திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
அருள்விளக்க மாலை
aruḷviḷakka mālai
திருவடிப் புகழ்ச்சி
tiruvaṭip pukaḻchsi
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

038. வரம்பில் வியப்பு
varampil viyappu

    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. பொன்புனை புயனும் அயனும்மற் றவரும்
    புகலரும் பெரியஓர் நிலையில்
    இன்புரு வாகி அருளொடும் விளங்கி
    இயற்றலே ஆதிஐந் தொழிலும்
    தன்பொதுச் சமுகத் தைவர்கள் இயற்றத்
    தனிஅர சியற்றும்ஓர் தலைவன்
    அன்பெனும் குடிசை நுழைந்தன னானால்
    அவன்தனை மறுப்பவர் யாரே.
  • 2. மன்பதை வகுக்கும் பிரமர்நா ரணர்கள்
    மன்னுருத் திரர்களே முதலா
    ஒன்பது கோடித் தலைவர்கள் ஆங்காங்
    குறுபெருந் தொழில்பல இயற்றி
    இன்புறச் சிறிதே கடைக்கணித் தருளி
    இலங்கும்ஓர் இறைவன்இன் றடியேன்
    அன்பெனும் குடிசை நுழைந்தனன் அந்தோ
    அவன்தனை மறுப்பவர் யாரே.
  • 3. தன்னிக ரில்லாத் தலைவஎன் றரற்றித்
    தனித்தனி மறைகள்ஆ கமங்கள்
    உன்னிநின் றோடி உணர்ந்துணர்ந் துணரா
    ஒருதனிப் பெரும்பதி உவந்தே
    புன்னிக ரில்லாப் புலையனேன் பிழைகள்
    பொறுத்தருட் பூரண வடிவாய்
    என்னுளம் புகுந்தே நிறைந்தனன் அந்தோ
    எந்தையைத் தடுப்பவர் யாரே.
  • 4. பால்வகை ஆணோ பெண்கொலோ இருமைப்
    பாலதோ பால்உறா அதுவோ
    ஏல்வகை ஒன்றோ இரண்டதோ அனாதி
    இயற்கையோ ஆதியின் இயல்போ
    மேல்வகை யாதோ எனமறை முடிகள்
    விளம்பிட விளங்கும்ஓர் தலைவன்
    மால்வகை மனத்தேன் உளக்குடில் புகுந்தான்
    வள்ளலைத் தடுப்பவர் யாரே.
  • 5. வரம்பெறும் ஆன்ம உணர்ச்சியும் செல்லா
    வருபர உணர்ச்சியும் மாட்டாப்
    பரம்பர உணர்ச்சி தானும்நின் றறியாப்
    பராபர உணர்ச்சியும் பற்றா
    உரம்பெற உணர்வார் யார்எனப் பெரியர்
    உரைத்திட ஓங்கும்ஓர் தலைவன்
    கரம்பெறு கனிபோல் என்னுளம் புகுந்தான்
    கடவுளைத் தடுப்பவர் யாரே.
  • 6. படைத்திடல் முதல்ஐந் தொழில்புரிந் திலங்கும்
    பரம்பர ஒளிஎலாம் அணுவில்
    கிடைத்திடக் கீழ்மேல் நடுஎனக் காட்டாக்
    கிளர்ஒளி யாய்ஒளிக் கெல்லாம்
    அடைத்தகா ரணமாய்க் காரணங் கடந்த
    அருட்பெருஞ் ஜோதியாம் ஒருவன்
    கடைத்தனிச் சிறியேன் உளம்புகுந் தமர்ந்தான்
    கடவுளைத் தடுப்பவர் யாரே.
  • 7. அளவெலாங் கடந்த பெருந்தலை அண்ட
    அடுக்கெலாம் அம்மஓர் அணுவின்
    பிளவில்ஓர் கோடிக் கூற்றில்ஒன் றாகப்
    பேசநின் றோங்கிய பெரியோன்
    களவெலாந் தவிர்த்தென் கருத்தெலாம் நிரப்பிக்
    கருணையா ரமுதளித் துளமாம்
    வளவிலே புகுந்து வளர்கின்றான் அந்தோ
    வள்ளலைத் தடுப்பவர் யாரே.
  • 8. உள்ளவாம் அண்ட கோடி கோடிகளில்
    உளவுயிர் முழுவதும் ஒருங்கே
    கொள்ளைகொண் டிடினும் அணுத்துணை எனினும்
    குறைபடாப் பெருங்கொடைத் தலைவன்
    கள்ளநெஞ் சகத்தேன் பிழைஎலாம் பொறுத்துக்
    கருத்தெலாம் இனிதுதந் தருளித்
    தள்ளரும் திறத்தென் உள்ளகம் புகுந்தான்
    தந்தையைத் தடுப்பவர் யாரே.
  • 9. அறிந்தன அறிந்தாங் கறிந்தறிந் தறியா
    தையகோ ஐயகோ அறிவின்
    மறிந்தன மயர்ந்தேம் எனமறை அனந்தம்
    வாய்குழைந் துரைத்துரைத் துரையும்
    முறிந்திட வாளா இருந்தஎன் றறிஞர்
    மொழியும்ஓர் தனிப்பெருந் தலைவன்
    செறிந்தென துளத்தில் சேர்ந்தனன் அவன்றன்
    திருவுளம் தடுப்பவர் யாரே.
  • 10. கருமுதற் கருவாய்க் கருவினுட் கருவாய்க்
    கருஎலாங் காட்டும்ஓர் கருவாய்க்
    குருமுதற் குருவாய்க் குருஎலாங் கிடைத்த
    கொள்கையாய்க் கொள்கையோ டளவா
    அருமுதல் அருவாய் அல்லவாய் அப்பால்
    அருட்பெருஞ் ஜோதியாந் தலைவன்
    மருவிஎன் உளத்தில் புகுந்தனன் அவன்தன்
    வண்மையைத் தடுப்பவர் யாரே.

வரம்பில் வியப்பு // வரம்பில் வியப்பு

No audios found!