திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
புணரா விரகு பொருந்துறு வேட்கையின் இரங்கல்
puṇarā viraku poruntuṟu vēṭkaiyiṉ iraṅkal
காட்சி அற்புதம்
kāṭsi aṟputam
மூன்றாம் திருமுறை / Third Thirumurai

011. குறி ஆராய்ச்சி
kuṟi ārāychsi

    திருவொற்றியூர்
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. நந்தி மகிழ்வாய்த் தரிசிக்க நடனம் புரியும் நாயகனார்
    அந்தி நிறத்தார் திருஒற்றி அமர்ந்தார் என்னை அணைவாரோ
    புந்தி இலள்என் றணையாரோ யாதுந் தெரியேன் புலம்புகின்றேன்
    சிந்தை மகிழக் குறமடவாய் தெரிந்தோர் குறிதான் செப்புவையே.
  • 2. தரும விடையார் சங்கரனார் தகைசேர் ஒற்றித் தனிநகரார்
    ஒருமை அளிப்பார் தியாகர்எனை உடையார் இன்று வருவாரோ
    மருவ நாளை வருவாரோ வாரா தென்னை மறப்பாரோ
    கருமம் அறிந்த குறமடவாய் கணித்தோர் குறிதான் கண்டுரையே.
  • 3. ஆழி விடையார் அருளுடையார் அளவிட் டறியா அழகுடையார்
    ஊழி வரினும் அழியாத ஒற்றித் தலம்வாழ் உத்தமனார்
    வாழி என்பால் வருவாரோ வறியேன் வருந்த வாராரோ
    தோழி அனைய குறமடவாய் துணிந்தோர் குறிநீ சொல்லுவையே.
  • 4. அணியார் அடியார்க் கயன்முதலாம் அமரர்க் கெல்லாம் அரியர்என்பாம்
    பணியார் ஒற்றிப் பதிஉடையார் பரிந்தென் முகந்தான் பார்ப்பாரோ
    தணியாக் காதல் தவிர்ப்பாரோ சார்ந்து வரவு தாழ்ப்பாரோ
    குணியா எழில்சேர் குறமடவாய் குறிதான் ஒன்றும் கூறுவையே.
  • 5. பொன்னார் புயத்துப் போர்விடையார் புல்லர் மனத்துட் போகாதார்
    ஒன்னார் புரந்தீ உறநகைத்தார் ஒற்றி எனும்ஓர் ஊர்அமர்ந்தார்
    என்னா யகனார் எனைமருவல் இன்றோ நாளை யோஅறியேன்
    மின்னார் மருங்குல் குறமடவாய் விரைந்தோர் குறிநீ விளம்புவையே.
  • 6. பாலிற் றெளிந்த திருநீற்றர் பாவ நாசர் பண்டரங்கர்
    ஆலிற் றெளிய நால்வர்களுக் கருளுந் தெருளர் ஒற்றியினார்
    மாலிற் றெளியா நெஞ்சகத்தேன் மருவிக் கலக்க வருவாரோ
    சேலிற் றெளிகட் குறப்பாவாய் தெரிந்தோர் குறிநீ செப்புகவே.
  • 7. நிருத்தம் பயின்றார் நித்தியனார் நேச மனத்தர் நீலகண்டர்
    ஒருத்தர் திருவாழ் ஒற்றியினார் உம்பர் அறியா என்கணவர்
    பொருத்தம் அறிந்தே புணர்வாரோ பொருத்தம் பாரா தணைவாரோ
    வருத்தந் தவிரக் குறப்பாவாய் மகிழ்ந்தோர் குறிதான் வழுத்துவையே.
  • 8. கமலன் திருமால் ஆதியர்கள் கனவி னிடத்துங் காண்பரியார்
    விமலர் திருவாழ் ஒற்றியிடை மேவும் பெருமை வித்தகனார்
    அமலர் அவர்தாம் என்மனைக்கின் றணைகு வாரோ அணையாரோ
    தமல மகன்ற குறப்பாவாய் தனித்தோர் குறிதான் சாற்றுவையே.
  • 9. வன்னி இதழி மலர்ச்சடையார் வன்னி எனஓர் வடிவுடையார்
    உன்னி உருகும் அவர்க்கெளியார் ஒற்றி நகர்வாழ் உத்தமனார்
    கன்னி அழித்தார் தமைநானுங் கலப்பேன் கொல்லோ கலவேனோ
    துன்னி மலைவாழ் குறமடவாய் துணிந்தோர் குறிநீ சொல்லுவையே.
  • 10. கற்றைச் சடைமேல் கங்கைதனைக் கலந்தார் கொன்றைக் கண்ணியினார்
    பொற்றைப் பெருவிற் படைஉடையார் பொழில்சூழ் ஒற்றிப் புண்ணியனார்
    இற்றைக் கடியேன் பள்ளியறைக் கெய்து வாரோ எய்தாரோ
    சுற்றுங் கருங்கட் குறமடவாய் சூழ்ந்தோர் குறிநீ சொல்லுவையே.
  • 11. அரவக் கழலார் கருங்களத்தார் அஞ்சைக் களத்தார் அரிபிரமர்
    பரவப் படுவார் திருஒற்றிப் பதியில் அமர்ந்தார் பாசுபதர்
    இரவு வருமுன் வருவாரோ என்னை அணைதற் கிசைவாரோ
    குரவ மணக்குங் குறமடவாய் குறிநீ ஒன்று கூறுவையே.

குறி ஆராய்ச்சி // குறி ஆராய்ச்சி

No audios found!