திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
மாயையின் விளக்கம்
māyaiyiṉ viḷakkam
பிரிவாற்றாமை
pirivāṟṟāmai
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

028. அபயத் திறன்
apayat tiṟaṉ

    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. ஆடக மணிப்பொற் குன்றமே என்னை
    ஆண்டுகொண் டருளி பொருளே
    வீடகத் தேற்றும் விளக்கமே விளக்கின்
    மெய்யொளிக் குள்ளொளி வியப்பே
    வாடகச் சிறியேன் வாட்டங்கள் எல்லாம்
    தவிர்த்தருள் வழங்கிய மன்றில்
    நாடகக் கருணை நாதனே உன்னை
    நம்பினேன் கைவிடேல் எனையே.
  • 2. வட்டவான் சுடரே வளரொளி விளக்கே
    வயங்குசிற் சோதியே அடியேன்
    இட்டமே இட்டத் தியைந்துளே கலந்த
    இன்பமே என்பெரும் பொருளே
    கட்டமே தவிர்த்திங் கென்னைவாழ் வித்த
    கடவுளே கனகமன் றகத்தே
    நட்டமே புரியும் பேரரு ளரசே
    நம்பினேன் கைவிடேல் எனையே.
  • 3. புல்லவா மனத்தேன் என்னினும் சமயம்
    புகுதவா பொய்ந்நெறி ஒழுக்கம்
    சொல்லவா பிறரைத் துதிக்கவா சிறிதோர்
    சொப்பனத் தாயினும் நினையேன்
    கல்லவா மனத்தோர் உறவையுங் கருதேன்
    கனகமா மன்றிலே நடிக்கும்
    நல்லவா எல்லாம் வல்லவா உனையே
    நம்பினேன் கைவிடேல் எனையே.
  • 4. புண்படா உடம்பும் புரைபடா மனமும்
    பொய்படா ஒழுக்கமும் பொருந்திக்
    கண்படா திரவும் பகலும்நின் தனையே
    கருத்தில்வைத் தேத்துதற் கிசைந்தேன்
    உண்பனே எனினும் உடுப்பனே எனினும்
    உலகரை நம்பிலேன் எனது
    நண்பனே நலஞ்சார் பண்பனே உனையே
    நம்பினேன் கைவிடேல் எனையே.
  • 5. புண்ணிலே புகுந்த கோல்எனத் துயரம்
    புகுந்தெனைக் கலக்கிய போதும்
    கண்ணிலே எனது கருத்திலே கலந்த
    கருத்தனே நின்றனை அல்லால்
    மண்ணிலே வயங்கும் வானிலே பிறரை
    மதித்திலேன் மதிக்கின்றார் தமையும்
    நண்ணிலேன் வேறொன் றெண்ணிலேன் உனையே
    நம்பினேன் கைவிடேல் எனையே.
  • 6. ஊன்பெறும் உயிரும் உணர்ச்சியும் அன்பும்
    ஊக்கமும் உண்மையும் என்னைத்
    தான்பெறு தாயும் தந்தையும் குருவும்
    தனிப்பெருந் தெய்வமுந் தவமும்
    வான்பெறு பொருளும் வாழ்வும்நற் றுணையும்
    மக்களும் மனைவியும் உறவும்
    நான்பெறு நண்பும் யாவும்நீ என்றே
    நம்பினேன் கைவிடேல் எனையே.
  • 7. வாட்டமும் துயரும் அச்சமும் தவிர்த்தென்
    வடிவமும் வண்ணமும் உயிரும்
    தேட்டமும் நீயே கொண்டுநின் கருணைத்
    தேகமும் உருவும்மெய்ச் சிவமும்
    ஈட்டமும் எல்லாம் வல்லநின் னருட்பே
    ரின்பமும் அன்பும்மெய்ஞ் ஞான
    நாட்டமும் கொடுத்துக் காப்பதுன் கடன்நான்
    நம்பினேன் கைவிடேல் எனையே.
  • 8. வம்பனேன் பிறர்போல் வையமும் வானும்
    மற்றவும் மதித்திலேன் மதஞ்சார்
    உம்பனேர் அகங்கா ரந்தவிர்ந் தெல்லா
    உலகமும் வாழ்கவென் றிருந்தேன்
    செம்பொனே கருணைத் தெய்வமே எல்லாம்
    செயவல்ல சித்தனே சிவனே
    நம்பனே ஞான நாதனே உனையே
    நம்பினேன் கைவிடேல் எனையே.
  • 9. ஆயகால் இருந்தும் நடந்திட வலியில்
    லாமையால் அழுங்குவார் எனஉண்
    மேயகால் இருந்தும் திருவருள் உறஓர்
    விருப்பிலா மையின்மிக மெலிந்தேன்
    தீயகான் விலங்கைத் தூயமா னிடஞ்செய்
    சித்தனே சத்திய சபைக்கு
    நாயகா உயிர்க்கு நயகா உனையே
    நம்பினேன் கைவிடேல் எனையே.
  • 10. அற்றமும் மறைக்கும் அறிவிலா தோடி
    ஆடிய சிறுபரு வத்தே
    குற்றமும் குணங்கொண் டென்னைஆட் கொண்ட
    குணப்பெருங் குன்றமே குருவே
    செற்றமும் விருப்பும் தீர்த்தமெய்த் தவர்தம்
    சிந்தையில் இனிக்கின்ற தேனே
    நற்றக வுடைய நாதனே உனையே
    நம்பினேன் கைவிடேல் எனையே.
  • 11. படம்புரி பாம்பிற் கொடியனேன் கொடிய
    பாவியிற் பாவியேன் தீமைக்
    கிடம்புரி மனத்தேன் இரக்கம்ஒன் றில்லேன்
    என்னினும் துணைஎந்த விதத்தும்
    திடம்புரி நின்பொன் அடித்துணை எனவே
    சிந்தனை செய்திருக் கின்றேன்
    நடம்புரி கருணை நாயகா உனையே
    நம்பினேன் கைவிடேல் எனையே.
  • 12. படித்தனன் உலகப் படிப்பெலாம் மெய்ந்நூல்
    படித்தவர் தங்களைப் பார்த்து
    நொடித்தனன் கடிந்து நோக்கினேன் காம
    நோக்கினேன் பொய்யர்தம் உறவு
    பிடித்தனன் உலகில் பேதையர் மயங்கப்
    பெரியரில் பெரியர்போல் பேசி
    நடித்தனன் எனினும் நின்னடித் துணையே
    நம்பினேன் கைவிடேல் எனையே.
  • 13. பஞ்சுநேர் உலகப் பாட்டிலே மெலிந்த
    பாவியேன் சாவியே போன
    புஞ்செயே அனையேன் புழுத்தலைப் புலையேன்
    பொய்யெலாம் பூரித்த வஞ்ச
    நெஞ்சினேன் பாப நெறியினேன் சினத்தில்
    நெடியனேன் கொடியனேன் காம
    நஞ்சினேன் எனினும் அஞ்சினேன் உனையே
    நம்பினேன் கைவிடேல் எனையே.
  • 14. கயந்துளே உவட்டும் காஞ்சிரங் காயில்
    கடியனேன் காமமே கலந்து
    வியந்துளே மகிழும் வீணனேன் கொடிய
    வெகுளியேன் வெய்யனேன் வெறியேன்
    மயர்ந்துளேன் உலக வாழ்க்கையை மனையை
    மக்களை ஒக்கலை மதித்தே
    நயந்துளேன் எனினும் பயந்துளேன் உனையே
    நம்பினேன் கைவிடேல் எனையே.
  • 15. ஓடினேன் பெரும்பே ராசையால் உலகில்
    ஊர்தொறும் உண்டியே உடையே
    தேடினேன் காமச் சேற்றிலே விழுந்து
    தியங்கினேன் மயங்கினேன் திகைத்து
    வாடினேன் சிறிய வாரியான் மகிழ்ந்தேன்
    வஞ்சமே பொருளென மதித்து
    நாடினேன் எனினும் பாடினேன் உனையே
    நம்பினேன் கைவிடேல் எனையே.
  • 16. காட்டிலே திரியும் விலங்கினிற் கடையேன்
    கைவழக் கத்தினால் ஒடிந்த
    ஓட்டிலே எனினும் ஆசைவிட் டறியேன்
    உலுத்தனேன் ஒருசிறு துரும்பும்
    ஏட்டிலே எழுதிக் கணக்கிட்ட கொடியேன்
    எச்சிலும் உமிழ்ந்திடேன் நரக
    நாட்டிலே பெரியேன் என்னினும் உனையே
    நம்பினேன் கைவிடேல் எனையே.
  • 17. துனித்தவெம் மடவார் பகல்வந்த போது
    துறவியின் கடுகடுத் திருந்தேன்
    தனித்திர வதிலே வந்தபோ தோடித்
    தழுவினேன் தடமுலை விழைந்தேன்
    இனித்தசொல் புகன்றேன் என்பினைக் கறித்தே
    இடர்ப்பட்ட நாயென இளைத்தேன்
    நனித்தவ றுடையேன் என்னினும் உனையே
    நம்பினேன் கைவிடேல் எனையே.
  • 18. தார்த்தட முலையார் நான்பல ரொடுஞ்சார்
    தலத்திலே வந்தபோ தவரைப்
    பார்த்திலேன் வார்த்தை பகர்ந்திலேன் தவசுப்
    பாதகப் பூனைபோல் இருந்தேன்
    பேர்த்துநான் தனித்த போதுபோய் வலிந்து
    பேசினேன் வஞ்சரிற் பெரியேன்
    நார்த்திடர் உளத்தேன் என்னினும் உனையே
    நம்பினேன் கைவிடேல் எனையே.
  • 19. பெண்மையே விழைந்தேன் அவர்மனம் அறியேன்
    பேய்எனப் பிடித்தனன் மடவார்க்
    குண்மையே புகல்வான் போன்றவர் தமைத்தொட்
    டுவந்தகங் களித்தபொய் யுளத்தேன்
    தண்மையே அறியேன் வெம்மையே உடையேன்
    சாத்திரம் புகன்றுவாய் தடித்தேன்
    நண்மையே அடையேன் என்னினும் உனையே
    நம்பினேன் கைவிடேல் எனையே.
  • 20. வன்மையில் பொருள்மேல் இச்சைஇல் லவன்போல்
    வாதிபோல் வார்த்தைகள் வழங்கி
    அன்மையில் பிறர்பால் உளவினால் பொருளை
    அடிக்கடி வாங்கிய கொடியேன்
    இன்மையுற் றவருக் குதவிலேன் பொருளை
    எனைவிடக் கொடியருக் கீந்தேன்
    நன்மையுற் றறியேன் என்னினும் உனையே
    நம்பினேன் கைவிடேல் எனையே.
  • 21. கட்டமே அறியேன் அடுத்தவர் இடத்தே
    காசிலே ஆசையில் லவன்போல்
    பட்டமே காட்டிப் பணம்பறித் துழன்றேன்
    பகல்எலாம் தவசிபோல் இருந்தேன்
    இட்டமே இரவில் உண்டயல் புணர்ந்தே
    இழுதையிற் றூங்கினேன் களித்து
    நட்டமே புரிந்தேன் என்னினும் உனையே
    நம்பினேன் கைவிடேல் எனையே.
  • 22. காணியே கருதும் கருத்தினைப் பிறர்க்குக்
    காட்டிடா தம்பெலாம் அடங்கும்
    தூணியே எனச்சார்ந் திருந்தனன் சோற்றுச்
    சுகத்தினால் சோம்பினேன் உதவா
    ஏணியே அனையேன் இரப்பவர்க் குமியும்
    ஈந்திலேன் ஈந்தவன் எனவே
    நாணிலேன் உரைத்தேன் என்னினும் உனையே
    நம்பினேன் கைவிடேல் எனையே.
  • 23. அடுத்தவர் மயங்கி மதித்திட நினைத்தேன்
    அடிக்கடி பொய்களே புனைந்தே
    எடுத்தெடுத் துரைத்தேன் எனக்கெதிர் இலைஎன்
    றிகழ்ந்தனன் அகங்கரித் திருந்தேன்
    கொடுத்தவர் தமையே மிகவுப சரித்தேன்
    கொடாதவர் தமைஇகழ்ந் துரைத்தேன்
    நடுத்தய வறியேன் என்னினும் உனையே
    நம்பினேன் கைவிடேல் எனையே.
  • 24. எளியவர் விளைத்த நிலமெலாங் கவரும்
    எண்ணமே பெரிதுளேன் புன்செய்க்
    களியுணும் மனையில் சர்க்கரை கலந்து
    காய்ச்சுபால் கேட்டுண்ட கடையேன்
    துளியவர்க் குதவேன் விருப்பிலான் போலச்
    சுவைபெறச் சுவைத்தநாக் குடையேன்
    நளிர்எனச் சுழன்றேன் என்னினும் உனையே
    நம்பினேன் கைவிடேல் எனையே.
  • 25. கொலைபல புரிந்தே புலைநுகர்ந் திருந்தேன்
    கோடுறு குரங்கினிற் குதித்தே
    அலைதரு மனத்தேன் அறிவிலேன் எல்லாம்
    அறிந்தவன் போல்பிறர்க் குரைத்தேன்
    மலைவுறு சமய வலைஅகப் பட்டே
    மயங்கிய மதியினேன் நல்லோர்
    நலையல எனவே திரிந்தனன் எனினும்
    நம்பினேன் கைவிடேல் எனையே.
  • 26. ஈயெனப் பறந்தேன் எறும்பென உழன்றேன்
    எட்டியே எனமிகத் தழைத்தேன்
    பேயெனச் சுழன்றேன் பித்தனே எனவாய்ப்
    பிதற்றொடும் ஊர்தொறும் பெயர்ந்தேன்
    காயெனக் காய்த்தேன் கடையென நடந்தேன்
    கல்லெனக் கிடந்தனன் குரைக்கும்
    நாயெனத் திரிந்தேன் என்னினும் உனையே
    நம்பினேன் கைவிடேல் எனையே.
  • 27. ஒன்றியே உணவை உண்டுடல் பருத்த
    ஊத்தையேன் நாத்தழும் புறவே
    வென்றியே உரைத்து வினைகளே விளைத்த
    வீணனேன் ஊர்தொறுஞ் சுழன்ற
    பன்றியே அனையேன் கட்டுவார் அற்ற
    பகடெனத் திரிகின்ற படிறேன்
    நன்றியே அறியேன் என்னினும் உனையே
    நம்பினேன் கைவிடேல் எனையே.
  • 28. கவையெலாந் தவிர்ந்த வெறுமரம் அனையேன்
    கள்ளனேன் கள்ளுண்ட கடியேன்
    சுவையெலாம் விரும்பிச் சுழன்றதோர் கடையேன்
    துட்டனேன் தீதெலாந் துணிந்தேன்
    இவையெலாம் அந்நாள் உடையனோ அலனோ
    இந்தநாள் இறைவநின் அருளால்
    நவையெலாம் தவிர்ந்தேன் தூயனாய் நினையே
    நம்பினேன் கைவிடேல் எனையே.

அபயத் திறன் // அபயத் திறன்