திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
நெஞ்சொடு நெகிழ்தல்
neñsoṭu nekiḻtal
திருக்குறிப்பு நாட்டம்
tirukkuṟippu nāṭṭam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

089. பொதுத் தனித் திருவெண்பா
potut taṉit tiruveṇpā

    நேரிசை வெண்பா
    திருச்சிற்றம்பலம்
  • 1. வந்திக்கும் மெய்யடியார் மாலற்ற ஓர்மனத்தில்
    சந்திக்கும் எங்கள் சயம்புவே - பந்திக்கும்
    வன்மலக்கட் டெல்லாம் வலிகெட் டறநினது
    நின்மலக்கண் தண்ணருள்தான் நேர்.
  • 2. சங்கரா முக்கட் சயம்புவே தாழ்சடைமேல்
    பொங்கராத் திங்கள் பொலிந்தோனே - வெங்கரா
    வாய்நின்று பிள்ளை வரப்பாடும் வன்தொண்டர்க்
    காய்நின்று சந்துரைத்த தார்.
  • 3. நீலக் களங்கொண்ட நீடொளியே நீள்கங்கை
    கோலச் சடைக்கணிந்த கோமளமே - ஞாலத்தில்
    அந்தோ சிறியேன் அருளின்றி வாடுவது
    சந்தோட மோநின் றனக்கு.
  • 4. நான்சிறியேன் என்னினும்இந் நானிலத்தில் நான்செய்பிழை
    தான்சிறிதோ அன்றுலகில் தான்பெரிதே - மான்கரத்தோய்
    அங்ஙனமே னும்உன் அருட்பெருமைக் கிப்பெருமை
    எங்ஙனம்என் றுள்ளம் எழும்.
  • 5. ஆவித் துணையேஎன் ஆரமுதே நின்வடிவைப்
    பாவித்துள் நையேன்இப் பாவியேன் - சேவித்து
    வாழ்த்தேன்நின் பொன்னடியில் வந்தென் தலைகுனித்துத்
    தாழ்த்தேன்என் செய்தேன் தவம்.
  • 6. உன்னைநினைந் திங்கே உலாவுகின்றேன் அன்றிஎந்தாய்
    பின்னை நினைப்பொன்றும் பெற்றிலேன் - என்னை
    விடாதேநின் பொன்னடியை மேவார்சேர் துன்பம்
    கொடாதே எனைஏன்று கொள்.
  • 7. என்னரசே நின்னடிக்கீழ் என்னிடரை நீக்கெனநான்
    சொன்னதலால் தாயுடனும் சொன்னேனோ - இன்னுமிந்தத்
    துன்பச் சுமையைச் சுமக்கமுடி யாதென்னால்
    அன்பர்க் கருள்வோய் அருள்.
  • 8. அன்னேஎன் அப்பாஎன் ஆருயிர்க்கோர் ஆதரவே
    என்னேநின் உள்ளம் இரங்கிலையே - பொன்னே
    உடையா ரிடைஎன் உளநொந்து வாடிக்
    கடையேன் படுந்துயரைக் கண்டு.
  • 9. பகுதி தகுதி விகுதிஎனும் பாட்டில்
    இகலில் இடையை இரட்டித் - தகவின்
    அருச்சித்தால் முன்னாம் அதுகடையாம் கண்டீர்
    திருச்சிற் சபையானைத் தேர்ந்து.
  • 10. தாதாதா தாதாதா தாக்குறைக்கென் செய்குதும்யாம்
    தாதாதா என்றுலகில் தான்அலைந்தோம் - போதாதா
    நந்தா மணியே நமச்சிவா யப்பொருளே
    எந்தாய் எனப்புகழ வே.1
  • 11. பொய்கண்டாய் காமப் புதுமயக்கிற் போய்உழலக்
    கைகண்டாய் என்னபலன் கண்டாயே - மெய்கண்ட
    பொன்னே அனையார்பால் போய்வணங்கக் கற்றிலையோ
    என்னேநின் தன்மைமன மே.
  • 12. இவ்வழியில் செல்லாதே என்னுடையான் தன்னடிசேர்
    அவ்வழியில் செல்என் றடிக்கடிக்குச் - செவ்வழியில்
    சொன்னாலும் கேட்கிலைநீ துட்டமன மேஉனக்கிங்
    கென்னால் உறவே தினி.
  • 13. கால்வாங் கியஉட் கதவம் கொளும்அகத்தின்
    பால்வாங் கியகால் பரம்பரனே - மால்வாங்
    கரிதாரம் ஊணாதி யாம்மயல்கொண் டேழைப்
    பெரிதார ஓர்மொழியைப் பேசு.

    • 173. இதன் பொருள்: பகுதி, தகுதி, விகுதி என்னும் மூன்று சொற்களின் இடையெழுத்தைஇரட்டித்து அருச்சித்தால் அவற்றின் கடையெழுத்துகள் சேர்ந்த முன்னெழுத்துகள்கிடைக்கும். மூன்று சொற்களிலும் இடையெழுத்து கு. 3கு x 2 = 6கு, அறுகு (அறுகம்புல்).முதலெழுத்துகள் சேரின்: ப, த, வி - பதவி. கடையெழுத்துகள் சேரின்: தி, தி, தி - மூன்றுதி, முக்தி. சிற்சபையானை அறுகால் அருச்சித்தால் முத்திப் பதவி பெறலாம்.
    • 174. 'தா தா தா தா தா தா தாக்குறை' என்பதில் தா என்னும் எழுத்து எழுமுறைஅடுக்கி வந்தது. அதனை எழுதாக்குறை என்று படிக்க. ஏழு தா எழுதா. எழுதாக்குறைக்குஎன் செய்குதும் - எமது தலையில் எழுதாத குறைக்கு என்ன செய்வோம்.இரண்டாவது அடியில் 'தா தா தா' என மும்முறை அடுக்கி வந்ததை தாதா, தாஎனப் பிரித்துப் பொருள் கொள்க. தாதா - வள்ளலே, தா - கொடு.
    • 568 ஆம் பாடல் காண்க. முதல் அடியில் எழுதாக்குறை. இரண்டாவது அடியில் 'ததிதி' -ஒலிக்குறிப்பு. மூன்றாம் அடியில் 'திதிதி' - முத்தி.இங்கிதமாலையிலும் இவ்வாறு ஒருபாடல் உண்டு. பாடல்1930.குகுகுகுகுகு அணிவேணி - அறுகு அணிந்த சடை .குகுகுகுகுகுகுகு: குகு - அமாவாசை, குகு நான்குமுறை அடுக்கி வந்தது. நாலு குகு என்றுகொண்டு தொடங்கும் இருண்ட கூந்தல் எனப் பொருள் கொள்ளவேண்டும். விரிக்கிற்பெருகும்.

பொதுத் தனித் திருவெண்பா // பொதுத் தனித் திருவெண்பா

No audios found!