திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
அம்பலவாணர் அணையவருகை
ampalavāṇar aṇaiyavarukai
ஆடேடி பந்து
āṭēṭi pantu
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

115. அம்பலவாணர் ஆடவருகை
ampalavāṇar āṭavarukai

    சிந்து
    திருச்சிற்றம்பலம்
    பல்லவி
  • 1. ஆடவா ரீர் என்னோ டாடவா ரீர்
    அம்பலத்தில் ஆடுகின்றீர் ஆடவா ரீர்.
  • கண்ணிகள்
  • 2. தன்மைபிறர்க் கறிவரியீர் ஆடவா ரீர்
    தனித்தலைமைப் பெரும்பதியீர் ஆடவா ரீர்
    வன்மைமனத் தவர்க்கரியீர் ஆடவா ரீர்
    வஞ்சமிலா நெஞ்சகத்தீர் ஆடவா ரீர்
    தொன்மைமறை முடியமர்ந்தீர் ஆடவா ரீர்
    துரியபதங் கடந்தவரே ஆடவா ரீர்
    இன்மைதவிர்த் தெனைமணந்தீர் ஆடவா ரீர்.
    என்னுடைய நாயகரே ஆடவா ரீர் ஆடவா ரீர்
  • 3. திருவாளர் போற்ற என்னோ டாடவா ரீர்
    திருவனையார் வாழ்த்தஇங்கே ஆடவா ரீர்
    பெருவாய்மைப் பெருந்தகையீர் ஆடவா ரீர்
    பேராசை பொங்குகின்றேன் ஆடவா ரீர்
    உருவாகி ஓங்குகின்றீர் ஆடவா ரீர்
    உத்தமரே இதுதருணம் ஆடவா ரீர்
    இருவாணர் ஏத்தநின்றீர் ஆடவா ரீர்
    என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
  • 4. வேற்றுமுகம் பாரேன்என்னோ டாடவா ரீர்
    வெட்கமெல்லாம் விட்டுவிட்டேன் ஆடவா ரீர்
    மாற்றுதற்கெண் ணாதிர்என்னோ டாடவா ரீர்
    மாற்றில்உயிர் மாய்ப்பேன்கண்டீர் ஆடவா ரீர்
    கூற்றுதைத்த சேவடியீர் ஆடவா ரீர்
    கொண்டுகுலங் குறியாதீர் ஆடவா ரீர்
    ஏற்றதனித் தருணமீதே ஆடவா ரீர்
    என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
  • 5. இல்லாமை நீக்கிநின்றீர் ஆடவா ரீர்
    என்னைமண மாலையிட்டீர் ஆடவா ரீர்
    கொல்லாமை நெறிஎன்றீர் ஆடவா ரீர்
    குற்றமெலாங் குணங்கொண்டீர் ஆடவா ரீர்
    நல்லார்சொல் நல்லவரே ஆடவா ரீர்
    நற்றாயில் இனியவரே ஆடவா ரீர்
    எல்லாம்செய் வல்லவரே ஆடவா ரீர்
    என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
  • 6. ஆசைகொண்டேன் ஆடஎன்னோ டாடவா ரீர்
    ஆசைவெட்கம் அறியாதால் ஆடவா ரீர்
    ஓசைகொண்ட தெங்குமிங்கே ஆடவா ரீர்
    உம்ஆணை உம்மைவிடேன் ஆடவா ரீர்
    காசுபணத் தாசையிலேன் ஆடவா ரீர்
    கைபிடித்தாற் போதும்என்னோ டாடவா ரீர்
    ஏசறல்நீத் தெனைஆண்டீர் ஆடவா ரீர்
    என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
  • 7. சன்மார்க்க நெறிவைத்தீர் ஆடவா ரீர்
    சாகாத வரந்தந்தீர் ஆடவா ரீர்
    கன்மார்க்க மனங்கரைத்தீர் ஆடவா ரீர்
    கண்ணிசைந்த கணவரேநீர் ஆடவா ரீர்
    சொன்மார்க்கப் பொருளானீர் ஆடவா ரீர்
    சுத்தஅருட் சோதியரே ஆடவா ரீர்
    என்மார்க்கம் உளத்துகந்தீர் ஆடவா ரீர்
    என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
  • 8. அண்டமெலாம் கண்டவரே ஆடவா ரீர்
    அகண்டபரி பூரணரே ஆடவா ரீர்
    பண்டமெலாம் படைத்தவரே ஆடவா ரீர்
    பற்றொடுவீ டில்லவரே ஆடவா ரீர்
    கொண்டெனைவந் தாண்டவரே ஆடவா ரீர்
    கூத்தாட வல்லவரே ஆடவா ரீர்
    எண்தகுபொற் சபையுடையீர் ஆடவா ரீர்
    என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
  • 9. பேதநினை யாதுவிரைந் தாடவா ரீர்
    பின்பாட்டுக் காலையிதே ஆடவா ரீர்
    ஓதஉல வாதவரே ஆடவா ரீர்
    உள்ளாசை பொங்குகின்ற தாடவா ரீர்
    சாதல்அறுத் தெனைஆண்டீர் ஆடவா ரீர்
    தனித்தலைமைப் பெரும்பதியீர் ஆடவா ரீர்
    ஏதமறுத் தவர்க்கினியீர் ஆடவா ரீர்
    என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
  • 10. கள்ளமொன்றும் அறியேன்நான் ஆடவா ரீர்
    கைகலந்து கொண்டீர்என்னோ டாடவா ரீர்
    உள்ளபடி உரைக்கின்றேன் ஆடவா ரீர்
    உம்மாசை பொங்குகின்ற தாடவா ரீர்
    தள்ளரியேன் என்னோடிங்கே ஆடவா ரீர்
    தாழ்க்கில்இறை யும்தரியேன் ஆடவா ரீர்
    எள்ளல்அறுத் தாண்டுகொண்டீர் ஆடவா ரீர்
    என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
  • 11. நச்சுகின்றேன் நிச்சலிங்கே ஆடவா ரீர்
    நாணமச்சம் விட்டேனென்னோ டாடவா ரீர்
    விச்சையெலாம் தந்துகளித் தாடவா ரீர்
    வியந்துரைத்த தருணமிதே ஆடவா ரீர்
    எச்சுகமும் ஆகிநின்றீர் ஆடவா ரீர்
    எல்லாம்செய் வல்லவரே ஆடவா ரீர்.
    இச்சைமய மாய்இருந்தேன் ஆடவா ரீர்
    என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
  • 12. என்உயிருக் குயிரானீர் ஆடவா ரீர்
    என்அறிவுக் கறிவானீர் ஆடவா ரீர்
    என்னுடைஎன் பிற்கலந்தீர் ஆடவா ரீர்
    என்னுடையஉள் ளத்திருந்தீர் ஆடவா ரீர்
    என்உரிமைத் தாயனையீர் ஆடவா ரீர்
    எனதுதனித் தந்தையரே ஆடவா ரீர்
    என்ஒருமைச் சற்குருவே ஆடவா ரீர்
    என்னுடைய நாயகரே ஆடவா ரீர்.
  • 13. ஆடவா ரீர் என்னோ டாடவா ரீர்
    அம்பலத்தில் ஆடுகின்றீர் ஆடவா ரீர்.

அம்பலவாணர் ஆடவருகை // அம்பலவாணர் ஆடவருகை