திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
சிற்சத்தி துதி
siṟsatti tuti
ஆனந்தானுபவம்
āṉantāṉupavam
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

068. பிரிவாற்றாமை
pirivāṟṟāmai

    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. தேடிய துண்டு நினதுரு வுண்மை
    தெளிந்திடச் சிறிதுநின் னுடனே
    ஊடிய துண்டு பிறர்தமை அடுத்தே
    உரைத்ததும் உவந்ததும் உண்டோ
    ஆடிய பாதம் அறியநான் அறியேன்
    அம்பலத் தரும்பெருஞ் சோதி
    கூடிய நின்னைப் பிரிகிலேன் பிரிவைக்
    கூறவுங் கூசும்என் நாவே.
  • 2. மடம்புரி மனத்தாற் கலங்கிய துண்டு
    வள்ளலே நின்திரு வரவுக்
    கிடம்புரி சிறியேன் கலங்கினேன் எனினும்
    இறையும்வே றெண்ணிய துண்டோ
    நடம்புரி பாதம் அறியநான் அறியேன்
    நான்செயும் வகையினி நன்றே
    திடம்புரிந் தருளிக் காத்திடல் வேண்டும்
    சிறிதும் நான் பொறுக்கலேன் சிவனே.
  • 3. நீக்கிய மனம்பின் அடுத்தெனைக் கலக்கி
    நின்றதே அன்றிநின் அளவில்
    நோக்கிய நோக்கம் பிறவிட யத்தே
    நோக்கிய திறையும் இங்குண்டோ
    தூக்கிய பாதம் அறியநான் அறியேன்
    துயரினிப் பொறுக்கலேன் சிறிதும்
    தேக்கிய களிப்பில் சிறப்பவந் தென்னைத்
    தெளிவித்தல் நின்கடன் சிவனே.
  • 4. ஈன்றநற் றாயுந் தந்தையும் குருவும்
    என்னுயிர்க் கின்பமும் பொதுவில்
    ஆன்றமெய்ப் பொருளே என்றிருக் கின்றேன்
    அன்றிவே றெண்ணிய துண்டோ
    ஊன்றிய பாதம் அறியநான் அறியேன்
    உறுகணிங் காற்றலேன் சிறிதும்
    தோன்றிஎன் உளத்தே மயக்கெலாந் தவிர்த்துத்
    நன்றருள் புரிவதுன் கடனே.
  • 5. மாயையாற் கலங்கி வருந்திய போதும்
    வள்ளல்உன் தன்னையே மதித்துன்
    சாயையாப்244 பிறரைப் பார்த்ததே அல்லால்
    தலைவவே245 றெண்ணிய துண்டோ
    தூயபொற் பாதம் அறியநான் அறியேன்
    துயர்இனிச் சிறிதும்இங் காற்றேன்
    நாயகா எனது மயக்கெலாம் தவிர்த்தே
    நன்றருள் புரிவதுன் கடனே.
  • 6. வண்ணம் வேறெனினும் வடிவுவே றெனினும்
    மன்னிய உண்மை ஒன்றென்றே
    எண்ணிய தல்லால் சச்சிதா னந்தத்
    திறையும்வே றெண்ணிய துண்டோ
    அண்ணல்நின் பாதம் அறியநான் அறியேன்
    அஞர்இனிச் சிறிதும்இங் காற்றேன்
    திண்ணமே நின்மேல் ஆணைஎன் தன்னைத்
    தெளிவித்துக் காப்பதுன் கடனே.
  • 7. ஊடல்செய் மதமும் சமயமும் இவற்றில்
    உற்றகற் பனைகளும் தவிர்ந்தேன்
    வாடல்செய் மனத்தால் கலங்கினேன் எனினும்
    மன்றினை மறந்ததிங் குண்டோ
    ஆடல்செய் பாதம் அறியநான் அறியேன்
    ஐயவோ சிறிதும்இங் காற்றேன்
    பாடல்செய் கின்றேன் படிக்கின்றேன் எனக்குப்
    பரிந்தருள் புரிவதுன் கடனே.
  • 8. உள்ளதே உள்ள திரண்டிலை எல்லாம்
    ஒருசிவ மயமென உணர்ந்தேன்
    கள்ளநேர் மனத்தால் கலங்கினேன் எனினும்
    கருத்தயல் கருதிய துண்டோ
    வள்ளலுன் பாதம் அறியநான் அறியேன்
    மயக்கினிச் சிறிதும்இங் காற்றேன்
    தெள்ளமு தருளி மயக்கெலாம் தவிர்த்தே
    தெளிவித்தல் நின்கடன் சிவனே.
  • 9. எம்மத நிலையும் நின்னருள் நிலையில்
    இலங்குதல் அறிந்தனன் எல்லாம்
    சம்மதம் ஆக்கிக் கொள்கின்றேன் அல்லால்
    தனித்துவே றெண்ணிய துண்டோ
    செம்மலுன் பாதம் அறியநான் அறியேன்
    சிறிதும்இங் கினித்துயர் ஆற்றேன்
    இம்மதிக் கடியேன் குறித்தவா றுள்ள
    தியற்றுவ துன்கடன் எந்தாய்.
  • 10. அகம்புறம் மற்றை அகப்புறம் புறத்தே
    அடுத்திடும் புறப்புறம் நான்கில்
    இகந்ததும் இலைஓர் ஏகதே சத்தால்
    இறையும்இங் கெண்ணிய துண்டோ
    உகந்தநின் பாதம் அறியநான் அறியேன்
    உறுகணிங் கினிச்சிறி துந்தான்
    இகம்பெறல் ஆற்றேன் மயக்கெலாம் தவிர்த்திங்
    கென்னைஆண் டருள்வ துன்கடனே.

    • 244. சாயையாற் 245. தலைவரென் - படிவேறுபாடுகள். ஆ. பா.

இறை பொறுப் பியம்பல் // பிரிவாற்றாமை

No audios found!