திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
ஆற்றா விரகம்
āṟṟā virakam
மூன்றாம் திருமுறை / Third Thirumurai

019. காதல் மாட்சி
kātal māṭsi

    திருவொற்றியூர்
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. திடனான் மறையார் திருஒற்றித் தியாகர் அவர்தம் பவனிதனை
    மடனா மகன்று காணவந்தால் மலர்க்கை வளைக ளினைக்கவர்ந்து
    படனா கணியர் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
    உடனா ஓடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
  • 2. தக்க வளஞ்சேர் ஒற்றியில்வாழ் தம்பி ரானார் பவனிதனைத்
    துக்கம் அகன்று காணவந்தால் துகிலைக் கவர்ந்து துணிவுகொண்டே
    பக்க மருவும் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
    ஒக்க ஓடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
  • 3. தாயாய் அளிக்குந் திருஒற்றித் தலத்தார் தமது பவனிதனை
    மாயா நலத்தில் காணவந்தால் மருவும் நமது மனங்கவர்ந்து
    பாயா விரைவில் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
    ஓயா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
  • 4. நிலவார் சடையார் திருஒற்றி நிருத்தர் பவனி தனைக்காண
    நலவா தரவின் வந்துநின்றால் நங்காய் எனது நாண்கவர்ந்து
    பலவா தரவால் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
    உலவா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
  • 5. நாடார் வளங்கொள் ஒற்றிநகர் நாதர் பவனி தனைக்காண
    நீடா சையினால் வந்துவந்து நின்றால் நமது நிறைகவர்ந்து
    பாடார் வலராம் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
    ஓடா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
  • 6. அழியா வளத்தார் திருஒற்றி ஐயர் பவனி தனைக்காண
    இழியா மகிழ்வி னொடும்வந்தால் என்னே பெண்ணே எழில்கவர்ந்து
    பழியா எழிலின் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
    ஒழியா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
  • 7. திரையார் ஓதை ஒற்றியில்வாழ் தியாக ரவர்தம் பவனிதனைக்
    கரையா மகிழ்விற் காணவந்தால் கற்பின் நலத்தைக் கவர்ந்துகொண்டு
    பரையா தரிக்க நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
    உரையா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
  • 8. கடுக்கா தலித்தார் திருஒற்றிக் காளை அவர்தம் பவனிதனை
    விடுக்கா மகிழ்விற் காணவந்தால் விரியும் நமது வினைகவர்ந்து
    படுக்கா மதிப்பின் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
    உடுக்கா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
  • 9. தில்லை உடையார் திருஒற்றித் தியாகர் அவர் பவனிதனைக்
    கல்லை உருக்கிக் காணவந்தால் கரணம் நமது கரந்திரவி
    பல்லை இறுத்தார் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
    ஒல்லை ஓடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
  • 10. மடையார் வாளை வயல்ஒற்றி வள்ளல் பவனி தனைக்காண
    அடையா மகிழ்வி னொடும்வந்தால் அம்மா நமது விடயமெலாம்
    படையாற் கவர்ந்து நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
    உடையா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.

காதல் மாட்சி // காதல் மாட்சி

No audios found!