திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
தரிசனை வேட்கை
tarisaṉai vēṭkai
ஏத்தாப் பிறவி இழிவு
ēttāp piṟavi iḻivu
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

041. நாள்எண்ணி வருந்தல்
nāḷeṇṇi varuntal

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. இன்னும் எத்தனை நாள்செலும் ஏழையேன் இடர்க்கடல் விடுத்தேற
    மின்னும் வேற்படை மிளிர்தரும் கைத்தல வித்தகப் பெருமானே
    துன்னும் நற்றணி காசலத் தமர்ந்தருள் தோன்றலே மயில்ஏறி
    மன்னும் உத்தம வள்ளலே நின்திரு மனக்கருத் தறியேனே.
  • 2. ஈறி லாதநின் அருள்பெற எனக்கினும் எத்தனை நாட்செல்லும்
    மாறி லாதவர் மனத்தொளிர் சோதியே மயில்மிசை வரும்வாழ்வே
    து‘றி லாவளச் சோலைசூழ் தணிகைவாழ் சுத்தசின் மயத்தேவே
    ஊறி லாப்பெரு நிலையஆ னந்தமே ஒப்பிலான் அருட்பேறே.
  • 3. கூழை மாமுகில் அனையவர் முலைத்தலைக் குளித்துழன் றலைகின்ற
    ஏழை நெஞ்சினேன் எத்தனை நாள்செல்லும் இடர்க்கடல் விடுத்தேற
    மாழை மேனியன் வழுத்துமா ணிக்கமே வாழ்த்துவா ரவர்பொல்லா
    ஊழை நீக்கிநல் அருள்தருந் தெய்வமே உத்தமச் சுகவாழ்வே.
  • 4. ஐய இன்னும்நான் எத்தனை நாள்செலும் அல்லல்விட் டருள்மேவத்
    துய்ய நன்னெறி மன்னிய அடியர்தம் துயர்தவிர்த் தருள்வோனே
    வெய்ய நெஞ்சினர் எட்டொணா மெய்யனே வேல்கொளும் கரத்தோனே
    செய்ய மேனிஎஞ் சிவபிரான் பெற்றநற் செல்வனே திறலோனே.
  • 5. பாவி யேன் இன்னும் எத்தனை நாள்செலும் பருவரல் விடுத்துய்யக்
    கூவி யேஅன்பர்க் கருள்தரும் வள்ளலே குணப்பெருங் குன்றேஎன்
    ஆவி யேஎனை ஆள்குரு வடிவமே ஆனந்தப் பெருவாழ்வே
    வாவி ஏர்தரும் தணிகைமா மலைமிசை மன்னிய அருள்தேனே.
  • 6. எளிய னேன்இன்னும் எத்தனை நாள்செலும் இடர்க்கடல் விடுத்தேற
    ஒளிஅ னேகமாய்த் திரண்டிடும் சிற்பர உருவமே உருவில்லா
    வெளிய தாகிய வத்துவே முத்தியின் மெய்ப்பயன் தருவித்தே
    அளிய தாகிய நெஞ்சினர்க் கருள்தரும் ஆறுமா முகத்தேவே.
  • 7. தொண்ட னேன்இன்னும் எத்தனை நாள்செலும் துயர்க்கடல் விடுத்தேற
    அண்ட னேஅண்டர்க் கருள்தரும் பரசிவன் அருளிய பெருவாழ்வே
    கண்ட னேகர்வந் தனைசெய அசுரனைக் களைந்தருள் களைகண்ணே
    விண்ட னேர்புகுஞ் சிகரிசூழ் தணிகையில் விளங்கிய வேலோனே.
  • 8. வீண னேன்இன்னும் எத்தனை நாள்செல்லும் வெந்துயர்க் கடல்நீந்தக்
    காண வானவர்க் கரும்பெருந் தலைவனே கருணையங் கண்ணானே
    தூண நேர்புயச் சுந்தர வடிவனே துளக்கிலார்க் கருள்ஈயும்
    ஏண னேஎனை ஏன்றுகொள் தேசிக இறைவனே இயலோனே.
  • 9. கடைய னேன்இன்னும் எத்தனை நாள்செலும் கடுந்துயர்க் கடல்நீந்த
    விடையின் ஏறிய சிவபிரான் பெற்றருள் வியன்திரு மகப்பேறே
    உடைய நாயகிக் கொருபெருஞ் செல்வமே உலகெலாம் அளிப்போனே
    அடைய நின்றவர்க் கருள்செயுந் தணிகைவாழ் ஆனந்தத் தெளிதேனே.
  • 10. பேய னேன்இன்னும் எத்தனை நாள்செலும் பெருந்துயர்க் கடல்நீந்த
    மாய னேமுதல் வானவர் தமக்கருள் மணிமிடற் றிறையோர்க்குச்
    சேய னேஅகந் தெளிந்தவர்க் கினியனே செல்வனே எனைக்காக்குந்
    தாய னேஎன்றன் சற்குரு நாதனே தணிகைமா மலையானே.

நாள்எண்ணி வருந்தல் // நாள்எண்ணி வருந்தல்