திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
ஆனாவாழ்வின் அலைசல்
āṉāvāḻviṉ alaisal
திருவிண்ணப்பம்
tiruviṇṇappam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

045. அருள் திறத்து அலைசல்
aruḷ tiṟattu alaisal

    திருவொற்றியூர்
    கொச்சகக் கலிப்பா
    திருச்சிற்றம்பலம்
  • 1. நறைமணக்கும் கொன்றை நதிச்சடில நாயகனே
    கறைமணக்கும் திருநீல கண்டப் பெருமானே
    உறைமணக்கும் பூம்பொழில்சூழ் ஒற்றியப்பா உன்னுடைய
    மறைமணக்கும் திருஅடியை வாய்நிரம்ப வாழ்த்தேனோ.
  • 2. அலைவளைக்கும் பாற்கடலான் அம்புயத்தான் வாழ்த்திநிதம்
    தலைவளைக்கும் செங்கமலத் தாளுடையாய் ஆளுடையாய்
    உலைவளைக்கா முத்தலைவேல் ஒற்றியப்பா உன்னுடைய
    மலைவளைக்கும் கைம்மலரின் வண்மைதனை வாழ்த்தேனோ.
  • 3. ஆறடுத்துச் சென்றஎங்கள் அப்பருக்கா அன்றுகட்டுச்
    சோறெடுத்துச் சென்ற துணையே சுயஞ்சுடரே
    ஊறெடுத்தோர் காணரிய ஒற்றியப்பா உன்னுடைய
    நீறடுத்த எண்தோள் நிலைமைதனைப் பாரேனோ.
  • 4. சைவத் தலைவர் தவத்தோர்கள் தம்பெருமான்
    மெய்வைத்த உள்ளம் விரவிநின்ற வித்தகனே
    உய்வைத்த உத்தமனே ஒற்றியப்பா உன்னுடைய
    தெய்வப் புகழ்என் செவிநிறையக் கேளேனோ.
  • 5. பாடுகின்றோர் பாடப் பரிசளிக்கும் புண்ணியனே
    தேடுகின்றோர் தேடநிற்கும் தியாகப் பெருமானே
    ஊடுகின்றோர் இல்லாத ஒற்றியப்பா அம்பலத்துள்
    ஆடுகின்ற சேவடிகண் டல்லல்எலாம் தீரேனோ.
  • 6. பூணாக மாடப் பொதுநடிக்கும் புண்ணியனே
    சேணாகம் வாங்கும் சிவனே கடல்விடத்தை
    ஊணாக உள்ளுவந்த ஒற்றியப்பா மால்அயனும்
    காணாத நின்உருவைக் கண்டு களியேனோ.
  • 7. கொள்ளுவார் கொள்ளும் குலமணியே மால்அயனும்
    துள்ளுவார் துள்அடக்கும் தோன்றலே சூழ்ந்துநிதம்
    உள்ளுவார் உள்உறையும் ஒற்றியப்பா உன்னுடைய
    தெள்ளுவார் பூங்கழற்கென் சிந்தைவைத்து நில்லேனோ.
  • 8. செவ்வண்ண மேனித் திருநீற்றுப் பேரழகா
    எவ்வண்ணம் நின்வண்ணம் என்றறிதற் கொண்ணாதாய்
    உவ்வண்ணன் ஏத்துகின்ற ஒற்றியப்பா உன்வடிவம்
    இவ்வண்ணம் என்றென் இதயத் தெழுதேனோ.
  • 9. மன்றுடையாய் மால்அயனும் மற்றும்உள வானவரும்
    குன்றுடையாய் என்னக் குறைதவிர்த்த கோமானே
    ஒன்றுடையாய் ஊர்விடையாய் ஒற்றியப்பா என்னுடைய
    வன்றுடையாய் என்றுன் மலரடியைப் போற்றேனோ.
  • 10. குற்றம் செயினும் குணமாகக் கொண்டருளும்
    நற்றவர்தம் உள்ளம் நடுநின்ற நம்பரனே
    உற்றவர்தம் நற்றுணைவா ஒற்றியப்பா என்கருத்து
    முற்றிடநின் சந்நிதியின் முன்நின்று வாழ்த்தேனோ.
  • 11. வஞ்ச மடவார் மயக்கும் மயக்கொழிய
    நஞ்சம்அணி கண்டத்து நாதனே என்றென்று
    உஞ்சவர்கள் வாழ்த்துகின்ற ஒற்றியப்பா உன்னுடைய
    கஞ்ச மலர்அடிக்கே காதலுற்றுப் போற்றேனோ.
  • 12. இன்னல் உலக இருள்நடையில் நாள்தோறும்
    துன்னவரும் நெஞ்சத் துடுக்கழிய நல்லோர்கள்
    உன்னல்உறும் தெள்ளமுதே ஒற்றியப்பா என்வாய்உன்
    தன்அடைவே பாடித் தழும்பேறக் காணேனோ.
  • 13. பெண்மணியே என்றுலகில் பேதையரைப் பேசாதென்
    கண்மணியே கற்பகமே கண்ணுதலில் கொள்கரும்பே
    ஒண்மணியே தேனேஎன் றொற்றியப்பா உன்தனைநான்
    பண்மணஞ்செய் பாட்டில் பரவித் துதியேனோ.
  • 14. மானமிலார் நின்தாள் வழுத்தாத வன்மனத்தார்
    ஈனர்அவர் பால்போய் இளைத்தேன் இளைப்பாற
    ஊனமிலார் போற்றுகின்ற ஒற்றியப்பா உன்னுடைய
    ஞான அடியின்நிழல் நண்ணி மகிழேனோ.
  • 15. கல்லார்க் கிதங்கூறிக் கற்பழிந்து நில்லாமல்
    எல்லார்க்கும் நல்லவனே என்அரசே நல்தருமம்
    ஒல்லார் புரமெரித்த ஒற்றியப்பா உன்அடிக்கே
    சொல்லால் மலர்தொடுத்துச் சூழ்ந்தணிந்து வாழேனோ.
  • 16. கற்பவற்றைக் கல்லாக் கடையரிடம் சென்றவர்முன்
    அற்பஅற்றைக் கூலிக் கலையும் அலைப்பொழிய
    உற்பவத்தை நீக்குகின்ற ஒற்றியப்பா உன்னுடைய
    நற்பதத்தை ஏத்திஅருள் நல்நலந்தான் நண்ணேனோ.
  • 17. தந்தைதாய் மக்கள்மனை தாரம்எனும் சங்கடத்தில்
    சிந்தைதான் சென்று தியங்கி மயங்காமே
    உந்தைஎன்போர் இல்லாத ஒற்றியப்பா உன்அடிக்கீழ்
    முந்தையோர் போன்று முயங்கி மகிழேனோ.
  • 18. பொய்ஒன்றே அன்றிப் புறம்பொன்றும் பேசாத
    வையொன்றும் தீநாற்ற வாயார்க்கு மேலானேன்
    உய்என் றருள்ஈயும் ஒற்றியப்பா உன்னுடைய
    மெய்ஒன்று நீற்றின் விளக்கமது பாரேனோ.
  • 19. தூக்கமும்முன் தூங்கியபின் சோறிலையே என்னும்அந்த
    ஏக்கமுமே அன்றிமற்றோர் ஏக்கமிலா ஏழையனேன்
    ஊக்கமுளோர் போற்றுகின்ற ஒற்றியப்பா நின்அடிக்கீழ்
    நீக்கமிலா ஆனந்த நித்திரைதான் கொள்ளேனோ.
  • 20. வாதுபுரிந் தீன மடவார் மதித்திடுவான்
    போதுநிதம் போக்கிப் புலம்பும் புலைநாயேன்
    ஓதுமறை யோர்குலவும் ஒற்றியப்பா ஊரனுக்காத்
    தூதுசென்ற நின்தாள் துணைப்புகழைப் பாடேனோ.
  • 21. பொன்னாசை யோடும் புலைச்சியர்தம் பேராசை
    மன்னாசை மன்னுகின்ற மண்ணாசைப் பற்றறுத்தே
    உன்னாசை கொண்டேஎன் ஒற்றியப்பா நான்மகிழ்ந்துன்
    மின்னாரும் பொன்மேனி வெண்­ற்றைப் பாரேனோ.
  • 22. கள்உண்ட நாய்போல் கடுங்காம வெள்ளமுண்டு
    துள்உண்ட நெஞ்சத் துடுக்கடக்கி அன்பர்கள்தம்
    உள்உண்ட தெள்அமுதே ஒற்றியப்பா உன்தனைநான்
    வெள்உண்ட நந்தி விடைமீதில் காணேனோ.
  • 23. பேராத காமப் பிணிகொண்ட நெஞ்சகனேன்
    வாராத ஆனந்த வாழ்வுவந்து வாழ்ந்திடவே
    ஓராதார்க் கெட்டாத ஒற்றியப்பா உன்னுடைய
    நீரார் சடைமேல் நிலவொளியைக் காணேனோ.
  • 24. வன்னெஞ்சப் பேதை மடவார்க் கழிந்தலையும்
    கன்னெஞ்சப் பாவியன்யான் காதலித்து நெக்குருகி
    உன்னெஞ்சத் துள்உறையும் ஒற்றியப்பா உன்னுடைய
    வென்னஞ் சணிமிடற்றை மிக்குவந்து வாழ்த்தேனோ.
  • 25. புண்ணியமோர் போதும் புரிந்தறியாப் பொய்யவனேன்
    எண்ணியதோர் எண்ணம் இடர்இன்றி முற்றியிட
    உண்ணிலவு நல்ஒளியே ஒற்றியப்பா உன்னுடைய
    தண்ணிலவு தாமரைப்பொன் தாள்முடியில் கொள்ளேனோ.
  • 26. நன்றிதுஎன் றோர்ந்தும்அதை நாடாது நல்நெறியைக்
    கொன்றிதுநன் றென்னக் குறிக்கும் கொடியவன்யான்
    ஒன்றுமனத் துள்ஒளியே ஒற்றியப்பா உன்னுடைய
    வென்றி மழுப்படையின் மேன்மைதனைப் பாடேனோ.
  • 27. மண்கிடந்த வாழ்வின் மதிமயக்கும் மங்கையரால்
    புண்கிடந்த நெஞ்சப் புலையேன் புழுக்கம்அற
    ஒண்கிடந்த முத்தலைவேல் ஒற்றியப்பா நாரணன்தன்
    கண்கிடந்த சேவடியின் காட்சிதனைக் காணேனோ.
  • 28. கூட்டுவிக்குள் மேல்எழவே கூற்றுவன்வந் தாவிதனை
    வாட்டுவிக்கும் காலம் வருமுன்னே எவ்வுயிர்க்கும்
    ஊட்டுவிக்கும் தாயாகும் ஒற்றியப்பா நீஉலகை
    ஆட்டுவிக்கும் அம்பலத்துன் ஆட்டமதைப் பாரேனோ.
  • 29. மின்ஒப்பாம் வாழ்வை வியந்திடருள் வீழ்ந்தலைந்தேன்
    பொன்ஒப்பாய் தெய்வமணப் பூஒப்பாய் என்னினுமே
    உன்ஒப்பார் இல்லாத ஒற்றியப்பா உன்னுடைய
    தன்ஒப்பாம் வேணியின்மேல் சார்பிறையைப் பாரேனோ.
  • 30. சீலம்அற நிற்கும் சிறியார் உறவிடைநல்
    காலம்அறப் பேசிக் கழிக்கின்றேன் வானவர்தம்
    ஓலம்அற நஞ்சருந்தும் ஒற்றியப்பா உன்னுடைய
    நீல மணிமிடற்றின் நேர்மைதனைப் பாரேனோ.
  • 31. சீர்புகழும் மால்புகழும் தேவர்அயன் தன்புகழும்
    யார்புகழும் வேண்டேன் அடியேன் அடிநாயேன்
    ஊர்புகழும் நல்வளங்கொள் ஒற்றியப்பா உன்இதழித்
    தார்புகழும் நல்தொழும்பு சார்ந்துன்பால் நண்ணேனோ.
  • 32. ஆதவன்தன் பல்இறுத்த ஐயற் கருள்புரிந்த
    நாதஅர னேஎன்று நாத்தழும்பு கொண்டேத்தி
    ஓதவள மிக்கஎழில் ஒற்றியப்பா மண்ணிடந்தும்
    மாதவன்முன் காணா மலர்அடிக்கண் வைகேனோ.
  • 33. கல்லைப் புறங்கண்ட காய்மனத்துக் கைதவனேன்
    தொல்லைப் பழவினையின் தோய்வகன்று வாய்ந்திடவே
    ஒல்லைத் திருவருள்கொண் டொற்றியப்பா உன்னுடைய
    தில்லைப் பொதுவில் திருநடனம் காணேனோ.
  • 34. கடையவனேன் கன்மனத்தேன் கைதவனேன் வஞ்ச
    நடையவனேன் நாணிலியேன் நாய்க்கிணையேன் துன்பொழிய
    உடையவனே உலகேத்தும் ஒற்றியப்பா நின்பால்வந்
    தடையநின்று மெய்குளிர்ந்தே ஆனந்தம் கூடேனோ.
  • 35. வாதை மயல்காட்டும் மடவார் மலக்குழியில்
    பேதை எனவீழ்ந்தே பிணிஉழந்த பேயடியேன்
    ஓதை கடற்கரைவாய் ஒற்றியப்பா வாழ்த்துகின்றோர்
    தீதை அகற்றும்உன்றன் சீர்அருளைச் சேரேனோ.
  • 36. பொய்யர்க் குதவுகின்ற புன்மையினேன் வன்மைசெயும்
    வெய்யற் கிரிமியென மெய்சோர்ந் திளைத்தலைந்தேன்
    உய்யற் கருள்செய்யும் ஒற்றியப்பா உன்அடிசேர்
    மெய்யர்க் கடிமை செய்துன் மென்மலர்த்தாள் நண்ணேனோ.

அருள் திறத்து அலைசல் // அருள் திறத்து அலைசல்

No audios found!