திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
பெறாப் பேறு
peṟāp pēṟu
திருவருட் பெருமை
tiruvaruṭ perumai
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

052. பொதுநடம்
potunaṭam

    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. அருட்பெருஞ் சோதி அமுதமே அமுதம்
    அளித்தெனை வளர்த்திட அருளாம்
    தெருட்பெருந் தாய்தன் கையிலே கொடுத்த
    தெய்வமே சத்தியச் சிவமே
    இருட்பெரு நிலத்தைக் கடத்திஎன் றனைமேல்
    ஏற்றிய இன்பமே எல்லாப்
    பொருட்பெரு நெறியும் காட்டிய குருவே
    பொதுநடம் புரிகின்ற பொருளே.
  • 2. சித்தெலாம் வல்ல சித்தனே ஞான
    சிதம்பர ஜோதியே சிறியேன்
    கத்தெலாம் தவிர்த்துக் கருத்தெலாம் அளித்த
    கடவுளே கருணையங் கடலே
    சத்தெலாம் ஒன்றே சத்தியம் எனஎன்
    தனக்கறி வித்ததோர் தயையே
    புத்தெலாம் நீக்கிப் பொருளெலாம் காட்டும்
    பொதுநடம் புரிகின்ற பொருளே.
  • 3. கலைகளோர் அனந்தம் அனந்தமேல் நோக்கிக்
    கற்பங்கள் கணக்கில கடப்ப
    நிலைகளோர் அனந்தம் நேடியுங் காணா
    நித்திய நிற்குண258 நிறைவே
    அலைகளற் றுயிருக் கமுதளித் தருளும்
    அருட்பெருங் கடல்எனும் அரசே
    புலைகள வகற்றி எனக்குளே நிறைந்து
    பொதுநடம் புரிகின்ற பொருளே.
  • 4. தண்ணிய மதியே தனித்தசெஞ் சுடரே
    சத்திய சாத்தியக் கனலே
    ஒண்ணிய ஒளியே ஒளிக்குள்ஓர் ஒளியே
    உலகெலாந் தழைக்கமெய் உளத்தே
    நண்ணிய விளக்கே எண்ணிய படிக்கே
    நல்கிய ஞானபோ னகமே
    புண்ணிய நிதியே கண்ணிய நிலையே
    பொதுநடம் புரிகின்ற பொருளே.
  • 5. அற்புத நிறைவே சற்புதர்259 அறிவில்
    அறிவென அறிகின்ற அறிவே
    சொற்புனை மாயைக் கற்பனை கடந்த
    துரியநல் நிலத்திலே துலங்கும்
    சிற்பரஞ் சுடரே தற்பர ஞானச்
    செல்வமே சித்தெலாம் புரியும்
    பொற்புலம் அளித்த நற்புலக் கருத்தே
    பொதுநடம் புரிகின்ற பொருளே.
  • 6. தத்துவ பதியே தத்துவம் கடந்த
    தனித்ததோர் சத்திய பதியே
    சத்துவ நெறியில் சார்ந்தசன் மார்க்கர்
    தமக்குளே சார்ந்தநற் சார்பே
    பித்துறு சமயப் பிணக்குறும் அவர்க்குப்
    பெறல்அரி தாகிய260 பேறே
    புத்தமு தளித்தென் உளத்திலே கலந்து
    பொதுநடம் புரிகின்ற பொருளே.
  • 7. மேல்வெளி காட்டி வெளியிலே விளைந்த
    விளைவெலாம் காட்டிமெய் வேத
    நூல்வழி காட்டி என்னுளே விளங்கும்
    நோக்கமே ஆக்கமும் திறலும்
    நால்வகைப் பயனும் அளித்தெனை வளர்க்கும்
    நாயகக் கருணைநற் றாயே
    போலுயிர்க் குயிராய்ப் பொருந்திய மருந்தே
    பொதுநடம் புரிகின்ற பொருளே.
  • 8. அலப்பற விளங்கும் அருட்பெரு விளக்கே
    அரும்பெருஞ் சோதியே சுடரே
    மலப்பிணி அறுத்த வாய்மைஎம் மருந்தே
    மருந்தெலாம் பொருந்திய மணியே
    உலப்பறு கருணைச் செல்வமே எல்லா
    உயிர்க்குளும் நிறைந்ததோர் உணர்வே
    புலப்பகை தவிர்க்கும் பூரண வரமே
    பொதுநடம் புரிகின்ற பொருளே.
  • 9. பரம்பர நிறைவே பராபர வெளியே
    பரமசிற் சுகந்தரும் பதியே
    வரம்பெறு சிவசன் மார்க்கர்தம் மதியில்
    வயங்கிய பெருஞ்சுடர் மணியே
    கரம்பெறு கனியே கனிவுறு சுவையே
    கருதிய கருத்துறு களிப்பே
    புரம்புகழ் நிதியே சிரம்புகல் கதியே
    பொதுநடம் புரிகின்ற பொருளே.
  • 10. வெற்புறு முடியில் தம்பமேல் ஏற்றி
    மெய்ந்நிலை அமர்வித்த வியப்பே
    கற்புறு கருத்தில் இனிக்கின்ற கரும்பே
    கருணைவான் அமுதத்தெண் கடலே
    அற்புறும் அறிவில் அருள்ஒளி ஆகி
    ஆனந்த மாம்அனு பவமே
    பொற்புறு பதியே அற்புத நிதியே
    பொதுநடம் புரிகின்ற பொருளே.
  • 11. தன்மைகாண் பரிய தலைவனே எல்லாம்
    தரவல்ல சம்புவே சமயப்
    புன்மைநீத் தகமும் புறமும்ஒத் தமைந்த
    புண்ணியர் நண்ணிய புகலே
    வன்மைசேர் மனத்தை நன்மைசேர் மனமா
    வயங்குவித் தமர்ந்தமெய் வாழ்வே
    பொன்மைசார் கனகப் பொதுவொடு ஞானப்
    பொதுநடம் புரிகின்ற பொருளே.
  • 12. மூவிரு முடிபின் முடிந்ததோர்262 முடிபே
    முடிபெலாம் கடந்ததோர் முதலே
    தாவிய முதலும் கடையும்மேற் காட்டாச்
    சத்தியத் தனிநடு நிலையே
    மேவிய நடுவில் விளங்கிய விளைவே
    விளைவெலாம் தருகின்ற வெளியே
    பூவியல் அளித்த புனிதசற் குருவே
    பொதுநடம் புரிகின்ற பொருளே.
  • 13. வேதமும் பொருளும் பயனும்ஓர் அடைவும்
    விளம்பிய அனுபவ விளைவும்
    போதமும் சுகமும் ஆகிஇங் கிவைகள்
    போனது மாய்ஒளிர் புலமே
    ஏதமுற் றிருந்த ஏழையேன் பொருட்டிவ்
    விருநிலத் தியல்அருள் ஒளியால்
    பூதநல் வடிவம் காட்டிஎன் உளத்தே
    பொதுநடம் புரிகின்ற பொருளே.
  • 14. அடியனேன் பொருட்டிவ் வவனிமேல் கருணை
    அருள்வடி வெடுத்தெழுந் தருளி
    நெடியனே முதலோர் பெறற்கரும் சித்தி
    நிலைஎலாம் அளித்தமா நிதியே
    மடிவுறா தென்றும் சுத்தசன் மார்க்கம்
    வயங்கநல் வரந்தந்த வாழ்வே
    பொடிஅணி கனகப் பொருப்பொளிர் நெருப்பே
    பொதுநடம் புரிகின்ற பொருளே.
  • 15. என்பிழை அனைத்தும் பொறுத்தருள் புரிந்தென்
    இதயத்தில் இருக்கின்ற குருவே
    அன்புடை அரசே அப்பனே என்றன்
    அம்மையே அருட்பெருஞ் சோதி
    இன்புறு நிலையில் ஏற்றிய துணையே
    என்னுயிர் நாதனே என்னைப்
    பொன்புனை மாலை புனைந்தஓர் பதியே
    பொதுநடம் புரிகின்ற பொருளே.
  • 16. சத்திய பதியே சத்திய நிதியே
    சத்திய ஞானமே வேத
    நித்திய நிலையே நித்திய நிறைவே
    நித்திய வாழ்வருள் நெறியே
    சித்திஇன் புருவே சித்தியின் கருவே
    சித்தியிற் சித்தியே எனது
    புத்தியின் தெளிவே புத்தமு தளித்துப்
    பொதுநடம் புரிகின்ற பொருளே.
  • 17. சிதத்தொளிர் பரமே பரத்தொளிர் பதியே
    சிவபத அனுபவச் சிவமே
    மதத்தடை தவிர்த்த மதிமதி மதியே
    மதிநிறை அமுதநல் வாய்ப்பே
    சதத்திரு நெறியே தனிநெறித் துணையே
    சாமியே தந்தையே தாயே
    புதப்பெரு வரமே புகற்கருந் தரமே
    பொதுநடம் புரிகின்ற பொருளே.
  • 18. கலைவளர் கலையே கலையினுட் கலையே
    கலைஎலாம் தரும்ஒரு கருவே
    நிலைவளர் கருவுட் கருஎன வயங்கும்
    நித்திய வானமே ஞான
    மலைவளர் மருந்தே மருந்துறு பலனே
    மாபலம் தருகின்ற வாழ்வே
    புலைதவிர்த் தெனையும் பொருளெனக் கொண்டு
    பொதுநடம் புரிகின்ற பொருளே.
  • 19. மெய்ம்மையே கிடைத்த மெய்ம்மையே ஞான
    விளக்கமே விளக்கத்தின் வியப்பே
    கைம்மையே தவிர்த்து மங்கலம் அளித்த
    கருணையே கரிசிலாக் களிப்பே
    ஐம்மையே அதற்குள் அதுஅது ஆகும்
    அற்புதக் காட்சியே எனது
    பொய்ம்மையே பொருத்துப் புகலளித் தருளிப்
    பொதுநடம் புரிகின்ற பொருளே.
  • 20. காரண அருவே காரிய உருவே
    காரண காரியம் காட்டி
    ஆரண முடியும் ஆகம முடியும்
    அமர்ந்தொளிர் அற்புதச் சுடரே
    நாரண தலமே263 நாரண வலமே
    நாரணா காரத்தின் ஞாங்கர்ப்
    பூரண ஒளிசெய் பூரண சிவமே
    பொதுநடம் புரிகின்ற பொருளே.

    • 258. நிர்க்குண - முதற்பதிப்பு. பொ. சு., பி. இரா., ச. மு. க.
    • 259. சற்புதர் - நல்லறிவுடையவர்.
    • 260. பெரிதரிதாகிய - பொ. சு. பதிப்பு.
    • 261. தண்கடலே - படிவேறுபாடு. ஆ. பா.
    • 262. முடிந்தவோர் - முதற்பதிப்பு, பொ. சு., பி. இரா., ச. மு. க., ஆ. பா.
    • 263. தரமே - முதற்பதிப்பு. பொ. சு., ஆ. பா.

பொதுநடம் புரிகின்ற பொருள் // பொதுநடம்

No audios found!