திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
நெஞ்சுறுத்த திருநேரிசை
neñsuṟutta tirunērisai
கலி முறையீடு
kali muṟaiyīṭu
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

031. சிகாமணி மாலை
sikāmaṇi mālai

    புள்ளிருக்குவேளூர்
    கட்டளைக் கலித்துறை
    திருச்சிற்றம்பலம்
  • 1. வல்வினை யேனைஇவ் வாழ்க்கைக் கடல்நின்றும் வள்ளல்உன்தன்
    நல்வினை வாழ்க்கைக் கரைஏற்றி மெய்அருள் நல்குகண்டாய்
    கொல்வினை யானை உரித்தோய் வயித்திய நாதகுன்றாச்
    செல்வினை மேலவர் வாழ்வே அமரர் சிகாமணியே.
  • 2. பொய்யே புலம்பிப் புழுத்தலை நாயின் புறத்திலுற்றேன்
    மெய்யே உரைக்கும்நின் அன்பர்தம் சார்பை விரும்புகிலேன்
    பையேல் அரவனை யேன்பிழை நோக்கிப் பராமுகம்நீ
    செய்யேல் வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
  • 3. கல்லேன் மனக்கருங் கல்லேன் சிறிதும் கருத்தறியாப்
    பொல்லேன்பொய் வாஞ்சித்த புல்லேன் இரக்கம் பொறைசிறிதும்
    இல்லேன் எனினும்நின் பால்அன்றி மற்றை இடத்தில்சற்றும்
    செல்லேன் வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
  • 4. ஆர்ப்பார் கடல்நஞ் சமுதுசெய் தாய்நின் அடிக்கன்பின்றி
    வேர்ப்பார் தமக்கும் விருந்தளித் தாய்வெள்ளி வெற்பெடுத்த
    கார்ப்பாள னுக்கும் கருணைசெய் தாய்கடை யேன்துயரும்
    தீர்ப்பாய் வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
  • 5. நானே நினக்குப் பணிசெயல் வேண்டும்நின் நாண்மலர்த்தாள்
    தானே எனக்குத் துணைசெயல் வேண்டும் தயாநிதியே
    கோனே கரும்பின் சுவையேசெம் பாலொடு கூட்டுநறுந்
    தேனே வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
  • 6. மருவார் குழலியர் மையல் கடல்விழும் வஞ்சநெஞ்சால்
    வெருவா உயங்கும் அடியேன் பிணியை விலக்குகண்டாய்
    உருவாய் அருவும் ஒளியும் வெளியும்என் றோதநின்ற
    திருவார் வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
  • 7. தவநேய மாகும்நின் தாள்நேய மின்றித் தடமுலையார்
    அவநேய மேற்கொண் டலைகின்ற பேதைக் கருள்புரிவாய்
    நவநேய மாகி மனவாக் கிறந்த நடுஒளியாம்
    சிவனே வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
  • 8. ஐவாய் அரவில் துயில்கின்ற மாலும் அயனும்தங்கள்
    கைவாய் புதைத்துப் பணிகேட்க மேவும்முக் கண்அரசே
    பொய்வாய் விடாஇப் புலையேன் பிழையைப் பொறுத்தருள்நீ
    செய்வாய் வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
  • 9. புல்வாயின் முன்னர்ப் புலிப்போத் தெனஎன்முன் போந்துநின்ற
    கல்வாய் மனத்தரைக் கண்டஞ்சி னேனைக் கடைக்கணிப்பாய்
    அல்வாய் மணிமிடற் றாரமு தேஅருள் ஆன்றபெரும்
    செல்வா வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
  • 10. ஆர்த்தார் கடல்நஞ் சமுதுசெய் தாய்என்னை அன்பர்கள்பால்
    சேர்த்தாய்என் துன்பம் அனைத்தையும் தீர்த்துத் திருஅருட்கண்
    பார்த்தாய் பரம குருவாகி என்னுள் பரிந்தமர்ந்த
    தீர்த்தா வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
  • 11. அறத்தாயை ஓர்புடை கொண்டோர் புடைமண் அளந்தமுகில்
    நிறத்தாயை வைத்துல கெல்லாம் நடத்தும் நிருத்தஅண்டப்
    புறத்தாய்என் துன்பம் துடைத்தாண்டு மெய்அருட் போதந்தந்த
    திறத்தாய் வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
  • 12. அலைஓய் கடலில் சிவயோகம் மேவிய அந்தணர்தம்
    நிலைஓர் சிறிதும் அறியேன் எனக்குன் நிமலஅருள்
    மலைஓங்கு வாழ்க்கையும் வாய்க்குங் கொலோபொன் மலைஎன்கின்ற
    சிலையோய் வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
  • 13. ஊன்கொண்ட தேகத்தும் உள்ளத்தும் மேவி உறும்பிணியால்
    நான்கொண்ட துன்பம் தவிர்ப்பாய் வயித்திய நாதஎன்றே
    வான்கொண்ட நின்அருட் சீரேத்து கின்ற வகைஅறியேன்
    தேன்கொண்ட கொன்றைச் சடையாய் அமரர் சிகாமணியே.
  • 14. களிவே தனும்அந்தக் காலனும் என்னைக் கருதஒட்டா
    ஒளிவே தரத்திரு வுள்ளஞ்செய் வாய்அன்பர் உள்ளம்என்னும்
    தளிவே தனத்துறும் தற்பர மேஅருள் தண்ணமுதத்
    தெளிவே வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
  • 15. மால்விடை மேற்கொண்டு வந்தெளி யேனுடை வல்வினைக்கு
    மேல்விடை ஈந்திட வேண்டுங்கண் டாய்இது வேசமயம்
    நீல்விட முண்ட மிடற்றாய் வயித்திய நாதநின்பால்
    சேல்விடு வாட்கண் உமையொடும் தேவர் சிகாமணியே.

சிகாமணி மாலை // சிகாமணி மாலை