திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
எண்ணப் பத்து
eṇṇap pattu
குறைஇரந்த பத்து
kuṟaiiranta pattu
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

007. செழுஞ்சுடர் மாலை
seḻuñsuṭar mālai

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்.
  • 1. ஊணே உடையே பொருளேஎன் றுருகி மனது தடுமாறி
    வீணே துயரத் தழுந்துகின்றேன் வேறோர் துணைநின் அடிஅன்றிக்
    காணேன் அமுதே பெருங்கருணைக் கடலே கனியே கரும்பேநல்
    சேணேர் தணிகை மலைமருந்தே தேனே ஞானச் செழுஞ்சுடரே.
  • 2. பாரும் விசும்பும் அறியஎனைப் பயந்த தாயும் தந்தையும்நீ
    ஒரும் போதிங் கெனில்எளியேன் ஒயாத் துயருற் றிடல்நன்றோ
    யாரும் காண உனைவாதுக் கிழுப்பேன் அன்றி என்செய்கேன்
    சேரும் தணிகை மலைமருந்தே தேனே ஞானச் செழுஞ்சுடரே.
  • 3. கஞ்சன் துதிக்கும் பொருளேஎன் கண்ணே நின்னைக் கருதாத
    வஞ்சர் கொடிய முகம்பார்க்க மாட்டேன் இனிஎன் வருத்தம்அறுத்
    தஞ்சல் எனவந் தருளாயேல் ஆற்றேன் கண்டாய் அடியேனே
    செஞ்சந் தனம்சேர் தணிகைமலைத் தேனே ஞானச் செழுஞ்சுடரே.
  • 4. மின்நேர் உலக நடைஅதனால் மேவும் துயருக் காளாகிக்
    கல்நேர் மனத்தேன் நினைமறந்தென் கண்டேன் கண்டாய் கற்பகமே
    பொன்னே கடவுள் மாமணியே போதப் பொருளே பூரணமே
    தென்னேர் தணிகை மலைஅரசே தேவே ஞானச் செழுஞ்சுடரே.
  • 5. வளைத்தே வருத்தும் பெருந்துயரால் வாடிச் சவலை மகவாகி
    இளைத்தேன் தேற்றும் துணைகாணேன் என்செய் துய்கேன் எந்தாயே
    விளைத்தேன் ஒழுகும் மலர்த்தருவே விண்ணே விழிக்கு விருந்தேசீர்
    திளைத்தோர் பரவும் திருத்தணிகைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே.
  • 6. அடுத்தே வருத்தும் துயர்க்கடலில் அறியா தந்தோ விழுந்திட்டேன்
    எடுத்தே விடுவார் தமைக்காணேன் எந்தாய் எளியேன் என்செய்கேன்
    கடுத்தேர் கண்டத் தெம்மான்தன் கண்ணே தருமக் கடலேஎன்
    செடித்தீர் தணிகை மலைப்பொருளே தேனே ஞானச் செழுஞ்சுடரே.
  • 7. உண்டால் குறையும் எனப்பசிக்கும் உலுத்தர் அசுத்த முகத்தைஎதிர்
    கண்டால் நடுங்கி ஒதுங்காது கடைகாத் திரந்து கழிக்கின்றேன்
    கொண்டார் அடியர் நின்அருளை யானோ ஒருவன் குறைபட்டேன்
    திண்டார் அணிவேல் தணிகைமலைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே.
  • 8. வேட்டேன் நினது திருஅருளை வினையேன் இனிஇத் துயர்பொறுக்க
    மாட்டேன் மணியே அன்னேஎன் மன்னே வாழ்க்கை மாட்டுமனம்
    நாட்டேன் அயன்மால் எதிர்வரினும் நயக்கேன் எனக்கு நல்காயோ
    சேட்டேன் அலரும் பொழில்தணிகைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே.
  • 9. கல்லா நாயேன் எனினும்எனைக் காக்கும் தாய்நீ என்றுலகம்
    எல்லாம் அறியும் ஆதலினால் எந்தாய் அருளா திருத்திஎனில்
    பொல்லாப் பழிவந் தடையும்உனக் கரசே இனியான் புகல்வதென்னே
    செல்லார் பொழில்சூழ் திருத்தணிகைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே.
  • 10. அன்னே அப்பா எனநின்தாட்3 கார்வம் கூர்ந்திங் கலைகின்றேன்
    என்னே சற்றும் இரங்கிலைநீ என்நெஞ் சோநின் நல்நெஞ்சம்
    மன்னே ஒளிகொள் மாணிக்க மணியே குணப்பொன் மலையேநல்
    தென்னேர் பொழில்சூழ் திருத்தணிகைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே.
  • 11. நடைஏய் துயரால் மெலிந்து நினை நாடா துழலும் நான்நாயில்
    கடையேன் எனினும் காத்தல்என்றன் கண்ணே நினது கடன்அன்றோ
    தடையேன் வருவாய் வந்துன்அருள் தருவாய் இதுவே சமயம்காண்
    செடிதீர்த் தருளும் திருத்தணிகைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே.

    • 3. நின் அருட்கார்வம். தொ.வே.முதற்பதிப்பு, ச.மு.க.பதிப்பு.

செழுஞ்சுடர் மாலை // செழுஞ்சுடர் மாலை