திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
செய்பணி வினவல்
seypaṇi viṉaval
திருப்பள்ளி எழுச்சி
tiruppaḷḷi eḻuchsi
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

062. ஆற்ற மாட்டாமை
āṟṟa māṭṭāmai

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. இப்பார் முதல்எண் மூர்த்தமதாய் இலங்கும் கருணை எங்கோவே
    தப்பா யினதீர்த் தென்னையும்முன் தடுத்தாட் கொண்ட தயாநிதியே
    எப்பா லவரும் புகழ்ந்தேத்தும் இறைவா எல்லாம் வல்லோனே
    அப்பா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
  • 2. புரைசேர் துயரப் புணரிமுற்றும் கடத்தி ஞான பூரணமாம்
    கரைசேர்த் தருளி இன்னமுதக் கடலைக் குடிப்பித் திடல்வேண்டும்
    உரைசேர் மறையின் முடிவிளங்கும் ஒளிமா மணியே உடையானே
    அரைசே அப்பா இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
  • 3. கண்ணார் அமுதக் கடலேஎன் கண்ணே கண்ணுட் கருமணியே
    தண்ணார் மதியே கதிர்பரப்பித் தழைத்த சுடரே தனிக்கனலே
    எண்ணா டரிய பெரியஅண்டம் எல்லாம் நிறைந்த அருட்சோதி
    அண்ணா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
  • 4. பொய்யா தென்றும் எனதுளத்தே பொருந்தும் மருந்தே புண்ணியனே
    கையார்ந் திலங்கு மணியேசெங் கரும்பே கனியே கடையேற்குச்
    செய்யா உதவி செய்தபெருந் தேவே மூவாத் தெள்ளமுதே
    ஐயா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
  • 5. இத்தா ரணியில் என்பிழைகள் எல்லாம் பொறுத்த என்குருவே
    நித்தா சிற்றம் பலத்தாடும் நிருத்தா எல்லாஞ் செயவல்ல
    சித்தா சித்தி புரத்தமர்ந்த தேவே சித்த சிகாமணியே
    அத்தா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
  • 6. எம்மே தகவும் உடையவர்தம் இதயத் தமர்ந்த இறையவனே
    இம்மே தினியில் எனைவருவித் திட்ட கருணை எம்மானே
    நம்மே லவர்க்கும் அறிவரிய நாதா என்னை நயந்தீன்ற
    அம்மே அப்பா இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
  • 7. செப்பார் கலைகள் மொழிந்தபொருள் திறங்கள் அனைத்துந் தெரிந்துதெளிந்
    திப்பா ரிடைநின் புகழ்பாடு கின்ற பெரிய ரின்மொழிப்பாட்
    டொப்பாச் சிறியேன் புன்மொழிப்பாட் டெல்லாம் உவந்த உடையானே
    அப்பா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
  • 8. துப்பார் கனகப் பொதுவில்நடத் தொழிலால் உலகத் துயர்ஒழிக்கும்
    வைப்பாம் இறைவா சிவகாம வல்லிக் கிசைந்த மணவாளா
    ஒப்பார் உயர்ந்தார் இல்லாத ஒருவா எல்லாம் உடையானே
    அப்பா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
  • 9. ஒப்பா ருரைப்பார் நின்பெருமைக் கெனமா மறைகள் ஓலமிடும்
    துப்பார் வண்ணச் சுடரேமெய்ச் சோதிப் படிக வண்ணத்தாய்
    வெப்பா னவைதீர்த் தெனக்கமுத விருந்து புரிதல் வேண்டும்என்றன்
    அப்பா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
  • 10. வெப்பார் உள்ளக் கலக்கமெலாம் இற்றைப் பொழுதே விலக்கிஒழித்
    திப்பா ரிடைஎன் கருத்தின்வண்ணம் எல்லாம் விரைவின் ஈந்தருள்க
    ஒப்பால் உரைத்த தன்றுண்மை உரைத்தேன் கருணை உடையானே
    அப்பா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.

ஆற்ற மாட்டாமை // ஆற்ற மாட்டாமை

No audios found!