திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
கூடல் விழைதல்
kūṭal viḻaital
நாள்எண்ணி வருந்தல்
nāḷeṇṇi varuntal
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

040. தரிசனை வேட்கை
tarisaṉai vēṭkai

    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. வேல்கொளும் கமலக் கையனை எனையாள்
    மெய்யனை ஐயனை உலக
    மால்கொளும் மனத்தர் அறிவரும் மருந்தை
    மாணிக்க மணியினை மயில்மேல்
    கால்கொளும் குகனை எந்தையை எனது
    கருத்தனை அயன்அரி அறியாச்
    சால்கொளும் கடவுள் தனிஅருள் மகனைத்
    தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
  • 2. கண்ணனை அயனை விண்ணவர் கோனைக்
    காக்கவைத் திட்டவேற் கரனைப்
    பண்ணனை அடியர் பாடலுக் கருளும்
    பதியினை மதிகொள்தண் அருளாம்
    வண்ணனை எல்லா வண்ணமும் உடைய
    வரதன்ஈன் றெடுத்தருள் மகனைத்
    தண்ணனை எனது கண்ணனை யவனைத்
    தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
  • 3. என்னுடை உயிரை யான்பெறும் பேற்றை
    என்னுடைப் பொருளினை எளியேன்
    மன்னுடைக் குருவின் வடிவினை என்கண்
    மணியினை அணியினை வரத்தை
    மின்னுடைப் பவள வெற்பினில் உதித்த
    மிளிர்அருள் தருவினை அடியேன்
    தன்னுடைத் தேவைத் தந்தையைத் தாயைத்
    தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
  • 4. பரங்கிரி அமருங் கற்பகத் தருவைப்
    பராபரஞ் சுடரினை எளியேற்
    கிரங்கிவந் தருளும் ஏரகத் திறையை
    எண்ணுதற் கரியபேர் இன்பை
    உரங்கிளர் வானோர்க் கொருதனி முதலை
    ஒப்பிலா தோங்கிய ஒன்றைத்
    தரங்கிளர் அருண கிரிக்கருள் பவனைத்
    தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
  • 5. அரும்பெறல் மணியை அமுதினை அன்பர்
    அன்பினுக் கெளிவரும் அரசை
    விரும்புமா தவத்தோர் உள்ளகத் தொளிரும்
    விளக்கினை அளக்கரும் பொருளைக்
    கரும்பினை என்னுட் கனிந்திடும் கனியை
    முனிந்திடா தருள்அருட் கடலைத்
    தரும்பர சிவத்துள் கிளர்ந்தொளிர் ஒளியைத்
    தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
  • 6. மாரனை எரித்தோன் மகிழ்திரு மகனை
    வாகையம் புயத்தனை வடிவேல்
    தீரனை அழியாச் சீரனை ஞானச்
    செல்வனை வல்வினை நெஞ்சச்
    சூரனைத் தடிந்த வீரனை அழியாச்
    சுகத்தனைத் தேன்துளி கடப்பந்
    தாரனைக் குகன்என் பேருடை யவனைத்
    தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
  • 7. வேதனைச் சிறைக்குள் வேதனை படச்செய்
    விமலனை அமலனை அற்பர்
    போதனைக் கடங்காப் போதனை ஐந்தாம்
    பூதனை மாதவர் புகழும்
    பாதனை உமையாள் பாலனை எங்கள்
    பரமனை மகிழ்விக்கும் பரனைத்
    தாதனை உயிர்க்குள் உயிரனை யவனைத்
    தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
  • 8. குழகனை அழியாக் குமரனை அட்ட
    குணத்தனைக் குறித்திடல் அறிதாம்
    அழகனைச் செந்தில் அப்பனை மலைதோ
    றாடல்வாழ் அண்ணலைத் தேவர்
    கழகனைத் தண்டைக் காலனைப் பிணிக்கோர்
    காலனை வேலனை மனதில்
    சழகிலார்க் கருளும் சாமிநா தனைத்தென்
    தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
  • 9. முத்தனை முத்திக் கொருதனி வித்தை
    முதல்வனை முருகனை முக்கண்
    பித்தனை அத்தன் எனக்கொளும் செல்வப்
    பிள்ளையைப் பெரியவர் உளஞ்சேர்
    சுத்தனைப் பத்தி வலைப்படும் அவனைத்
    துரியனைத் துரியமும் கடந்த
    சத்தனை நித்த நின்மலச் சுடரைத்
    தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
  • 10. வள்அயில் கரங்கொள் வள்ளலை இரவில்
    வள்ளிநா யகிதனைக் கவர்ந்த
    கள்ளனை அடியர் உள்ளகத் தவனைக்
    கருத்தனைக் கருதும்ஆ னந்த
    வெள்ளம்நின் றாட அருள்குரு பரனை
    விருப்புறு பொருப்பனை வினையைத்
    தள்ளவந் தருள்செய் திடுந்தயா நிதியைத்
    தணிகையில் கண்டிறைஞ் சுவனே.

தரிசனை வேட்கை // தரிசனை வேட்கை