திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
பழமொழிமேல் வைத்துப் பரிவுகூர்தல்
paḻamoḻimēl vaittup parivukūrtal
அருளியல் வினாவல்
aruḷiyal viṉāval
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

011. அபராதத் தாற்றாமை
aparātat tāṟṟāmai

    திருவொற்றியூர்
    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. துச்சிலை விரும்பித் துயர்கொளும் கொடியேன்
    துட்டனேன் தூய்மைஒன் றில்லா
    எச்சிலை அனையேன் பாவியேன் என்னை
    என்செய்தால் தீருமோ அறியேன்
    பச்சிலை இடுவார் பக்கமே மருவும்
    பரமனேஎம் பசு பதியே
    அச்சிலை விரும்பும் அவருளத் தமுதே
    ஐயனே ஒற்றியூர் அரைசே.
  • 2. தூங்கினேன் சோம்பற் குறைவிட மானேன்
    தோகையர் மயக்கிடை அழுந்தி
    ஏங்கினேன் அவமே இருந்தனன் என்னை
    என்செய்தால் தீருமோ அறியேன்
    வாங்கிமே ருவினை வளைத்திடும் பவள
    மாமணிக் குன்றமே மருந்தே
    ஒங்கிவான் அளவும் பொழில்செறி ஒற்றி
    யூர்வரும் என்னுடை உயிரே.
  • 3. கரப்பவர்க் கெல்லாம் முற்படும் கொடிய
    கடையனேன் விடையமே உடையேன்
    இரப்பவர்க் கணுவும் ஈந்திலேன் என்னை
    என்செய்தால் தீருமோ அறியேன்
    திரப்படும் கருணைச் செல்வமே சிவமே
    தெய்வமே தெய்வநா யகமே
    உரப்படும் அன்பர் உள்ஒளி விளக்கே
    ஒற்றியூர் வாழும்என் உவப்பே.
  • 4. இல்லைஎன் பதனுக் கஞ்சிடேன் நாய்க்கும்
    இணையிலேன் இழிவினேன் துயர்க்கோர்
    எல்லைமற் றறியேன் ஒதியனேன் என்னை
    என்செய்தால் தீருமோ அறியேன்
    கல்லைவில் ஆக்கும் கருணைவா ரிதியே
    கண்ணுதல் உடையசெங் கனியே
    தில்லைவாழ் அரசே தெய்வமா மணியே
    திருவொற்றி யூர்வரும் தேவே.
  • 5. மண்ணிலே மயங்கும் மனத்தினை மீட்டுன்
    மலரடி வழுத்திடச் சிறிதும்
    எண்ணிலேன் கொடிய ஏழையேன் என்னை
    என்செய்தால் தீருமோ அறியேன்
    விண்ணிலே விளங்கும் ஒளியினுள் ஒளியே
    விடையில்வந் தருள்விழி விருந்தே
    கண்ணிலே விளங்கும் அரும்பெறல் மணியே
    காட்சியே ஒற்றியங் கரும்பே.
  • 6. முட்டியே மடவார் முலைத்தலை உழக்கும்
    மூடனேன் முழுப்புலை முறியேன்
    எட்டியே அனையேன் பாவியேன் என்னை
    என்செய்தால் தீருமோ அறியேன்
    ஒட்டியே அன்பர் உளத்தெழும் களிப்பே
    ஒளிக்குளாம் சோதியே கரும்பின்
    கட்டியே தேனே சடையுடைக் கனியே
    காலமும் கடந்தவர் கருத்தே.
  • 7. கருதென அடியார் காட்டியும் தேறாக்
    கன்மனக் குரங்கனேன் உதவா
    எருதென நின்றேன் பாவியேன் என்னை
    என்செய்தால் தீருமோ அறியேன்
    மருதிடை நின்ற மாணிக்க மணியே
    வன்பவம் தீர்த்திடும் மருந்தே
    ஒருதிறம் உடையோர் உள்ளத்துள் ஒளியே
    ஒற்றியூர் மேவும்என் உறவே.
  • 8. வைதிலேன் வணங்கா திகழ்பவர் தம்மை
    வஞ்சனேன் நின்னடி யவர்பால்
    எய்திலேன் பேயேன் ஏழையேன் என்னை
    என்செய்தால் தீருமோ அறியேன்
    கொய்துமா மலரிட் டருச்சனை புரிவோர்
    கோலநெஞ் சொளிர் குணக் குன்றே
    உய்திறம் உடையோர் பரவுநல் ஒற்றி
    யூர்அகத் தமர்ந்தருள் ஒன்றே.
  • 9. தெவ்வண மடவார் சீக்குழி விழுந்தேன்
    தீயனேன் பேயனேன் சிறியேன்
    எவ்வணம் உய்வேன் என்செய்வேன் என்னை
    என்செய்தால் தீருமோ அறியேன்
    எவ்வணப் பொருப்பே என்னிரு கண்ணே
    இடையிடர்ப் பசியசெம் பொன்னே
    செவ்வண மணியே திகழ்குணக் கடலே
    திருவொற்றி யூர்ச்செழுந் தேனே.
  • 10. வாதமே புரிவேன் கொடும்புலி அனையேன்
    வஞ்சக மனத்தினேன் பொல்லா
    ஏதமே உடையேன் என்செய்வேன் என்னை
    என்செய்தால் தீருமோ அறியேன்
    போதமே ஐந்தாம் பூதமே ஒழியாப்
    புனிதமே புதுமணப் பூவே
    பாதமே சரணம் சரணம்என் தன்னைப்
    பாதுகாத் தளிப்பதுன் பரமே.

அபராதத் தாற்றாமை // அபராதத் தாற்றாமை

No audios found!