திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
ஞானசரியை (வாய்பறை ஆர்த்தல்)
ñāṉasariyai (vāypaṟai ārttal)
உலகப்பேறு
ulakappēṟu
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

108. சமாதி வற்புறுத்தல்
samāti vaṟpuṟuttal

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. ஆய்உரைத்த அருட்ஜோதி வருகின்ற
    தருணம்இதே அறிமின் என்றே
    வாய்உரைத்த வார்த்தைஎன்றன் வார்த்தைகள்என்
    கின்றார்இம் மனிதர்அந்தோ
    தாய்உரைத்த திருப்பொதுவில் நடம்புரிந்தென்
    உளங்கலந்த தலைவா இங்கே
    நீஉரைத்த திருவார்த்தை எனஅறியார்
    இவர்அறிவின் நிகழ்ச்சி என்னே.
  • 2. இறந்தவர்கள் பலரும்இங்கே எழுகின்ற
    தருணம்இதே என்று வாய்மை
    அறந்தழைய உரைக்கின்ற வார்த்தைகள்என்
    வார்த்தைகள்என் றறைகின் றாரால்
    மறந்தசிறி யேன்உரைக்க வல்லேனோ
    எல்லாஞ்செய் வல்லோய் உன்றன்
    சிறந்ததிரு வார்த்தைஎனத் தெரிந்திலர்இம்
    மனிதர்மதித் திறமை என்னே.
  • 3. சோற்றாசை யொடுகாமச் சேற்றாசைப்
    படுவாரைத் துணிந்து கொல்லக்
    கூற்றாசைப் படும்எனநான் கூறுகின்ற
    துண்மையினில் கொண்டு நீவீர்
    நேற்றாசைப் பட்டவருக் கின்றருள்வார்
    போலும்அன்றி நினைத்த வாங்கே
    பேற்றாசைக் கருள்புரியும் ஞானசபா
    பதிப்புகழைப் பேசு வீரே.
  • 4. தொண்டாளப் பணந்தேடுந் துறையாள
    உலகாளச் சூழ்ந்த காமப்
    பெண்டாளத் திரிகின்ற பேய்மனத்தீர்
    நும்முயிரைப் பிடிக்க நாளைச்
    சண்டாளக் கூற்றுவரில் என்புகல்வீர்
    ஞானசபைத் தலைவன் உம்மைக்
    கொண்டாளக் கருதுமினோ ஆண்டபின்னர்
    இவ்வுலகில் குலாவு வீரே.
  • 5. பிறந்தவரை நீராட்டிப் பெருகவளர்த்
    திடுகின்றீர் பேய ரேநீர்
    இறந்தவரைச் சுடுகின்றீர் எவ்வணஞ்சம்
    மதித்தீரோ இரவில் தூங்கி
    மறந்தவரைத் தீமூட்ட வல்லீரால்
    நும்மனத்தை வயிரம் ஆன
    சிறந்தவரை எனப்புகழச் செய்துகொண்டீர்
    ஏன்பிறந்து திரிகின் றீரே.
  • 6. அணங்கெழுபே ரோசையொடும் பறையோசை
    பொங்கக்கோ ரணிகொண் டந்தோ
    பிணங்கழுவி எடுத்துப்போய்ச் சுடுகின்றீர்
    இனிச்சாகும் பிணங்க ளேநீர்
    கணங்கழுகுண் டாலும்ஒரு பயனுண்டே
    என்னபயன் கண்டீர் சுட்டே
    எணங்கெழுசாம் பலைக்கண்டீர் அதுபுன்செய்
    எருவுக்கும் இயலா தன்றே.
  • 7. குணம்புதைக்க உயிரடக்கம் கொண்டதுசுட்
    டால்அதுதான் கொலையாம் என்றே
    வணம்புதைக்க வேண்டும்என வாய்தடிக்கச்
    சொல்கின்றேன் வார்த்தை கேட்டும்
    பிணம்புதைக்கச் சம்மதியீர் பணம்புதைக்கச்
    சம்மதிக்கும் பேய ரேநீர்
    எணம்புதைக்கத் துயில்வார்நும் பாற்றுயிலற்
    கஞ்சுவரே இழுதை யீரே.
  • 8. கட்டாலும் கனத்தாலும் களிக்கின்ற
    பேயுலகீர் கலைசோர்ந் தாரைப்
    பொட்டாலும் துகிலாலும் புனைவித்துச்
    சுடுகின்றீர் புதைக்க நேரீர்
    சுட்டாலும் சுடுமதுகண் டுமதுடம்பு
    துடியாதென் சொல்லீர் நும்மைத்
    தொட்டாலும் தோஷமுறும் விட்டாலும்
    கதியிலைமேல் சூழ்வீர் அன்றே.
  • 9. பரன்அளிக்கும் தேகம்இது சுடுவதப
    ராதம்எனப் பகர்கின் றேன்நீர்
    சிரம்நெளிக்கச் சுடுகின்றீர் செத்தவர்கள்
    பற்பலரும் சித்த சாமி
    உரனளிக்க எழுகின்ற திருநாள்வந்
    தடுத்தனஈ துணர்ந்து நல்லோர்
    வரனளிக்கப் புதைத்தநிலை கா­ரோ
    கண்கெட்ட மாட்டி னீரே.
  • 10. புலைத்தொழிலே புரிகின்றீர் புண்ணியத்தைக்
    கருங்கடலில் போக விட்டீர்
    கொலைத்தொழிலில் கொடியீர்நீர் செத்தாரைச்
    சுடுகின்ற கொடுமை நோக்கிக்
    கலைத்தொழிலில் பெரியர்உளம் கலங்கினர்அக்
    கலக்கம்எலாம் கடவுள்நீக்கித்
    தலைத்தொழில்செய் சன்மார்க்கம் தலைஎடுக்கப்
    புரிகுவதித் தருணம் தானே.

சமாதி வற்புறுத்தல் // சமாதி வற்புறுத்தல்

No audios found!