பே மலதுன்போற் பிச்சை கொடுப்பே மலவென்றே
    யிச்சை யெடுப்பா யுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 109. அள்ளற் பழனத் திருவொற்றி யழக ரிவர்தம் முகநோக்கி
    வெள்ளச் சடையீ ருள்ளத்தே விருப்பே துரைத்தாற் றருவலென்றேன்
    கொள்ளக் கிடையா வலர்குமுதங் கொண்ட வமுதங் கொணர்ந்தின்னு
    மெள்ளத் தனைதா வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 110. விஞ்சு நெறியீ ரொற்றியுளீர் வியந்தீர் வியப்பென் னிவணென்றேன்
    கஞ்ச மிரண்டு நமையங்கே கண்டு குவிந்த விரிந்திங்கே
    வஞ்ச விருதா மரைமுகையை மறைக்கின் றனநின் பால்வியந்தா
    மெஞ்ச லறநா மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 111. அளியா ரொற்றி யுடையாருக் கன்ன நிரம்ப விடுமென்றே
    னளியார் குழலாய் பிடியன்ன மளித்தாற் போது மாங்கதுநின்
    னொளியார் சிலம்பு சூழ்கமலத் துளதாற் கடகஞ் சூழ்கமலத்
    தெளியார்க் கிடுநீ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 112. விச்சைப் பெருமா னெனுமொற்றி விடங்கப் பெருமா னீர்முன்னம்
    பிச்சைப் பெருமா னின்றுமணப் பிள்ளைப் பெருமா னாமென்றே
    னச்சைப் பெறுநீ யம்மணப்பெண் ணாகி யிடையி லையங்கொள்
    ளிச்சைப் பெரும்பெண் ணென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 113. படையம் புயத்தோன் புகழொற்றிப் பதியீ ரரவப் பணிசுமந்தீர்
    புடையம் புயத்தி லென்றேன்செம் பொன்னே கொடையம் புயத்தினுநன்
    னடையம் புயத்துஞ் சுமந்தனைநீ நானா வரவப் பணிமற்று
    மிடையம் பகத்து மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 114. கூம்பா வொற்றி யூருடையீர் கொடும்பாம் பணிந்தீ ரென்னென்றே
    னோம்பா துரைக்கிற் பார்த்திடினுள் ளுன்னில் விடமேற் றுன்னிடைக்கீழ்ப்
    பாம்பா வதுவே கொடும்பாம்பெம் பணிப்பாம் பதுபோற் பாம்பலவென்
    றேம்பா நிற்ப விசைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 115. புயல்சூ ழொற்றி யுடையீரென் புடையென் குறித்தோ போந்ததென்றேன்
    கயல்சூழ் விழியாய் தனத்தவரைக் காண லிரப்போ ரெதற்கென்றார்
    மயல்சூழ் தனமிங் கிலையென்றேன் மறையா தெதிர்வைத் திலையென்ற
    லியல்சூ ழறமன் றென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 116. நடவாழ் வொற்றி யுடையீர்நீர் நாக மணிந்த தழகென்றேன்
    மடவா யதுநீர் நாகமென மதியே லயன்மான் மனனடுங்க
    விடவா யுமிழும் படநாகம் வேண்டிற்காண்டி யென்றேயென்
    னிடவா யருகே வருகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 117. கோடா வொற்றி யுடையீர்நுங் குலந்தான் யாதோ கூறுமென்றேன்
    வீடார் பிரம குலந்தேவர் வேந்தர் குலநல் வினைவசியப்
    பாடார் குலமோர் சக்கரத்தான் பள்ளிக் குலமெல் லாமுடையே
    மேடார் குழலா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 118. நலமா மொற்றி யுடையீர்நீர் நல்ல வழக ரானாலுங்
    குலமே துமக்கு மாலையிடக் கூடா தென்றே னின்குலம்போ
    லுலகோ துறுநங் குலமொன்றோ வோரா யிரத்தெட் டுயர்குலமிங்
    கிலகா நின்ற தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 119. மதிலொற் றியினீர் நும்மனையாண் மலையின் குலநும் மைந்தருளோர்
    புதல்வர்க் கானைப் பெருங்குலமோர் புதல்வர்க் கிசையம் புலிக்குலமா
    மெதிரற் றருள்வீர் நுங்குலமிங் கெதுவோ வென்றேன் மனைவியருள்
    ளிதுமற் றொருத்திக் கென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 120. தேமாம் பொழில்சூ ழொற்றியுளீர் திகழுந் தகரக் காற்குலத்தைப்
    பூமா னிலத்தில் விழைந்துற்றீர் புதுமை யிஃதும் புகழென்றே
    னாமா குலத்தி லரைக்குலத்துள் ளணைந்தே புறமற் றரைக்குலங்கொண்
    டேமாந் தனைநீ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 121. அனஞ்சூ ழொற்றிப் பதியுடையீ ரகில மறிய மன்றகத்தே
    மனஞ்சூழ் தகரக் கால்கொண்டீர் வனப்பா மென்றே னுலகறியத்
    தனஞ்சூ ழகத்தே யணங்கேநீ தானுந் தகரத் தலைகொண்டா
    யினஞ்சூ ழழகா மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 122. பங்கே ருகப்பூம் பணையொற்றிப் பதியீர் நடுவம் பரமென்னு
    மங்கே யாட்டுக் காலெடுத்தீ ரழகென் றேனவ் வம்பரமே
    லிங்கே யாட்டுத் தோலெடுத்தா யாமொன் றிரண்டு நீயென்றா
    லெங்கே நின்சொல் லென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 123. மாணப் புகழ்சே ரொற்றியுளீர் மன்றார் தகர வித்தைதனைக்
    காணற் கினிநான் செயலென்னே கருதி யுரைத்தல் வேண்டுமென்றேன்
    வேணச் சுறுமெல் லியலேயாம் விளம்பு மொழியவ் வித்தையுனக்
    கேணப் புகலு மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 124. நல்லா ரொற்றி யுடையீர்யா னடக்கோ வெறும்பூ வணையணைய
    வல்லா லவணும் முடன்வருகோ வணையா தவலத் துயர்துய்க்கோ
    செல்லா வென்சொன் நடவாதோ திருக்கூத் தெதுவோ வெனவிடைக
    ளெல்லா நடவா தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 125. ஆட்டுத் தலைவர் நீரொற்றி யழகீ ரதனாற் சிறுவிதிக்கோ
    ராட்டுத் தலைதந் தீரென்றே னன்றா லறவோ ரறம்புகல
    வாட்டுத் தலைமுன் கொண்டதனா லஃதே பின்ன ரளித்தாமென்
    றீட்டுத் தரமீந் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 126. ஒற்றிப் பெருமா னுமைவிழைந்தா ரூரில் வியப்பொன் றுண்டிரவிற்
    கொற்றக் கமலம் விரிந்தொருகீழ்க் குளத்தே குமுதங் குவிந்ததென்றேன்
    பொற்றைத் தனத்தீர் நுமைவிழைந்தார் புரத்தே மதியந் தேய்கின்ற
    தெற்றைத் தினத்து மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 127. இடஞ்சே ரொற்றி யுடையீர்நீ ரென்ன சாதி யினரென்றேன்
    தடஞ்சேர் முலையாய் நாந்திறலாண் சாதி நீபெண் சாதியென்றார்
    விடஞ்சேர் களத்தீர் நும்மொழிதான் வியப்பா மென்றே னயப்பானின்
    னிடஞ்சேர் மொழிதா னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 128. உடையா ரென்பா ருமையொற்றி யுடையீர் பணந்தா னுடையீரோ
    நடையா யேற்கின் றீரென்றே னங்காய் நின்போ லொருபணத்தைக்
    கடையா ரெனக்கீழ் வைத்தருமை காட்டேம் பணிகொள் பணங்கோடி
    யிடையா துடையே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 129. என்னா ருயிர்க்குப் பெருந்துணையா மெங்கள் பெருமா னீரிருக்கு
    நன்னா டொற்றி யன்றோதா னவில வேண்டு மென்றுரைத்தேன்
    முன்னா ளொற்றி யெனினுமது மொழித லழகோ தாழ்தலுயர்
    விந்நா னிலத்துண் டென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 130. பெருந்தா ரணியோர் புகழொற்றிப் பெருமா னிவர்தம் முகநோக்கி
    யருந்தா வமுத மனையீரிங் கடுத்த பரிசே தறையுமென்றேன்
    வருந்தா திங்கே யருந்தமுத மனையா ளாக வாழ்வினொடு
    மிருந்தா யடைந்தே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 131. செம்மை வளஞ்சூ ழொற்றியுளீர் திகழாக் கரித்தோ லுடுத்தீரே
    யும்மை விழைந்த மடவார்க ளுடுக்கக் கலையுண் டோவென்றே
    னெம்மை யறியா யொருகலையோ விரண்டோ வனந்தங் கலைமெய்யி
    லிம்மை யுடையே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 132. கற்றைச் சடையீர் திருவொற்றிக் காவ லுடையீ ரீங்கடைந்தீ
    ரிற்றைப் பகலே நன்றென்றே னிற்றை யிரவே நன்றெமக்குப்
    பொற்றைத் தனத்தாய் கையமுதம் பொழியா தலர்வாய்ப் புத்தமுத
    மிற்றைக் களித்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 133. கற்றீ ரொற்றீர் முன்பொருவான் காட்டிற் கவர்ந்தோர் நாட்டில்வளை
    வீற்றீ ரின்றென் வளைகொண்டீர் விற்கத் துணிந்தீ ரோவென்றேன்
    மற்றீர்ங் குழலாய் நீயெம்மோர் மனையின் வளையைக் கவர்ந்துகளத்
    திற்றீ தணிந்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 134. உடுக்கும் புகழா ரொற்றியுளா ருடைதா வென்றார் திகையெட்டு
    முடுக்கும் பெரியீ ரெதுகண்டோ வுரைத்தீ ரென்றேன் றிகைமுழுது
    முடுக்கும் பெரிய வரைச்சிறிய வொருமுன் றானை யான்மூடி
    யெடுக்குந் திறங்கண் டென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 135. காவா யொற்றிப் பதியுடையீர் கல்லா னைக்குக் கரும்பன்று
    தேவாய் மதுரை யிடத்தளித்த சித்த ரலவோ நீரென்றேன்
    பாவா யிருகல் லானைக்குப் பரிவிற் கரும்பிங் கிரண்டொருநீ
    யீவா யிதுசித் தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 136. ஊட்டுந் திருவா ழொற்றியுளீ ருயிரை யுடலாஞ் செப்பிடைவைத்
    தாட்டுந் திறத்தீர் நீரென்றே னணங்கே யிருசெப் பிடையாட்டுந்
    தீட்டும் புகழன் றியுமுலகைச் சிறிதோர் செப்பி லாட்டுகின்றா
    யீட்டுந் திறத்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 137. கந்த வனஞ்சூ ழொற்றியுளீர் கண்மூன் றுடையீர் வியப்பென்றேன்
    வந்த வெமைத்தான் பிரிபோது மற்றை யவரைக் காண்போதுஞ்
    சந்த மிகுங்கண் ணிருமூன்றுந் தகுநான் கொன்றுந் தானடைந்தா
    யிந்த வியப்பென் னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 138. ஆழி விடையீர் திருவொற்றி யமர்ந்தீ ரிருவர்க் ககமகிழ்வான்
    வீழி யதனிற் படிக்காசு வேண்டி யளித்தீ ராமென்றேன்
    வீழி யதனிற் படிக்காசு வேண்டா தளித்தா யளவொன்றை
    யேழி லகற்றி யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 139. உற்ற விடத்தே பெருந்துணையா மொற்றிப் பெருமா னும்புகழைக்
    கற்ற விடத்தே முக்கனியுங் கரும்பு மமுதுங் கயவாவோ
    மற்ற விடச்சீ ரென்னென்றேன் மற்றை யுபய விடமுமுத
    லெற்ற விடமே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 140. யான்செய் தவத்தின் பெரும்பயனே யென்னா ரமுதே யென்றுணையே
    வான்செ யரசே திருவொற்றி வள்ளால் வந்த தென்னென்றேன்
    மான்செய் விழிப்பெண் ணேநீயாண் வடிவா னதுகேட் டுள்ளம்வியந்
    தேன்கண் டிடவே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 141. கருணைக் கடலே யென்னிரண்டு கண்ணே முக்கட் கரும்பேசெவ்
    வருணப் பொருப்பே வளரொற்றி வள்ளன் மணியே மகிழ்ந்தணையத்
    தருணப் பருவ மிஃதென்றேன் றவிரன் றெனக்காட் டியதுன்ற
    னிருணச் சளக மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 142. காவிக் களங்கொள் கனியேயென் கண்ணுண் மணியே யணியேயென்
    னாவித் துணையே திருவொற்றி யரசே யடைந்த தென்னென்றேன்
    பூவிற் பொலியுங் குழலாய்நீ பொன்னி னுயர்ந்தா யெனக்கேட்டுன்
    னீவைக் கருதி யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 143. கண்ணும் மனமுங் களிக்குமெழிற் கண்மூன் றுடையீர் கலையுடையீர்
    நண்ணுந் திருவா ழொற்றியுளீர் நடஞ்செய் வல்லீர் நீரென்றேன்
    வண்ண முடையாய் நின்றனைப்போன் மலர்வாய் நடஞ்செய் வல்லோமோ
    வெண்ண வியப்பா மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 144. தாங்கும் விடைமே லழகீரென் றன்னைக் கலந்துந் திருவொற்றி
    யோங்குந் தளியி லொளித்தீர்நீ ரொளிப்பில் வல்ல ராமென்றேன்
    வாங்கு நுதலாய் நீயுமெனை மருவிக் கலந்து மலர்த்தளியி
    லீங்கின் றொளித்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 145. அம்மை யடுத்த திருமேனி யழகீ ரொற்றி யணிநகரீ
    ரும்மை யடுத்தோர் மிகவாட்ட முறுத லழகோ வென்றுரைத்தேன்
    நம்மை யடுத்தாய் நமையடுத்தோர் நம்போ லுறுவ ரன்றெனிலே
    தெம்மை யடுத்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 146. உண்கண் மகிழ்வா லளிமிழற்று மொற்றி நகரீ ரொருமூன்று
    கண்க ளுடையீ ரென்காதல் கண்டு மிரங்கீ ரென்னென்றேன்
    பண்கொண் மொழியாய் நின்காதல் பன்னாண் சுவைசெய் பழம்போலு
    மெண்கொண் டிருந்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 147. வணங்கே ழிலங்குஞ் செஞ்சடையீர் வளஞ்சே ரொற்றி மாநகரீர்
    குணங்கேழ் மிடற்றோர் பாலிருளைக் கொண்டீர் கொள்கை யென்னென்றே
    னணங்கே யொருபா லன்றிநின்போ லைம்பா லிருள்கொண் டிடச்சற்று
    மிணங்கே மிணங்கே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 148. கரும்பி லினியீ ரென்னிரண்டு கண்க ளனையீர் கறைமிடற்றீர்
    பெரும்பை யணியீர் திருவொற்றிப் பெரியீ ரெதுநும் பெயரென்றே
    னரும்பண் முலையாய் பிறர்கேட்க வறைந்தா லளிப்பீ ரெனச்சூழ்வ
    ரிரும்பொ னிலையே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 149. நிலையைத் தவறார் தொழுமொற்றி நிமலப் பெருமானீர்முன்ன
    மலையைச் சிலையாக் கொண்டீர்நும் மாவல் லபமற் புதமென்றேன்
    வலையத் தறியாச் சிறுவர்களு மலையைச் சிலையாக் கொள்வர்களீ
    திலையற் புதந்தா னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 150. உதயச் சுடரே யனையீர்நல் லொற்றி யுடையீ ரென்னுடைய
    விதயத் தமர்ந்தீ ரென்னேயென் னெண்ண மறியீ ரோவென்றேன்
    சுதையிற் றிகழ்வா யறிந்தன்றோ துறந்து வெளிப்பட் டெதிரடைந்தா
    மிதையுற் றறிநீ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 151. புரக்குங் குணத்தீர் திருவொற்றிப் புனித ரேநீர் போர்க்களிற்றை
    யுரக்குங் கலக்கம் பெறவுரித்தீ ருள்ளத் திரக்க மென்னென்றேன்
    கரக்கு மிடையாய் நீகளிற்றின் கன்றைக் கலக்கம் புரிந்தனைநின்
    னிரக்க மிதுவோ வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 152. பதங்கூ றொற்றிப் பதியீர்நீர் பசுவி லேறும் பரிசதுதான்
    விதங்கூ றறத்தின் விதிதானோ விலக்கோ விளம்பல் வேண்டுமென்றே
    னிதங்கூ றிடுநற் பசுங் கன்றை நீயுமேறி யிடுகின்றா
    யிதங்கூ றிடுக வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 153. யோக முடையார் புகழொற்றி யூரிற் பரம யோகியராந்
    தாக முடையா ரிவர்தமக்குத் தண்­ர் தரநின் றனையழைத்தேன்
    போக முடையாய் புறத்தண்­ர் புரிந்து விரும்பா மகத்தண்­
    ரீக மகிழ்வி னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 154. வளநீ ரொற்றி வாணரிவர் வந்தார் நின்றார் மாதேநா
    முளநீர்த் தாக மாற்றுறுநீ ருதவ வேண்டு மென்றார்நான்
    குளநீ ரொன்றே யுளதென்றேன் கொள்ளே மிடைமேற் கொளுமிந்த
    விளநீர் தருக வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 155. மெய்ந்நீ ரொற்றி வாணரிவர் வெம்மை யுளநீர் வேண்டுமென்றா
    ரந்நீ ரிலைநீர் தண்­ர்தா னருந்தி லாகா தோவென்றேன்
    முந்நீர் தனையை யனையீரிம் முதுநீ ருண்டு தலைக்கேறிற்
    றிந்நீர் காண்டி யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 156. சீலஞ் சேர்ந்த வொற்றியுளீர் சிறிதாம் பஞ்ச காலத்துங்
    கோலஞ் சார்ந்து பிச்சைகொளக் குறித்து வருவீ ரென்னென்றேன்
    காலம் போகும் வார்த்தைநிற்குங் கண்டா யிதுசொற் கடனாமோ
    வேலங் குழலா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 157. ஊற்றார் சடையீ ரொற்றியுளீ ரூரூ ரிரக்கத் துணிவுற்றீர்
    நீற்றால் விளங்குந் திருமேனி நேர்ந்திங் கிளைத்தீர் நீரென்றேன்
    சோற்றா லிளைத்தே மன்றுமது சொல்லா லிளைத்தே மின்றினிநா
    மேற்றா லிகழ்வே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 158. நீரை விழுங்குஞ் சடையுடையீ ருளது நுமக்கு நீரூருந்
    தேரை விழுங்கும் பசுவென்றேன் செறிநின் கலைக்கு ளொன்றுளது
    காரை விழுங்கு மெமதுபசுக் கன்றின் றேரை நீர்த்தேரை
    யீர விழுங்கு மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 159. பொன்னேர் மணிமன் றுடையீர்நீர் புரிந்த தெதுவெம் புடையென்றே
    னின்னே யுரைத்தற் கஞ்சுதுமென் றாரென் னென்றே னியம்புதுமேன்
    மின்னே நினது நடைப்பகையா மிருகம் பறவை தமைக்குறிக்கு
    மென்னே யுரைப்ப தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 160. அடையார் புரஞ்செற் றம்பலத்தே யாடு மழகீ ரெண்பதிற்றுக்
    கடையா முடலின் றலைகொண்டீர் கரமொன் றினிலற் புதமென்றே
    னுடையாத் தலைமேற் றலையாக வுன்கை யீரைஞ் ஞாறுகொண்ட
    திடையா வளைக்கே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 161. தேவர்க் கரிய வானந்தத் திருத்தாண் டவஞ்செய் பெருமானீர்
    மேவக் குகுகு குகுகுவணி வேணி யுடையீ ராமென்றேன்
    தாவக் குகுகு குகுகுகுகுத் தாமே யைந்து விளங்கவணி
    யேவற் குணத்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 162. கொன்றைச் சடையீர் கொடுங்கோளூர் குறித்தீர் வருதற் கஞ்சுவல்யா
    னொன்றப் பெருங்கோ ளென்மீது முரைப்பா ருண்டென் றுணர்ந்தென்றேன்
    நன்றப் படியேற் கோளிலியா நகரு முடையே நங்காய்நீ
    யின்றச் சுறலென் னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 163. புரியுஞ் சடையீ ரமர்ந்திடுமூர் புலியூ ரெனிலெம் போல்வார்க்கு
    முரியும் புலித்தோ லுடையீர்போ லுறுதற் கியலு மோவென்றேன்
    றிரியும் புலியூ ரன்றுநின் போற் றெரிவை யரைக்கண் டிடிற்பயந்தே
    யிரியும் புலியூ ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 164. தெவ்வூர் பொடிக்குஞ் சிறுநகையித் தேவர் தமைநா னீரிருத்த
    லெவ்வூ ரென்றே னகைத்தணங்கே யேழூர் நாலூ ரென்றார்பின்
    னவ்வூர்த் தொகையி னிருத்தலரி தாமென் றேன்மற் றதிலொவ்வூ
    ரிவ்வூ ரெடுத்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 165. மணங்கொ ளிதழிச் சடையீர்நீர் வாழும் பதியா தென்றேனின்
    குணங்கொண் மொழிகேட் டோரளவு குறைந்த குயிலாம் பதியென்றா
    ரணங்கின் மறையூ ராமென்றே னஃதன் றருளோத் தூரிஃது
    மிணங்க வுடையே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 166. ஆற்றுச் சடையா ரிவர்பலியென் றடைந்தார் நுமதூ ரியாதென்றேன்
    சோற்றுத் துறையென் றார்நுமக்குச் சோற்றுக் கருப்பேன் சொலுமென்றேன்
    றோற்றுத் திரிவே மன்றுநின்போற் சொல்லுங் கருப்பென் றுலகியம்ப
    வேற்றுத் திரியே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
  • 167. ஓங்குஞ் சடையீர் நெல்வாயி லுடையே மென்றீ ருடையீரேற்
    றாங்கும் புகழ்நும் மிடைச்சிறுமை சார்ந்த தெவனீர் சாற்றுமென்றே
    னேங்கும் படிநும் மிடைச்சிறுமை யெய்திற் றலதீண் டெமக்கின்றா
    லீங்குங் காண்டி ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.

இங்கித மாலை // இங்கித மாலை