திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
தலைவி வருந்தல்
talaivi varuntal
திருவடிப் பெருமை
tiruvaṭip perumai
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

079. நற்றாய் செவிலிக்குக் கூறல்
naṟṟāy sevilikkuk kūṟal

    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. உணர்ந்தவர் தமக்கும் உணர்வரி யான்என்
    உள்ளகத் தமர்ந்தனன் என்றாள்
    அணிந்தனன் எனக்கே அருண்மண மாலை
    அதிசயம் அதிசயம் என்றாள்
    துணிந்துநான் தனித்த போதுவந் தென்கை
    தொட்டனன் பிடித்தனன் என்றாள்
    புணர்ந்தனன் கலந்தான் என்றுளே களித்துப்
    பொங்கினாள் நான்பெற்ற பொன்னே.
  • 2. தனிப்பெரும் பதியே என்பதி ஆகத்
    தவம்எது புரிந்ததோ என்றாள்
    அனித்தநீத் தெனைத்தான் அன்பினால் அணைத்தான்
    அதிசயம் அதிசயம் என்றாள்
    இனித்துயர் சிறிதும் அடைந்திடேன் என்றாள்
    எனக்கிணை யார்கொலோ என்றாள்
    சனிப்பிறப் பறுத்தேன் என்றுளே களிப்புத்
    ததும்பினாள் நான்பெற்ற தனியே.
  • 3. புண்ணிய பதியைப் புணர்ந்தனன் நான்செய்
    புண்ணியம் புகல்அரி தென்றாள்
    தண்ணிய மதியின் அமுதெனக் களித்த
    தயவைநான் மறப்பனோ என்றாள்
    எண்ணிய அனைத்தும் ஈந்தருள் கின்றான்
    என்னையோ என்னையோ என்றாள்
    அண்ணிய பேரா னந்தமே வடிவம்
    ஆயினாள் நான்பெற்ற அணங்கே.
  • 4. சத்திய ஞான சபாபதி எனக்கே
    தனிப்பதி ஆயினான் என்றாள்
    நித்திய வாழ்வு பெற்றுநான் இன்ப
    நிலைதனில் நிறைந்தனன் என்றாள்
    பித்தியல் உலகீர் காண்மினோ சித்திப்
    பேறெலாம் என்வசத் தென்றாள்
    எத்திசை யீரும் ஒத்திவண் வருக
    என்றனள் எனதுமெல் லியலே.
  • 5. திருமணிப் பொதுவில் ஒருபெரும் பதிஎன்
    சிந்தையில் கலந்தனன் என்றாள்
    பெருமையில் சிறந்தேன் என்பெருந் தவத்தைப்
    பேசுதல் அரிதரி தென்றாள்
    இருமையும் என்போல் ஒருமையில் பெற்றார்
    யாண்டுளர் யாண்டுளர் என்றாள்
    மருமலர் முகத்தே இளநகை துளும்ப
    வயங்கினாள் நான்பெற்ற மகளே.
  • 6. வள்ளலைப் புணர்ந்தேன் அம்மவோ இதுதான்
    மாலையோ காலையோ என்றாள்
    எள்ளலைத் தவிர்ந்தேன் உலகெலாம் எனக்கே
    ஏவல்செய் கின்றன என்றாள்
    தெள்ளமு தருந்தி அழிவிலா உடம்பும்
    சித்தியும் பெற்றனன் என்றாள்
    துள்ளிய மடவீர் காண்மினோ என்றாள்
    சோர்விலாள் நான்பெற்ற சுதையே.
  • 7. கனகமா மன்றில் நடம்புரி பதங்கள்
    கண்டனன் கண்டனன் என்றாள்
    அனகசிற் சபையில் ஒருபெரும் பதிஎன்
    அன்பிலே கலந்தனன் என்றாள்
    தினகர சோமாக் கினிஎலாம் எனக்கே
    செயல்செயத் தந்தனன் என்றாள்
    தனகரத் தெனைத்தான் தழுவினான் என்றாள்
    தவத்தினால் பெற்றநம் தனியே.
  • 8. கொடிப்பெரு மணிப்பொற் கோயில்என் உளமாக்
    கொண்டுவந் தமர்ந்தனன் என்றாள்
    கடிப்புது மலர்ப்பூங் கண்ணிவேய்ந் தெனைத்தான்
    கடிமணம் புரிந்தனன் என்றாள்
    ஒடிப்பற எல்லாம் வல்லதோர் சித்தாம்
    ஒளிஎனக் களித்தனன் என்றாள்
    இடிப்பொடு நொடித்தீர் காண்மினோ என்றாள்
    என்தவத் தியன்றமெல் லியலே.
  • 9. வாழிமா மணிமன் றிறைவனே எனக்கு
    மாலைவந் தணிந்தனன் என்றாள்
    ஊழிதோ றூழி உலவினும் அழியா
    உடம்பெனக் களித்தனன் என்றாள்
    ஆழிசூழ் உலகோ டண்டங்கள் அனைத்தும்
    அளிக்கஎன் றருளினான் என்றாள்
    ஏழியன் மாட மிசையுற வைத்தான்
    என்றனள் எனதுமெல் லியலே.
  • 10. ஏலுநன் மணிமா மன்றருட் சோதி
    என்னுளத் தமர்ந்தனன் என்றாள்
    பாலும்இன் சுவையும் போன்றென தாவி
    பற்றினன் கலந்தனன் என்றாள்
    சாலும்எவ் வுலகும் தழைக்கஎன் தனக்கே
    சத்தியை அளித்தனன் என்றாள்
    மேலும்எக் காலும் அழிவிலேன் என்றாள்
    மிகுகளிப் புற்றனள் வியந்தே.

நற்றாய் செவிலிக்குக் கூறல் // நற்றாய் செவிலிக்குக் கூறல்

No audios found!