திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
ஏத்தாப் பிறவி இழிவு
ēttāp piṟavi iḻivu
திருவருள் விலாசப் பத்து
tiruvaruḷ vilāsap pattu
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

043. பவனிச் செருக்கு
pavaṉich serukku

    கலி விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. பூவுண்டவெள் விடைஏறிய புனிதன்தரு மகனார்
    பாவுண்டதொர் அமுதன்னவர் பசுமாமயில் மேல்வந்
    தாவுண்டனர் எனதின்னலம் அறியார்என இருந்தால்
    நாவுண்டவர் திருமுன்பிது நலம் அன்றுமக் கெனவே.
  • 2. ஒன்றார்புரம் எரிசெய்தவர் ஒற்றித்திரு நகரார்
    மன்றார்நடம் உடையார்தரு மகனார்பசு மயில்மேல்
    நின்றார்அது கண்டேன்கலை நில்லாது கழன்ற
    தென்றாரொடு சொல்வேன்எனை யானேமறந் தேனே.
  • 3. வாரார்முலை உமையாள்திரு மணவாளர்தம் மகனார்
    ஆராஅமு தனையார்உயிர் அனையார்அயில் அவனார்
    நேரார்பணி மயிலின்மிசை நின்றார்அது கண்டேன்
    நீரார்விழி இமைநீங்கின நிறைநீங்கிய தன்றே.
  • 4. ஒன்றோடிரண் டெனுங்கண்ணினர் உதவுந்திரு மகனார்
    என்றோடிகல் எழிலார்மயில் ஏறிஅங் குற்றார்
    நன்றோடினன் மகிழ்கூர்ந்தவர் நகைமாமுகங் கண்டேன்
    கன்றோடின பசுவாடின கலைஊடின அன்றே.
  • 5. மலைவாங்குவில் அரனார்திரு மகனார்பசு மயிலின்
    நிலைதாங்குற நின்றார்அவர் நிற்கும்நிலை கண்டேன்
    அலைதீங்கின குழல்தூங்கின அகம்ஏங்கின அரைமேல்
    கலைநீங்கின முலைவீங்கின களிஓங்கின அன்றே.
  • 6. மான்கண்டகை உடையார்தரு மகனார்தமை மயில்மேல்
    நான்கண்டனன் அவர்கண்டனர் நகைகொண்டனம் உடனே
    மீன்கண்டன விழியார்அது பழியாக விளைத்தார்
    ஏன்கண்டனை என்றாள்அனை என்என்றுரைக் கேனே.
  • 7. செங்கண்விடை தனில்ஏறிய சிவனார்திரு மகனார்
    எங்கண்மணி அனையார்மயி லின்மீதுவந் திட்டார்
    அங்கண்மிக மகிழ்வோடுசென் றவர்நின்றது கண்டேன்
    இங்கண்வளை இழந்தேன்மயல் உழந்தேன்கலை எனவே.
  • 8. தண்தேன்பொழி இதழிப்பொலி சடையார்தரு மகனார்
    பண்தேன்புரி தொடையார்தமைப் பசுமாமயில் மீதில்
    கண்டேன்வளை காணேன்கலை காணேன்மிகு காமம்
    கொண்டேன்துயில் விண்டேன்ஒன்றும் கூறேன்வரு மாறே.
  • 9. மாவீழ்ந்திடு விடையார்திரு மகனார்பசு மயில்மேல்
    நீவீழ்ந்திட நின்றார்அது கண்டேன்என்றன் நெஞ்சே
    பூவீழ்ந்தது வண்டேமதி போய்வீழ்ந்தது வண்டே
    நாவீழ்ந்தது மலரேகழை நாண்வீழ்ந்தது மலரே.
  • 10. வெற்றார்புரம் எரித்தார்தரும் மேலார்மயில் மேலே
    உற்றார்அவர் எழில்மாமுகத் துள்ளேநகை கண்டேன்
    பொற்றார்புயங் கண்டேன்துயர் விண்டேன்எனைப் போல
    மற்றார்பெறு வாரோஇனி வாழ்வேன்மனம் மகிழ்ந்தே.

பவனிச் செருக்கு // பவனிச் செருக்கு