திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
திருவடிக் கண்ணி
tiruvaṭik kaṇṇi
மங்களம்
maṅkaḷam
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

082. பேரன்புக் கண்ணி
pēraṉpuk kaṇṇi

    தாழிசை
    திருச்சிற்றம்பலம்
  • 1. கற்றதென்றுஞ் சாகாத கல்வியென்று கண்டுகொண்டுன்
    அற்புதச்சிற் றம்பலத்தி லன்புவைத்தேன் ஐயாவே.
  • 2. ஈடணைகள் நீக்கிநமக் கின்பளிக்கு மென்றுமன்றில்
    ஆடுந் திருவடிக்கே ஆசைவைத்தேன் ஐயாவே.
  • 3. நானந்த மெய்தா நலம்பெறவே யெண்ணிமன்றில்
    ஆனந்த நாடகத்துக் கன்புவைத்தேன் ஐயாவே.
  • 4. வாடலறச் சாகா வரங்கொடுக்கு மென்றுமன்றில்
    ஆடலடிப் பொன்மலர்க்கே அன்புவைத்தேன் ஐயாவே.
  • 5. பொற்புறவே பொன்றாப் பொருளளிக்கு மென்றுமன்றில்
    அற்புதப்பொற் சேவடிக்கே அன்புவைத்தேன் ஐயாவே.
  • 6. ஈனமறுத் தென்றும் இறவாமை நல்குமென்றே
    ஞானமணி மன்றிடத்தே நண்புவைத்தேன் ஐயாவே.
  • 7. ஓர்துணைநின் பொன்னடியென் றுன்னுகின்றே னுன்னையன்றி
    ஆர்துணையும் வேண்டேனென் அன்புடைய ஐயாவே.
  • 8. பூசைசெய்து பெற்றவுன்றன் பொன்னடிமே லன்றியயல்
    ஆசையொன்று மில்லையெனக் கன்புடைய ஐயாவே.
  • 9. இச்சைநின்மே லன்றியெனக் கெள்ளளவும் வேறுமொன்றில்
    இச்சையிலை நின்னாணை யென்னருமை ஐயாவே.
  • 10. எப்படிநின் னுள்ள மிருக்கின்ற தென்னளவில்
    அப்படிநீ செய்கவெனக் கன்புடைய ஐயாவே.
  • 11. எவ்வண்ணம் நின்கருத்திங் கென்னளவி லெண்ணியதோ
    அவ்வண்ணஞ் செய்கவெனக் கன்புடைய ஐயாவே.
  • 12. தேசுறுநின் றண்ணருளாந் தெள்ளமுதங் கொள்ளவுள்ளே
    ஆசைபொங்கு கின்றதெனக் கன்புடைய ஐயாவே.
  • 13. மாசறுநின் பொன்னருளா மாமணிபெற் றாடவுள்ளே
    ஆசைபொங்கு கின்றதெனக் கன்புடைய ஐயாவே.
  • 14. நாசமிலா நின்னருளாம் ஞானமருந் துண்ணவுள்ளே
    ஆசைபொங்கு கின்றதெனக் கன்புடைய ஐயாவே.

பேரன்புக் கண்ணி // பேரன்புக் கண்ணி