திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
நடராஜ அலங்காரம்
naṭarāja alaṅkāram
திருவடிக் கண்ணி
tiruvaṭik kaṇṇi
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

080. முறையீட்டுக் கண்ணி
muṟaiyīṭṭuk kaṇṇi

    தாழிசை
    திருச்சிற்றம்பலம்
  • 1. பற்று நினைத்தெழுமிப் பாவிமனத் தீமையெலாம்
    உற்று நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா.
  • 2. எள்ளேத நின்னிடத்தே எண்ணுகின்ற தோறுமதை
    உள்ளே நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா.
  • 3. துன்னுகின்ற தீமைநின்பாற் சூழ்ந்துரைக்குந் தோறுமதை
    உன்னுகின்ற போதிலெனக் கூடுருவிப் போகுதடா.
  • 4. எள்ளுகின்ற தீமைநின்பா லெண்ணுகின்ற தோறுமதை
    உள்ளுகின்ற போதிலெனக் கூடுருவிப் போகுதடா.
  • 5. மிக்க நிலைநிற்க விரும்பேன் பிழைகளெலாம்
    ஒக்க நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா.
  • 6. கோகோ வெனுங்கொடியேன் கூறியகுற் றங்களெலாம்
    ஓகோ நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா.
  • 7. பித்து மனக்கொடியேன் பேசியவன் சொல்லையெலாம்
    ஒத்து நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா.
  • 8. தேர்ந்து தெளியாச் சிறியவனேன் தீமையெலாம்
    ஓர்ந்து நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா.
  • 9. நிறுத்தி யறியே நிகழ்த்தியவன் சொல்லை
    உறுத்தி நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா.
  • 10. தோன்றி விரியுமனத் துட்டனேன் வன்பிழையை
    ஊன்றி நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா.
  • 11. எண்ணினைப்ப தின்றிநினை யெள்ளி யுரைத்ததனை
    உண்ணினைக்குந் தோறுமெனக் குள்ள முருகுதடா.
  • 12. கடையவனேன் வைதகடுஞ் சொன்னினைக்குந் தோறும்
    உடையவனே யென்னுடைய வுள்ள முருகுதடா.
  • 13. பித்தனெனத் தீமை பிதற்றியதெண் ணுந்தோறும்
    உத்தமனே யென்னுடைய வுள்ள முருகுதடா.
  • 14. மன்றுடையாய் நின்னருளை வைதகொடுஞ் சொற்பொருளில்
    ஒன்றை நினைக்கிலெனக் குள்ள முருகுதடா.
  • 15. வெருவாம லையோ விளம்பியசொல் லெல்லாம்
    ஒருவா நினைக்கிலெனக் குள்ள முருகுதடா.
  • 16. புலைக்கொடியேன் புன்சொற் புகன்றதெண் ணுந்தோறும்
    உலைக்கண்மெழு காகவென்ற னுள்ள முருகுதடா.
  • 17. ஈடில்பெருந் தாயி லினியாய்நின் றண்ணருட்பால்
    ஊடியசொல் லுன்னிலெனக் குள்ள முருகுதடா.
  • 18. புரைத்தமன வஞ்சப் புலையேன் றிருவருளை
    உரைத்தபிழை யெண்ணிலெனக் குள்ள முருகுதடா.
  • 19. நாடி நினையா நவையுடையேன் புன்சொலெலாம்
    ஓடி நினைக்கிலெனக் குள்ள முருகுதடா.
  • 20. வெப்பில் கருணை விளக்கனையா யென்பிழையை
    ஒப்பி நினைக்கிலெனக் குள்ள முருகுதடா.
  • 21. அஞ்சலென்றாய் நின்பால் அடாதமொழி பேசியதை
    அஞ்சிநினைக் கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
  • 22. மெய்யோர் சிறிதுமிலேன் வீண்மொழியா லூடியதை
    ஐயோ நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
  • 23. இத்தா ரணிக்குளெங்கு மில்லாத தீமைசெய்தேன்
    அத்தா நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
  • 24. பொய்யால் விரிந்த புலைமனத்தேன் செய்பிழையை
    ஐயா நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
  • 25. இப்பாவி நெஞ்சா லிழுக்குரைத்தே னாங்கதனை
    அப்பாநி னைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
  • 26. எண்ணாக் கொடுமையெலா மெண்ணியுரைத் தேனதனை
    அண்ணா நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
  • 27. வெம்மான் மனத்து வினையேன் புகன்றதெலாம்
    அம்மா நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
  • 28. எச்சோடு மில்லா திழிந்தேன் பிழைகளெலாம்
    அச்சோநி னைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
  • 29. வந்தோடி நைமனத்து வஞ்சகனேன் வஞ்சமெலாம்
    அந்தோநி னைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
  • 30. ஓவாக் கொடியே னுரைத்த பிழைகளெலாம்
    ஆவா நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
  • 31. கரைசேர வொண்ணாக் கடையேன் பிழையை
    அரைசேநி னைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
  • 32. மருளுடையேன் வஞ்ச மனத்தீமை யெல்லாம்
    அருளுடையா யெண்ணிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
  • 33. ஈண்டவனேன் வன்சொல் இயம்பியதை யென்னுடைய
    ஆண்டவனே யெண்ணிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
  • 34. வற்புதனேன் வஞ்ச மனப்பிழையை மன்றாடும்
    அற்புதனே யெண்ணிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
  • 35. துன்புடையேன் புன்மொழிகள் தூற்றியதை யெவ்வுயிர்க்கும்
    அன்புடையா யெண்ணிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
  • 36. கொதிக்கின்ற வன்மொழியாற் கூறியதை யையோ
    மதிக்கின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
  • 37. சினங்கொண்ட போதெல்லாஞ் செப்பிய வன்சொல்லை
    மனங்கொள்ளுந் தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
  • 38. செய்தநன்றி யெண்ணாச் சிறியவனே னின்னருளை
    வைத்தெண்ணுந் தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
  • 39. பொய்த்த மனத்தேன் புகன்றகொடுஞ் சொற்களெலாம்
    வைத்துநினைக் குந்தோறும் வாளிட் டறுக்குதடா.
  • 40. பொங்குகின்ற தீமை புகன்றதெலா மெண்ணியெண்ணி
    மங்குகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
  • 41. ஊடுகின்ற சொல்லா லுரைத்ததனை யெண்ணியெண்ணி
    வாடுகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
  • 42. உயங்குகின்றேன் வன்சொல் லுரைத்ததனை யெண்ணி
    மயங்குகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
  • 43. சொல்விளைவு நோக்காதே சொன்னதெலா மெண்ணுதொறும்
    வல்வினையே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா.
  • 44. மேல்விளைவு நோக்காதே வேறுசொன்ன தெண்ணுதொறும்
    மால்வினையே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா.
  • 45. விஞ்சகத்தா லந்தோ விளம்பியதை யெண்ணுதொறும்
    வஞ்சகத்தே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா.
  • 46. விலங்குகின்ற நெஞ்ச விளைவையெண் ணுந்தோறும்
    மலங்குகின்றே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா.
  • 47. தூய்மையிலா வன்மொழியாற் சொன்னவெலா மெண்ணுதொறும்
    வாய்மையிலே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா.
  • 48. கலிக்கின்ற வஞ்சகக் கருத்தைக் கருதி
    வலிக்கின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
  • 49. நீட்டுகின்ற வஞ்ச நெடுஞ்சொலெலா நெஞ்சகத்தே
    மாட்டுகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
  • 50. பொருந்துகின்ற வஞ்சப் புதுமையெண்ணி யையோ
    வருந்துகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
  • 51. வெருவிக்கும் வஞ்ச வெறுஞ்சொலெலாம் நெஞ்சில்
    வருவிக்குந் தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
  • 52. ஊடும்போ துன்னை யுரைத்தவெலா நாயடியேன்
    நாடும்போ தெல்லாமென் னாடி நடுங்குதடா.
  • 53. வாய்க்கடையா வன்சொல் வழங்கியவென் வன்மனத்தை
    நாய்க்கடையே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா.
  • 54. கன்றி யுரைத்த கடுஞ்சொற் கடுவையெலாம்
    நன்றியிலே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா.
  • 55. புன்மையினால் வன்சொற் புகன்றபுலைத் தன்மையெலாம்
    நன்மையிலே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா.
  • 56. ஊனெண்ணும் வஞ்ச வுளத்தா லுரைத்தவெலாம்
    நானெண்ணுந் தோறுமென்ற னாடி நடுங்குதடா.
  • 57. வஞ்சனையா லஞ்சாது வன்சொல் புகன்றவெலாம்
    நஞ்சனையே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா.
  • 58. கோணநெடு நெஞ்சக் குரங்காற் குதித்தவெலாம்
    நாணமிலே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா.
  • 59. ஊனமிலா நின்னை யுரைத்தகொடுஞ் சொல்லையெலாம்
    ஞானமிலே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா.
  • 60. எற்றே மதியிலியே னெண்ணா துரைத்ததனைச்
    சற்றே நினைத்திடினுந் தாது கலங்குதடா.
  • 61. இனியேது செய்வே னிகழ்ந்துரைத்த சொல்லைத்
    தனியே நினைத்திடினுந் தாது கலங்குதடா.
  • 62. நாயனையே னெண்ணாம னலங்கியவன் சொல்லையெலாம்
    தாயனையா யெண்ணுதொறுந் தாது கலங்குதடா.
  • 63. நிற்குருகா வஞ்ச நினைவால் நினைத்தவெலாஞ்
    சற்குருவே யெண்ணுதொறுந் தாது கலங்குதடா.
  • 64. வெந்நரகில் வீழும் விளைவால் விளம்பியதை
    என்னரசே யெண்ணுதொறு மென்னை விழுங்குதடா.
  • 65. நன்கறியேன் வாளா நவின்ற நவையனைத்தும்
    என்குருவே யெண்ணுதொறு மென்னை விழுங்குதடா.
  • 66. ஆவ தறியா தடியே னிகழ்ந்தகொடும்
    பாவ நினைக்கிற் பகீரென் றலைக்குதடா.
  • 67. வந்திப் பறியேன் வழங்கியவன் சொல்லையெலாம்
    சிந்திக் கிலுள்ளே திடுக்கிட் டழுங்குதடா.
  • 68. குற்ற நினைத்த கொடுஞ்சொலெலா மென்னுளத்தே
    பற்ற நினைக்கிற் பயமா யிருக்குதடா.
  • 69. எள்ளுகின்ற தீமை யெடுத்துரைத்தே னாங்கதனை
    விள்ளுகின்ற தோறு முள்ளம்வெந்து வெதும்புதடா.

முறையீட்டுக் கண்ணி // முறையீட்டுக் கண்ணி