திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
தற்போத இழப்பு
taṟpōta iḻappu
அபயத் திறன்
apayat tiṟaṉ
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

027. மாயையின் விளக்கம்
māyaiyiṉ viḷakkam

    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. திடுக்கற எனைத்தான் வளர்த்திடப் பரையாம்
    செவிலிபாற் சேர்த்தனை அவளோ
    எடுக்கவும் நினையாள் படுக்கவும் ஒட்டாள்
    என்செய்வேன் இன்னும்என் னிடைப்பால்
    மடுக்கநற் றாயும் வந்திலள் நீயும்
    வந்தெனைப் பார்த்திலை அந்தோ
    தடுக்கருங் கருணைத் தந்தையே தளர்ந்தேன்
    தனையனேன் தளர்ந்திடல் அழகோ.
  • 2. தளர்ந்திடேல் மகனே என்றெனை எடுத்தோர்
    தாய்கையில் கொடுத்தனை அவளோ
    வளர்ந்திடா வகையே நினைத்தனள் போன்று
    மாயமே புரிந்திருக் கின்றாள்
    கிளர்ந்திட எனைத்தான் பெற்றநற் றாயும்
    கேட்பதற் கடைந்திலன் அந்தோ
    உளந்தரு கருணைத் தந்தையே நீயும்
    உற்றிலை பெற்றவர்க் கழகோ.
  • 3. தாங்கஎன் தனைஓர் தாய்கையில் கொடுத்தாய்
    தாயவள் நான்தனித் துணர்ந்து
    தூங்கவும் ஒட்டாள் எடுக்கவும் துணியாள்
    சூதையே நினைத்திருக் கின்றாள்
    ஓங்குநற் றாயும் வந்திலாள் அந்தோ
    உளந்தளர் வுற்றனன் நீயும்
    ஈங்குவந் திலையேல் என்செய்கேன் இதுதான்
    எந்தைநின் திருவருட் கழகோ.
  • 4. அத்தநீ எனைஓர் தாய்கையில் கொடுத்தாய்
    ஆங்கவள் மகள்கையில் கொடுத்தாள்
    நித்திய மகள்ஓர் நீலிபாற் கொடுத்தாள்
    நீலியோ தன்புடை ஆடும்
    தத்துவ மடவார் தங்கையில் கொடுத்தாள்
    தனித்தனி அவர்அவர் எடுத்தே
    கத்தவெம் பயமே காட்டினர் நானும்
    கலங்கினேன் கலங்கிடல் அழகோ.
  • 5. வாங்கிய செவிலி அறிவொடும் துயிற்ற
    மகள்கையில் கொடுத்தனன் எனைத்தான்
    ஈங்கிவள் கருத்தில் எதுநினைத் தனளோ
    என்செய்வேன் என்னையே உணர்ந்து
    தூங்கவும் ஒட்டாள் அடிக்கடி கிள்ளித்
    தொட்டிலும் ஆட்டிடு கின்றாள்
    ஏங்குறு கின்றேன் பிள்ளைதன் அருமை
    ஈன்றவர் அறிவரே எந்தாய்.
  • 6. வலத்திலே செவிலி எடுத்திடச் சோம்பி
    மக்கள்பால் காட்டிவிட் டிருந்தாள்
    மலத்திலே உழைத்துக் கிடந்தழல் கேட்டும்
    வந்தெனை எடுத்திலார் அவரும்
    இலத்திலே கூடி ஆடுகின் றனர்நான்
    என்செய்வேன் என்னுடை அருமை
    நிலத்திலே அவர்கள் அறிந்திலார் பெற்றோய்
    நீயும்இங் கறிந்திலை யேயோ.
  • 7. தும்மினேன் வெதும்பித் தொட்டிலிற் கிடந்தே
    சோர்ந்தழு திளைத்துமென் குரலும்
    கம்மினேன் செவிலி அம்மிபோல் அசையாள்
    காதுறக் கேட்டிருக் கின்றாள்
    செம்மியே மடவார் கொம்மியே பாடிச்
    சிரித்திருக் கின்றனர் அந்தோ
    இம்மியே எனினும் ஈந்திடார் போல
    இருப்பதோ நீயும்எந் தாயே.
  • 8. துருவிலா வயிரத் தொட்டிலே தங்கத்
    தொட்டிலே பலஇருந் திடவும்
    திருவிலாப் பொத்தைத் தொட்டிலிற் செவிலி
    சிறியனைக் கிடத்தினள் எந்தாய்
    பிரிவிலாத் தனிமைத் தலைவநீ பெற்ற
    பிள்ளைநான் எனக்கிது பெறுமோ
    கருவிலாய் நீஇத் தருணம்வந் திதனைக்
    கண்டிடில் சகிக்குமோ நினக்கே.
  • 9. காய்ந்திடு மனத்தாள் போன்றனள் சிறிதும்
    கனிவிலாள் காமமா திகளாம்
    பாய்ந்திடு வேடப் பயல்களால் எனக்குப்
    பயம்புரி வித்தனள் பலகால்
    தேய்ந்திடு மதிஎன் றெண்ணினாள் குறையாத்
    திருமதி எனநினைந் தறியாள்
    சாய்ந்தஇச் செவிலி கையிலே என்னைத்
    தந்தது சாலும்எந் தாயே.
  • 10. ஞானஆ னந்த வல்லியாம் பிரியா
    நாயகி யுடன்எழுந் தருளி
    ஈனம்ஆர் இடர்நீத் தெடுத்தெனை அணைத்தே
    இன்னமு தனைத்தையும் அருத்தி
    ஊனம்ஒன் றில்லா தோங்குமெய்த் தலத்தில்
    உறப்புரிந் தெனைப்பிரி யாமல்
    வானமும் புவியும் மதிக்கவாழ்ந் தருள்க
    மாமணி மன்றில்எந் தாயே.

மாயையின் விளக்கம் // மாயையின் விளக்கம்