திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
திருவருள் விலாசப் பத்து
tiruvaruḷ vilāsap pattu
செல்வச் சீர்த்தி மாலை
selvach sīrtti mālai
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

045. திருவருட் பேற்று விழைவு
tiruvaruṭ pēṟṟu viḻaivu

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. உலகம் பரவும் பரஞ்சோதி உருவாம் குருவே உம்பரிடைக்
    கலகம் தருசூர்க் கிளைகளைந்த கதிர்வேல் அரசே கவின்தருசீர்த்
    திலகம் திகழ்வாள் நுதற்பரையின் செல்வப் புதல்வா திறல்அதனால்
    இலகும் கலப மயிற்பரிமேல் ஏறும் பரிசென் இயம்புகவே.
  • 2. புகுவா னவர்தம் இடர்முழுதும் போக்கும் கதிர்வேல் புண்ணியனே
    மிகுவான் முதலாம் பூதம்எலாம் விதித்தே நடத்தும் விளைவனைத்தும்
    தகுவான் பொருளாம் உனதருளே என்றால் அடியேன் தனைஇங்கே
    நகுவான் வருவித் திருள்நெறிக்கே நடத்தல் அழகோ நவிலாயே.
  • 3. அழகா அமலா அருளாளா அறிவா அறிவார் அகம்மேவும்
    குழகா குமரா எனைஆண்ட கோவே நின்சீர் குறியாரைப்
    பழகா வண்ணம் எனக்கருளிப் பரனே நின்னைப் பணிகின்றோர்க்
    கழகா தரவாம் பணிபுரிவார் அடியார்க் கடிமை ஆக்குகவே.
  • 4. ஆக்கும் தொழிலால் களித்தானை அடக்குந் தொழிலால் அடக்கிப்பின்
    காக்கும் தொழிலால் அருள்புரிந்த கருணைக் கடலே கடைநோக்கால்
    நோக்கும் தொழில்ஓர் சிறிதுன்பால் உளதேல் மாயா நொடிப்பெல்லாம்
    போக்கும் தொழில்என் பால்உண்டாம் இதற்கென் புரிவேன் புண்ணியனே.
  • 5. புரிவேன் விரதம் தவந்தானம் புரியா தொழிவேன் புண்ணியமே
    பரிவேன் பாவம் பரிவேன்இப் பரிசால் ஒன்றும் பயன்காணேன்
    திரிவேன் நினது புகழ்பாடிச் சிறியேன் இதனைத் தீர்வேனேல்
    எரிவேன் எரிவாய் நரகத்தே இருப்பேன் இளைப்பேன் விளைப்பேனே.
  • 6. விளைப்பேன் பவமே அடிச்சிறியேன் வினையால் விளையும் வினைப்போகம்
    திளைப்பேன் எனினும் கதிர்வடிவேல் தேவே என்னும் திருமொழியால்
    இளைப்பேன் அலன்இங் கியம்புகிற்பேன் எனக்கென் குறையுண் டெமதூதன்
    வளைப்பேன் எனவந் திடில்அவனை மடிப்பேன் கருணை வலத்தாலே.
  • 7. வலத்தால் வடிவேல் கரத்தேந்தும் மணியே நின்னை வழுத்துகின்ற
    நலத்தால்உயர்ந்த பெருந்தவர்பால் நண்ணும் பரிசு நல்கினையேல்
    தலத்தால் உயர்ந்த வானவரும் தமியேற் கிணையோ சடமான
    மலத்தால் வருந்தாப் பெருவாழ்வால் மகிழ்வேன் இன்பம் வளர்வேனே.
  • 8. இன்பப் பெருக்கே அருட்கடலே இறையே அழியா இரும்பொருளே
    அன்பர்க் கருளும் பெருங்கருணை அரசே உணர்வால் ஆம்பயனே
    வன்பர்க் கரிதாம் பரஞ்சோதி வடிவேல் மணியே அணியேஎன்
    துன்பத் திடரைப் பொடியாக்கிச் சுகந்தந் தருளத் துணியாயே.
  • 9. சுகமே அடியர் உளத்தோங்கும் சுடரே அழியாத் துணையேஎன்
    அகமே புகுந்த அருள்தேவே அருமா மணியே ஆரமுதே
    இகமே பரத்தும் உனக்கன்றி எத்தே வருக்கும் எமக்கருள
    முகமே திலைஎம் பெருமானே நினக்குண் டாறு முகமலரே.
  • 10. ஆறு முகமும் திணிதோள்ஈ ராறும் கருணை அடித்துணையும்
    வீறு மயிலும் தனிக்கடவுள் வேலும் துணைஉண் டெமக்கிங்கே
    சீறும் பிணியும் கொடுங்கோளும் தீய வினையும் செறியாவே
    நாறும் பகட்டான் அதிகாரம் நடவா துலகம் பரவுறுமே.

திருவருட் பேற்று விழைவு // திருவருட் பேற்று விழைவு