திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
உண்மை கூறல்
uṇmai kūṟal
வரம்பில் வியப்பு
varampil viyappu
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

037. அருள்விளக்க மாலை
aruḷviḷakka mālai

    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. அருள்விளக்கே அருட்சுடரே அருட்சோதிச் சிவமே
    அருளமுதே அருள்நிறைவே அருள்வடிவப் பொருளே
    இருள்கடிந்தென் உளமுழுதும் இடங்கொண்ட பதியே
    என்அறிவே என்உயிரே எனக்கினிய உறவே
    மருள்கடிந்த மாமணியே மாற்றறியாப் பொன்னே
    மன்றில்நடம் புரிகின்ற மணவாளா எனக்கே
    தெருள்அளித்த திருவாளா ஞானஉரு வாளா
    தெய்வநடத் தரசேநான் செய்மொழிஏற் றருளே.
  • 2. கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
    குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
    ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண்ணீரே
    உகந்ததண்­ ரிடைமலர்ந்த சுகந்தமண மலரே
    மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
    மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
    ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
    ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
  • 3. இன்புறநான் எய்ப்பிடத்தே பெற்றபெரு வைப்பே
    ஏங்கியபோ தென்றன்னைத் தாங்கியநல் துணையே
    அன்புறஎன் உட்கலந்தே அண்ணிக்கும் அமுதே
    அச்சமெலாம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட குருவே
    என்பருவம் குறியாதே எனைமணந்த பதியே
    இச்சையுற்ற படிஎல்லாம் எனக்கருளும் துரையே
    துன்பறமெய் அன்பருக்கே பொதுநடஞ்செய் அரசே
    தூயதிரு வடிகளுக்கென் சொல்லும்அணிந் தருளே.
  • 4. ஒசித்தகொடி அனையேற்குக் கிடைத்தபெரும் பற்றே
    உள்மயங்கும் போதுமயக் கொழித்தருளும் தெளிவே
    பசித்தபொழு தெதிர்கிடைத்த பால்சோற்றுத் திரளே
    பயந்தபொழு தெல்லாம்என் பயந்தவிர்த்த துரையே
    நசித்தவரை எழுப்பிஅருள் நல்கியமா மருந்தே
    நான்புணர நானாகி நண்ணியமெய்ச் சிவமே
    கசித்தமனத் தன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே
    களித்தெனது சொன்மாலை கழலில்அணிந் தருளே.
  • 5. மனம்இளைத்து வாடியபோ தென்எதிரே கிடைத்து
    வாட்டமெலாம் தவிர்த்தெனக்கு வாழ்வளித்த நிதியே
    சினமுகத்தார் தமைக்கண்டு திகைத்தபொழு தவரைச்
    சிரித்தமுகத் தவராக்கி எனக்களித்த சிவமே
    அனம்உகைத்தான் அரிமுதலோர் துருவிநிற்க எனக்கே
    அடிமுடிகள் காட்டுவித்தே அடிமைகொண்ட பதியே
    இனம்எனப்பே ரன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே
    என்னுடைய சொன்மாலை யாவும்அணிந் தருளே.
  • 6. கங்குலிலே வருந்தியஎன் வருத்தமெலாம் தவிர்த்தே
    காலையிலே என்உளத்தே கிடைத்தபெருங் களிப்பே
    செங்குவளை மாலையொடு மல்லிகைப்பூ மாலை
    சேர்த்தணிந்தென் தனைமணந்த தெய்வமண வாளா
    எங்கும்ஒளி மயமாகி நின்றநிலை காட்டி
    என்அகத்தும் புறத்தும்நிறைந் திலங்கியமெய்ப் பொருளே
    துங்கமுறத் திருப்பொதுவில் திருநடஞ்செய் அரசே
    சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில்அணிந் தருளே.
  • 7. கரைந்துவிடா தென்னுடைய நாவகத்தே இருந்து
    கனத்தசுவை தருகின்ற கற்கண்டே கனிவாய்
    விரைந்துவந்தென் துன்பமெலாம் தவிர்த்தஅரு ளமுதே
    மெய்அருளே மெய்யாகி விளங்குகின்ற விளக்கே
    திரைந்தஉடல் விரைந்துடனே பொன்உடம்பே ஆகித்
    திகழ்ந்தழியா தோங்கஅருள் சித்தேமெய்ச் சத்தே
    வரைந்தென்னை மணம்புரிந்து பொதுநடஞ்செய் அரசே
    மகிழ்வொடுநான் புனைந்திடுஞ்சொன் மாலைஅணிந் தருளே.
  • 8. கதிக்குவழி காட்டுகின்ற கண்ணேஎன் கண்ணில்
    கலந்தமணி யேமணியில் கலந்தகதிர் ஒளியே
    விதிக்கும்உல குயிர்க்குயிராய் விளங்குகின்ற சிவமே
    மெய்யுணர்ந்தோர் கையகத்தே விளங்கியதீங் கனியே
    மதிக்குமதிக் கப்புறம்போய் வயங்குதனி நிலையே
    மறைமுடிஆ கமமுடிமேல் வயங்கும்இன்ப நிறைவே
    துதிக்கும்அன்பர் தொழப்பொதுவில் நடம்புரியும் அரசே
    சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில்அணிந் தருளே.
  • 9. அண்டவள வெவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
    அமைந்தசரா சரஅளவெவ் வளவோஅவ் வளவும்
    கண்டதுவாய் ஆங்கவைகள் தனித்தனியே அகத்தும்
    காண்புறத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும் விளங்க
    விண்டகுபே ரருட்சோதிப் பெருவெளிக்கு நடுவே
    விளங்கிஒரு பெருங்கருணைக் கொடிநாட்டி அருளாம்
    தண்டகும்ஓர் தனிச்செங்கோல் நடத்திமன்றில் நடிக்கும்
    தனிஅரசே என்மாலை தாளில்அணிந் தருளே.
  • 10. நல்லாசொல் யோகாந்தப் பதிகள்பல கோடி
    நாட்டியதோர் போதாந்தப் பதிகள்பல கோடி
    வல்லார்சொல் கலாந்தநிலைப் பதிகள்பல கோடி
    வழுத்தும்ஒரு நாதாந்தப் பதிகள்பல கோடி
    இல்லார்ந்த வேதாந்தப் பதிகள்பல கோடி
    இலங்குகின்ற சித்தாந்தப் பதிகள்பல கோடி
    எல்லாம்பே ரருட்சோதித் தனிச்செங்கோல் நடத்தும்
    என்அரசே என்மாலை இனிதுபுனைந் தருளே.
  • 11. நாட்டியதோர் சுத்தபரா சத்திஅண்டம் முதலா
    ஞானசத்தி அண்டமது கடையாக இவற்றுள்
    ஈட்டியபற் பலசத்தி சத்தர்அண்டப் பகுதி
    எத்தனையோ கோடிகளும் தன்நிழற்கீழ் விளங்கச்
    சூட்டியபொன் முடிஇலங்கச் சமரசமெய்ஞ் ஞானச்
    சுத்தசிவ சன்மார்க்கப் பெருநிலையில் அமர்ந்தே
    நீட்டியபே ரருட்சோதித் தனிச்செங்கோல் நடத்தும்
    நீதிநடத் தரசேஎன் நெடுஞ்சொல்அணிந் தருளே.
  • 12. தன்பெருமை தான்அறியாத் தன்மையனே எனது
    தனித்தலைவா என்னுயிர்க்குள் இனித்ததனிச் சுவையே
    நின்பெருமை நான்அறியேன் நான்மட்டோ அறியேன்
    நெடுமால்நான் முகன்முதலா மூர்த்திகளும் அறியார்
    அன்புறும்ஆ கமமறைகள் அறியாவே எனினும்
    அவரும்அவை களும்சிலசொல் அணிகின்றார் நினக்கே
    என்பருவம் குறியாதே எனையாண்ட அரசே
    யானும்அவர் போல்அணிகின் றேன்அணிந்திங் கருளே.
  • 13. உண்ணஉண்ணத் தெவிட்டாதே தித்தித்தென் உடம்போ
    டுயிர்உணர்வும் கலந்துகலந் துள்ளகத்தும் புறத்தும்
    தண்ணியவண் ணம்பரவப் பொங்கிநிறைந் தாங்கே
    ததும்பிஎன்றன் மயம்எல்லாம் தன்மயமே ஆக்கி
    எண்ணியஎன் எண்ணமெலாம் எய்தஒளி வழங்கி
    இலங்குகின்ற பேரருளாம் இன்னமுதத் திரளே
    புண்ணியமே என்பெரிய பொருளேஎன் அரசே
    புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே.
  • 14. நாட்டார்கள் சூழ்ந்துமதித் திடமணிமே டையிலே
    நடுஇருக்க என்றனையே நாட்டியபே ரிறைவா
    பாட்டாளர் பாடுதொறும் பரிசளிக்கும் துரையே
    பன்னுமறைப் பாட்டேமெய்ப் பாட்டினது பயனே
    கூட்டாளா சிவகாமக் கொடிக்கிசைந்த கொழுநா
    கோவேஎன் கணவாஎன் குரவாஎன்281 குணவா
    நீட்டாளர் புகழ்ந்தேத்த மணிமன்றில் நடிக்கும்
    நீதிநடத் தரசேஎன் நெடுமொழிகொண் டருளே.
  • 15. கைக்கிசைந்த பொருளேஎன் கருத்திசைந்த கனிவே
    கண்ணேஎன் கண்களுக்கே கலந்திசைந்த கணவா
    மெய்க்கிசைந்த அணியேபொன் மேடையில்என் னுடனே
    மெய்கலந்த தருணத்தே விளைந்தபெருஞ் சுகமே
    நெய்க்கிசைந்த உணவேஎன் நெறிக்கிசைந்த நிலையே
    நித்தியமே எல்லாமாஞ் சத்தியமே உலகில்
    பொய்க்கிசைந்தார் காணாதே பொதுநடஞ்செய் அரசே
    புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே.
  • 16. கொடுத்திடநான் எடுத்திடவும் குறையாத நிதியே
    கொல்லாத நெறியேசித் தெல்லாஞ்செய் பதியே
    மடுத்திடவும் அடுத்தடுத்தே மடுப்பதற்குள் ளாசை
    வைப்பதன்றி வெறுப்பறியா வண்ணநிறை அமுதே
    எடுத்தெடுத்துப் புகன்றாலும் உலவாத ஒளியே
    என்உயிரே என்உயிருக் கிசைந்தபெருந் துணையே
    தடுத்திடவல் லவர்இல்லாத் தனிமுதற்பே ரரசே
    தாழ்மொழிஎன் றிகழாதே தரித்துமகிழ்ந் தருளே.
  • 17. தனித்தனிமுக் கனிபிழிந்து வடித்தொன்றாக் கூட்டிச்
    சர்க்கரையுங் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே
    தனித்தநறுந் தேன்பெய்து பசும்பாலுந் தேங்கின்
    தனிப்பாலுஞ் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி
    இனித்தநறு நெய்அளந்தே இளஞ்சூட்டின் இறக்கி
    எடுத்தசுவைக் கட்டியினும் இனித்திடுந்தெள் ளமுதே
    அனித்தமறத் திருப்பொதுவில் விளங்குநடத் தரசே
    அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கல்அணிந் தருளே.
  • 18. மலைவறியாப் பெருஞ்சோதி வச்சிரமா மலையே
    மாணிக்க மணிப்பொருப்பே மரகதப்பேர் வரையே
    விலைஅறியா உயர்ஆணிப் பெருமுத்துத் திரளே
    விண்ணவரும் நண்ணரும்ஓர் மெய்ப்பொருளின் விளைவே
    கொலைஅறியாக் குணத்தோர்தங் கூட்டுறவே அருட்செங்
    கோல்நடத்து கின்றதனிக் கோவேமெய் அறிவால்
    நிலைஅறிந்தோர் போற்றுமணி மன்றில்நடத் தரசே
    நின்னடிப்பொன் மலர்களுக்கென் நெடுஞ்சொல்அணிந் தருளே.
  • 19. கண்களிக்கப் புகைசிறிதும் காட்டாதே புருவக்
    கலைநடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே
    பண்களிக்கப் பாடுகின்ற பாட்டில்விளை சுகமே
    பத்தருளே தித்திக்கப் பழுத்ததனிப் பழமே
    மண்களிக்க வான்களிக்க மணந்தசிவ காம
    வல்லிஎன மறைகளெலாம் வாழ்த்துகின்ற வாமப்
    பெண்களிக்கப் பொதுநடஞ்செய் நடத்தரசே நினது
    பெரும்புகழ்ச்சே வடிகளுக்கென் அரும்பும்அணிந் தருளே.
  • 20. உருவெளியே உருவெளிக்குள் உற்றவெளி உருவே
    உருநடுவும் வெளிநடுவும் ஒன்றான ஒன்றே
    பெருவெளியே பெருவெளியில் பெருஞ்சோதி மயமே
    பெருஞ்சோதி மயநடுவே பிறங்குதனிப் பொருளே
    மருஒழியா மலர்அகத்தே வயங்குஒளி மணியே
    மந்திரமே தந்திரமே மதிப்பரிய மருந்தே
    திருஒழியா தோங்குமணி மன்றில்நடத் தரசே
    சிறுமொழிஎன் றிகழாதே சேர்த்துமகிழ்ந் தருளே.
  • 21. நான்என்றும் தான்என்றும் நாடாத நிலையில்
    ஞானவடி வாய்விளங்கும் வானநடு நிலையே
    ஊன்என்றும் உயிர்என்றும் குறியாமே முழுதும்
    ஒருவடிவாம் திருவடிவம் உவந்தளித்த பதியே
    தேன்என்றும் கரும்பென்றும் செப்பரிதாய் மனமும்
    தேகமும்உள் ளுயிர்உணர்வும் தித்திக்கும் சுவையே
    வான்என்றும் ஒளிஎன்றும் வகுப்பரிதாம் பொதுவில்
    வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே.
  • 22. எட்டிரண்டும் என்என்றால் மயங்கியஎன் றனக்கே
    எட்டாத நிலைஎல்லாம் எட்டுவித்த குருவே
    சுட்டிரண்டுங் காட்டாதே துரியநிலை நடுவே
    சுகமயமாய் விளங்குகின்ற சுத்தபரம் பொருளே
    மட்டிதுஎன் றறிவதற்கு மாட்டாதே மறைகள்
    மவுனம்உறப் பரம்பரத்தே வயங்குகின்ற ஒளியே
    தட்டறியாத் திருப்பொதுவில் தனிநடஞ்செய் அரசே
    தாழ்மொழிஎன் றிகழாதே தரித்துமகிழ்ந் தருளே.
  • 23. சாதிகுலம் சமயமெலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித்
    தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளே
    ஆதிநடுக் கடைகாட்டா தண்டபகி ரண்டம்
    ஆருயிர்கள் அகம்புறம்மற் றனைத்தும்நிறை ஒளியே
    ஓதிஉணர்ந் தவர்எல்லாம் எனைக்கேட்க எனைத்தான்
    ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச்செய் உறவே
    சோதிமய மாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்
    தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
  • 24. அடிக்கடிஎன் அகத்தினிலும் புறத்தினிலும் சோதி
    அருள்உருவாய்த் திரிந்துதிரிந் தருள்கின்ற பொருளே
    படிக்களவின் மறைமுடிமேல் ஆகமத்தின் முடிமேல்
    பதிந்தபதம் என்முடிமேல் பதித்ததனிப் பதியே
    பொடிக்கனகத் திருமேனித் திருமணங்கற் பூரப்
    பொடிமணத்தோ டகம்புறமும் புதுமணஞ்செய் அமுதே
    அடிக்கனக அம்பலத்தே திருச்சிற்றம் பலத்தே
    ஆடல்புரி அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
  • 25. அறையாத மிகுபெருங்காற் றடித்தாலும் சிறிதும்
    அசையாதே அவியாதே அண்டபகி ரண்டத்
    துறையாவும் பிண்டவகைத் துறைமுழுதும் விளங்கத்
    தூண்டாதே விளங்குகின்ற ஜோதிமணி விளக்கே
    மறையாதே குறையாதே களங்கமும் இல்லாதே
    மயக்காதே பனிக்காதே வயங்குகின்ற மதியே
    இறையாய்எவ் வுயிரகத்தும் அகப்புறத்தும் புறத்தும்
    இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
  • 26. பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப்
    பக்கம்நின்று கேட்டாலும் பரிந்துள்உணர்ந் தாலும்
    ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டிஅணைத் தாலும்
    இத்தனைக்கும் தித்திக்கும் இனித்தசுவைக் கரும்பே
    வேர்த்தாவி மயங்காது கனிந்தநறுங் கனியே
    மெய்ம்மைஅறி வானந்தம் விளக்கும்அருள் அமுதே
    தீர்த்தாஎன் றன்பர்எலாம் தொழப்பொதுவில் நடிக்கும்
    தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
  • 27. பற்றுதலும் விடுதலும்உள் அடங்குதலும் மீட்டும்
    படுதலொடு சுடுதலும்புண் படுத்தலும்இல் லாதே
    உற்றொளிகொண் டோங்கிஎங்கும் தன்மயமாய் ஞான
    உருவாகி உயிர்க்குயிராய் ஓங்குகின்ற நெருப்பே
    சுற்றுதலும் தோன்றுதலும் மறைதலும்வெச் சென்றே
    சுடுதலும்இல் லாதென்றும் துலங்குகின்ற சுடரே
    முற்றும்உணர்ந் தவர்உளத்தே திருச்சிற்றம் பலத்தே
    முயங்கும்நடத் தரசேஎன் மொழியும்அணிந் தருளே.
  • 28. ஐம்பூத பரங்கள்முதல் நான்கும்அவற் றுள்ளே
    அடுத்திடுநந் நான்கும்அவை அகம்புறமேல் நடுக்கீழ்
    கம்பூத பக்கமுதல் எல்லாந்தன் மயமாய்க்
    காணும்அவற் றப்புறமும் கலந்ததனிக் கனலே
    செம்பூத உலகங்கள் பூதாண்ட வகைகள்
    செழித்திடநற் கதிர்பரப்பித் திகழ்கின்ற சுடரே
    வெம்பூதத் தடைதவிர்ந்தார் ஏத்தமணி மன்றில்
    விளங்கும்நடத் தரசேஎன் விளம்பும்அணிந் தருளே.
  • 29. வாதுறும்இந் தியகரண பரங்கள்முதல் நான்கும்
    வகுத்திடுநந் நான்கும்அகம் புறமேல்கீழ் நடுப்பால்
    ஓதுறும்மற் றெல்லாந்தன் மயமாகக் கலந்தே
    ஓங்கவற்றின் அப்புறமும் ஒளிர்கின்ற ஒளியே
    சூதுறுமிந் தியகரண லோகாண்டம் அனைத்தும்
    சுடர்பரப்பி விளங்குகின்ற சுயஞ்சோதிச் சுடரே
    போதுறுவார் பலர்நின்று போற்றநடம் பொதுவில்
    புரியும்நடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.
  • 30. பகுதிபர முதல்நான்கும் அவற்றுறுநந் நான்கும்
    பரவிஎலாம் தன்மயமாம் படிநிறைந்து விளங்கித்
    தகுதிபெறும் அப்பகுதிக் கப்புறமும் சென்றே
    தனிஒளிச்செங் கோல்நடத்தித் தழைக்கின்ற ஒளியே
    மிகுதிபெறு பகுதிஉல கம்பகுதி அண்டம்
    விளங்கஅருட் சுடர்பரப்பி விளங்குகின்ற சுடரே
    தொகுதிபெறு கடவுளர்கள் ஏத்தமன்றில் நடிக்கும்
    துரியநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
  • 31. மாமாயைப் பரமாதி நான்கும்அவற் றுள்ளே
    வயங்கியநந் நான்குந்தன் மயத்தாலே விளக்கி
    ஆமாறம் மாமாயைக் கப்புறத்தும் நிறைந்தே
    அறிவொன்றே வடிவாகி விளங்குகின்ற ஒளியே
    தாமாயா புவனங்கள் மாமாயை அண்டம்
    தழைத்துவிளங் கிடக்கதிர்செய் தனித்தபெருஞ் சுடரே
    தேமாலும் பிரமனும்நின் றேத்தமன்றில் நடிக்கும்
    தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
  • 32. சுத்தபர முதல்நான்கும் அவற்றுறுநந் நான்கும்
    தூயஒளி வடிவாகத் துலங்கும்ஒளி அளித்தே
    நித்தபரம் பரநடுவாய் முதலாய்அந் தமதாய்
    நீடியஓர் பெருநிலைமேல் ஆடியபே ரொளியே
    வித்தமுறும் சுத்தபர லோகாண்டம் அனைத்தும்
    விளக்கமுறச் சுடர்பரப்பி விளங்குகின்ற சுடரே
    சத்தியஞா னானந்தச் சித்தர்புகழ் பொதுவில்
    தனித்தநடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
  • 33. சாற்றுகின்ற கலைஐந்தில் பரமாதி நான்கும்
    தக்கஅவற் றூடிருந்த நந்நான்கும் நிறைந்தே
    ஊற்றுகின்ற அகம்புறமேல் நடுக்கீழ்மற் றனைத்தும்
    உற்றிடுந்தன் மயமாகி ஒளிர்கின்ற ஒளியே
    தோற்றுகின்ற கலைஉலகம் கலைஅண்ட முழுதும்
    துலங்குகின்ற சுடர்பரப்பிச் சூழ்கின்ற சுடரே
    போற்றுகின்ற மெய்அடியர் களிப்பநடித் தருளும்
    பொதுவில்நடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.
  • 34. நாட்டியஓங் காரம்ஐந்தில் பரமுதல்ஓர் நான்கும்
    நந்நான்கு மாறிடத்தும் நயந்துநிறைந் தருளி
    ஈட்டியசெம் பொருள்நிலையோ டிலக்கியமும் விளங்க
    இனிதுநின்று விளங்குகின்ற இன்பமய ஒளியே
    கூட்டியஓங் காரஉல கோங்கார அண்டம்
    குடிவிளங்கக் கதிர்பரப்பிக் குலவுபெருஞ் சுடரே
    பாட்டியல்கொண் டன்பரெலாம் போற்றமன்றில் நடிக்கும்
    பரமநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.
  • 35. மன்னுகின்ற அபரசத்திப் பரமாதி அவற்றுள்
    வகுத்தநிலை யாதிஎலாம் வயங்கவயின் எல்லாம்
    பன்னுகின்ற பற்பலவாம் விசித்திரசித் திரங்கள்
    பரவிவிளங் கிடவிளங்கிப் பதிந்தருளும் ஒளியே
    துன்அபர சத்திஉல கபரசத்தி அண்டம்
    சுகம்பெறவே கதிர்பரப்பித் துலங்குகின்ற சுடரே
    உன்னும்அன்பர் உளங்களிக்கத் திருச்சிற்றம் பலத்தே
    ஓங்கும்நடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
  • 36. விளங்குபர சத்திகளின் பரமாதி அவற்றுள்
    விரிந்தநிலை யாதிஎலாம் விளங்கிஒளி வழங்கிக்
    களங்கமிலாப் பரவெளியில் அந்தம்முதல் நடுத்தான்
    காட்டாதே நிறைந்தெங்கும் கலந்திடும்பே ரொளியே
    உளங்குலவு பரசத்தி உலகமண்ட முழுதும்
    ஒளிவிளங்கச் சுடர்பரப்பி ஓங்குதனிச் சுடரே
    வளங்குலவு திருப்பொதுவில் மாநடஞ்செய் அரசே
    மகிழ்ந்தெனது சொல்எனும்ஓர் மாலைஅணிந் தருளே.
  • 37. தெரிந்தமகா சுத்தபர முதலும்அவற் றுள்ளே
    சிறந்தநிலை யாதிகளும் தெளிந்துவிளங் குறவே
    பரிந்தஒரு சிவவெளியில் நீக்கமற நிறைந்தே
    பரமசுக மயமாகிப் பரவியபே ரொளியே
    விரிந்தமகா சுத்தபர லோகாண்ட முழுதும்
    மெய்அறிவா னந்தநிலை விளக்குகின்ற சுடரே
    புரிந்ததவப் பயனாகும் பொதுவில்நடத் தரசே
    புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே.
  • 38. வாய்ந்தபர நாதம்ஐந்தில் பரமுதலும் அவற்றுள்
    மன்னுநிலை யாதிகளும் வயங்கியிட நிறைந்தே
    ஆய்ந்தபர சிவவெளியில் வெளிஉருவாய் எல்லாம்
    ஆகியதன் இயல்விளக்கி அலர்ந்திடும்பே ரொளியே
    தோய்ந்தபர நாதஉல கண்டமெலாம் விளங்கச்
    சுடர்பரப்பி விளங்குகின்ற தூயதனிச் சுடரே
    வேய்ந்தமணி மன்றிடத்தே நடம்புரியும் அரசே
    விளம்புறும்என் சொன்மாலை விளங்கஅணிந் தருளே.
  • 39. கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
    காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
    வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே
    மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
    நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
    நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
    எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே
    என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே.
  • 40. காட்சியுறக் கண்களுக்குக் களிக்கும் வண்ணம் உளதாய்க்
    கையும்மெய்யும் பரிசிக்கச் சுகபரிசத் ததுவாய்ச்
    சூழ்ச்சியுற நாசிக்குச் சுகந்தஞ்செய் குவதாய்த்
    தூயசெவிக் கினியதொரு சுகநாதத் ததுவாய்
    மாட்சியுற வாய்க்கினிய பெருஞ்சுவைஈ குவதாய்
    மறைமுடிமேல் பழுத்தெனக்கு வாய்த்தபெரும் பழமே
    ஆட்சியுற அருள்ஒளியால் திருச்சிற்றம் பலத்தே
    ஆடல்புரி அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
  • 41. திரைஇலதாய் அழிவிலதாய்த் தோலிலதாய்ச் சிறிதும்
    சினைப்பிலதாய்ப் பனிப்பிலதாய்ச் செறிந்திடுகோ திலதாய்
    விரைஇலதாய்ப் புரைஇலதாய் நார்இலதாய் மெய்யே
    மெய்யாகி அருள்வண்ணம் விளங்கிஇன்ப மயமாய்ப்
    பரைவெளிக்கப் பால்விளங்கு தனிவெளியில் பழுத்தே
    படைத்தஎன துளத்தினிக்கக் கிடைத்ததனிப் பழமே
    உரைவளர்மா மறைகளெலாம் போற்றமணிப் பொதுவில்
    ஓங்கும்நடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
  • 42. கார்ப்பிலதாய்த் துவர்ப்பிலதாய் உவர்ப்பிலதாய்ச் சிறிதும்
    கசப்பிலதாய்ப் புளிப்பிலதாய்க் காய்ப்பிலதாய்ப் பிறவில்
    சேர்ப்பிலதாய் எஞ்ஞான்றும் திரிபிலதாய் உயிர்க்கே
    தினைத்தனையும் நோய்தரும்அத் தீமைஒன்றும் இலதாய்ப்
    பார்ப்பனையேன் உள்ளகத்தே விளங்கிஅறி வின்பம்
    படைத்திடமெய்த் தவப்பயனால் கிடைத்ததனிப் பழமே
    ஓர்ப்புடையார் போற்றமணி மன்றிடத்தே வெளியாய்
    ஓங்கியபே ரரசேஎன் உரையும்அணிந் தருளே.
  • 43. தெற்றியிலே நான்பசித்துப் படுத்திளைத்த தருணம்
    திருஅமுதோர் திருக்கரத்தே திகழ்வள்ளத் தெடுத்தே
    ஒற்றியிற்போய்ப் பசித்தனையோ என்றெனையங் கெழுப்பி
    உவந்துகொடுத் தருளியஎன் உயிர்க்கினிதாந் தாயே
    பற்றியஎன் பற்றனைத்தும் தன்அடிப்பற் றாகப்
    பரிந்தருளி எனைஈன்ற பண்புடைஎந் தாயே
    பெற்றியுளார் சுற்றிநின்று போற்றமணிப் பொதுவில்
    பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்உவந் தருளே.
  • 44. தாய்முதலோ ரொடுசிறிய பருவமதில்282 தில்லைத்
    தலத்திடையே திரைதூக்கத் தரிசித்த போது
    வேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே எல்லாம்
    வெளியாகக் காட்டியஎன் மெய்உறவாம் பொருளே
    காய்வகைஇல் லாதுளத்தே கனிந்தநறுங் கனியே
    கனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியாக் களிப்பே
    தூய்வகையோர் போற்றமணி மன்றில்நடம் புரியும்
    சோதிநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
  • 45. ஓங்கியஓர் துணைஇன்றிப் பாதிஇர வதிலே
    உயர்ந்தஓட்டுத் திண்ணையிலே படுத்தகடைச் சிறியேன்
    தூங்கிமிகப் புரண்டுவிழத் தரையில்விழா தெனையே
    தூக்கிஎடுத் தணைத்துக்கீழ்க் கிடத்தியமெய்த் துணையே
    தாங்கியஎன் உயிர்க்கின்பம் தந்தபெருந் தகையே
    சற்குருவே நான்செய்பெருந் தவப்பயனாம் பொருளே
    ஏங்கியஎன் ஏக்கமெலாம் தவிர்த்தருளிப் பொதுவில்
    இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
  • 46. தனிச்சிறியேன் சிறிதிங்கே வருந்தியபோ ததனைத்
    தன்வருத்தம் எனக்கொண்டு தரியாதக் கணத்தே
    பனிப்புறும்அவ் வருத்தமெலாம் தவிர்த்தருளி மகனே
    பயம்உனக்கென் என்றென்னைப் பரிந்தணைத்த குருவே
    இனிப்புறுநன் மொழிபுகன்றென் முடிமிசையே மலர்க்கால்
    இணைஅமர்த்தி எனையாண்ட என்னுயிர்நற் றுணையே
    கனித்தநறுங் கனியேஎன் கண்ணேசிற் சபையில்
    கலந்தநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே.
  • 47. ஒருமடந்தை வலிந்தணைந்து கலந்தகன்ற பின்னர்
    உளம்வருந்தி என்செய்தோம் என்றயர்ந்த போது
    பெருமடஞ்சேர் பிள்ளாய்என் கெட்டதொன்றும் இலைநம்
    பெருஞ்செயல்என் றெனைத்தேற்றிப் பிடித்தபெருந் தகையே
    திருமடந்தை மார்இருவர் என்எதிரே நடிக்கச்
    செய்தருளிச் சிறுமைஎலாம் தீர்த்ததனிச் சிவமே
    கருமடம்தீர்ந் தவர்எல்லாம் போற்றமணி மன்றில்
    காட்டும்நடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.
  • 48. இருள்இரவில் ஒருமூலைத் திண்ணையில்நான் பசித்தே
    இளைப்புடனே படுத்திருக்க எனைத்தேடி வந்தே
    பொருள்உணவு கொடுத்துண்ணச் செய்வித்தே பசியைப்
    போக்கிஅருள் புரிந்தஎன்றன் புண்ணியநற் றுணையே
    மருள்இரவு நீக்கிஎல்லா வாழ்வும்எனக் கருளி
    மணிமேடை நடுஇருக்க வைத்தஒரு மணியே
    அருள்உணவும் அளித்தென்னை ஆட்கொண்ட சிவமே
    அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
  • 49. நான்பசித்த போதெல்லாம் தான்பசித்த தாகி
    நல்உணவு கொடுத்தென்னைச் செல்வம்உற வளர்த்தே
    ஊன்பசித்த இளைப்பென்றும் தோற்றாத வகையே
    ஒள்ளியதெள் ளமுதெனக்கிங் குவந்தளித்த ஒளியே
    வான்பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம்
    வாழ்வெனக்கே ஆகியுற வரம்அளித்த பதியே
    தேன்பரித்த மலர்மணமே திருப்பொதுவில் ஞானத்
    திருநடஞ்செய் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
  • 50. நடைக்குரிய உலகிடைஓர் நல்லநண்பன் ஆகி
    நான்குறித்த பொருள்கள்எலாம் நாழிகைஒன் றதிலே
    கிடைக்கஎனக் களித்தகத்தும் புறத்தும்அகப் புறத்தும்
    கிளர்ந்தொளிகொண் டோங்கியமெய்க் கிளைஎனும்பே ரொளியே
    படைப்புமுதல் ஐந்தொழிலும் கொள்கஎனக் குறித்தே
    பயந்தீர்த்தென் உள்ளகத்தே அமர்ந்ததனிப் பதியே
    கடைப்படும்என் கரத்தில்ஒரு கங்கணமும் தரித்த
    ககனநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே.
  • 51. நீநினைத்த நன்மைஎலாம் யாம்அறிந்தோம் நினையே
    நேர்காண வந்தனம்என் றென்முடிமேல்283 மலர்க்கால்
    தான்நிலைக்க வைத்தருளிப் படுத்திடநான் செருக்கித்
    தாள்களெடுத் தப்புறத்தே வைத்திடத்தான் நகைத்தே
    ஏன்நினைத்தாய் இவ்வளவு சுதந்தரம்என் மகனே
    எனக்கிலையோ என்றருளி எனையாண்ட குருவே
    தேன்நிலைத்த தீம்பாகே சர்க்கரையே கனியே
    தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
  • 52. மூர்த்திகளும் நெடுங்காலம் முயன்றாலும் அறிய
    முடியாத முடிவெல்லாம் முன்னியஓர் தினத்தே
    ஆர்த்தியுடன் அறியஎனக் களித்தருளி அடியேன்
    அகத்தினைத்தன் இடமாக்கி அமர்ந்தஅருட் குருவே
    பார்த்திபரும் விண்ணவரும் பணிந்துமகிழ்ந் தேத்தப்
    பரநாத நாட்டரசு பாலித்த பதியே
    ஏர்த்திகழும் திருப்பொதுவில் இன்பநடத் தரசே
    என்னுடைய சொன்மாலை இலங்கஅணிந் தருளே.
  • 53. இச்சைஒன்றும் இல்லாதே இருந்தஎனக் கிங்கே
    இயலுறுசன் மார்க்கநிலைக் கிச்சையைஉண் டாக்கித்
    தச்சுறவே பிறமுயற்சி செயுந்தோறும் அவற்றைத்
    தடையாக்கி உலகறியத் தடைதீர்த்த குருவே
    எச்சமய முடிபுகளும் திருச்சிற்றம் பலத்தே
    இருந்தஎன எனக்கருளி இசைவித்த இறையே
    முச்சகமும் புகழமணி மன்றிடத்தே நடிக்கும்
    முதல்அரசே என்னுடைய மொழியும்அணிந் தருளே.
  • 54. கையாத தீங்கனியே கயக்காத அமுதே
    கரையாத கற்கண்டே புரையாத கரும்பே
    பொய்யாத பெருவாழ்வே புகையாத கனலே
    போகாத புனலேஉள் வேகாத காலே
    கொய்யாத நறுமலரே கோவாத மணியே
    குளியாத பெருமுத்தே ஒளியாத வெளியே
    செய்யாத பேருதவி செய்தபெருந் தகையே
    தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
  • 55. எண்ணாத மந்திரமே எழுதாத மறையே
    ஏறாத மேனிலைநின் றிறங்காத நிறைவே
    பண்ணாத பூசையிலே படியாத படிப்பே
    பாராத பார்வையிலே பதியாத பதிப்பே
    நண்ணாத மனத்தகத்தே அண்ணாத நலமே
    நாடாத நாட்டகத்தே நடவாத நடப்பே
    அண்ணாஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
    அடிஇணைக்கென் சொன்மாலை அணிந்துமகிழ்ந் தருளே.
  • 56. சாகாத கல்வியிலே தலையான நிலையே
    சலியாத காற்றிடைநின் றொலியாத கனலே
    ஏகாத புனலிடத்தே இடியாத புவியே
    ஏசாத மந்திரத்தே பேசாத பொருளே
    கூகாஎன் றெனைக்கூடி எடுக்காதே என்றும்
    குலையாத வடிவெனக்கே கொடுத்ததனி அமுதே
    மாகாதல் உடையார்கள் வழுத்தமணிப் பொதுவில்
    மாநடஞ்செய் அரசேஎன் மாலையும்ஏற் றருளே.
  • 57. சுத்தநிலை அனுபவங்கள் தோன்றுவெளி யாகித்
    தோற்றும்வெளி யாகிஅவை தோற்றுவிக்கும் வெளியாய்
    நித்தநிலை களின்நடுவே நிறைந்தவெளி யாகி
    நீயாகி நானாகி நின்றதனிப்பொருளே
    சத்தியமே சத்துவமே தத்துவமே நவமே
    சமரசசன் மார்க்கநிலைத் தலைநின்ற சிவமே
    புத்தமுதே சித்திஎலாம் வல்லதிருப் பொதுவில்
    புனிதநடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.
  • 58. நான்அளக்குந் தோறும்அதற் குற்றதுபோல் காட்டி
    நாட்டியபின் ஒருசிறிதும் அளவில்உறா தாகித்
    தான்அளக்கும் அளவதிலே முடிவெனத் தோற்றித்
    தன்அளவுங் கடந்தப்பால் மன்னுகின்ற பொருளே
    வான்அளக்க முடியாதே வான்அனந்தங் கோடி
    வைத்தபெரு வான்அளக்க வசமோஎன் றுரைத்துத்
    தேன்அளக்கும் மறைகளெலாம் போற்றமணி மன்றில்
    திகழுநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
  • 59. திசையறிய மாட்டாதே திகைத்தசிறி யேனைத்
    தெளிவித்து மணிமாடத் திருத்தவிசில் ஏற்றி
    நசைஅறியா நற்றவரும் மற்றவருஞ் சூழ்ந்து
    நயப்பஅருட் சிவநிலையை நாட்டவைத்த பதியே
    வசையறியாப் பெருவாழ்வே மயல்அறியா அறிவே
    வான்நடுவெ இன்பவடி வாய்இருந்த பொருளே
    பசைஅறியா மனத்தவர்க்கும் பசைஅறிவித் தருளப்
    பரிந்தநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.
  • 60. என்உயிரும் என்உடலும் என்பொருளும் யானே
    இசைந்துகொடுத் திடவாங்கி இட்டதன்பின் மகிழ்ந்தே
    தன்உயிரும் தன்உடலும் தன்பொருளும் எனக்கே
    தந்துகலந் தெனைப்புணர்ந்த தனித்தபெருஞ் சுடரே
    மன்உயிருக் குயிராகி இன்பமுமாய் நிறைந்த
    மணியேஎன் கண்ணேஎன் வாழ்முதலே மருந்தே
    மின்னியபொன் மணிமன்றில் விளங்குநடத் தரசே
    மெய்யும்அணிந் தருள்வோய்என் பொய்யும்அணிந் தருளே.
  • 61. மன்னுகின்ற பொன்வடிவும் மந்திரமாம் வடிவும்
    வான்வடிவும் கொடுத்தெனக்கு மணிமுடியுஞ் சூட்டிப்
    பன்னுகின்ற தொழில்ஐந்துஞ்செய்திடவே பணித்துப்
    பண்புறஎன் அகம்புறமும் விளங்குகின்ற பதியே
    உன்னுகின்ற தோறும்எனக் குள்ளமெலாம் இனித்தே
    ஊறுகின்ற தெள்ளமுதே ஒருதனிப்பே ரொளியே
    மின்னுகின்ற மணிமன்றில் விளங்குநடத் தரசே
    மெய்யும்அணிந் தருள்வோய்என் பொய்யும்அணிந் தருளே.
  • 62. நன்மைஎலாம் தீமைஎனக் குரைத்தோடித் திரியும்
    நாய்க்குலத்தில் கடையான நாயடியேன் இயற்றும்
    புன்மைஎலாம் பெருமைஎனப் பொறுத்தருளிப் புலையேன்
    பொய்உரைமெய் உரையாகப் புரிந்துமகிழ்ந் தருளித்
    தன்மைஎலாம் உடையபெருந் தவிசேற்றி முடியும்
    தரித்தருளி ஐந்தொழில்செய் சதுர்அளித்த பதியே
    இன்மைஎலாம் தவிர்ந்தடியார் இன்பமுறப் பொதுவில்
    இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
  • 63. விழுக்குலத்தார் அருவருக்கும் புழுக்குலத்தில் கடையேன்
    மெய்யுரையேன் பொய்யுரையை வியந்துமகிழ்ந் தருளி
    முழுக்குலத்தோர் முடிசூட்டி ஐந்தொழில்செய் எனவே
    மொழிந்தருளி எனையாண்ட முதற்றனிப்பே ரொளியே
    எழுக்குலத்தில் புரிந்தமனக் கழுக்குலத்தார் தமக்கே
    எட்டாத நிலையேநான் எட்டியபொன் மலையே
    மழுக்குலத்தார் போற்றமணி மன்றில்நடம் புரியும்
    மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.
  • 64. கலைக்கொடிகண் டறியாத புலைக்குடியில் கடையேன்
    கைதவனேன் பொய்தவமும் கருத்தில்உவந் தருளி
    மலைக்குயர்மாத் தவிசேற்றி மணிமுடியுஞ் சூட்டி
    மகனேநீ வாழ்கஎன வாழ்த்தியஎன் குருவே
    புலைக்கொடியார் ஒருசிறிதும் புலப்படக்கண் டறியாப்
    பொன்னேநான் உண்ணுகின்ற புத்தமுதத் திரளே
    விலைக்கறியா மாமணியே வெறுப்பறியா மருந்தே
    விளங்குநடத் தரசேஎன் விளம்பும்அணிந் தருளே.
  • 65. மதம்என்றும் சமயம்என்றும் சாத்திரங்கள் என்றும்
    மன்னுகின்ற தேவர்என்றும் மற்றவர்கள் வாழும்
    பதம்என்றும் பதம்அடைந்த பத்தர்அனு பவிக்கப்
    பட்டஅனு பவங்கள்என்றும் பற்பலவா விரிந்த
    விதம்ஒன்றும் தெரியாதே மயங்கியஎன் தனக்கே
    வெட்டவெளி யாஅறிவித் திட்டஅருள் இறையே
    சதம்ஒன்றும் சுத்தசிவ சன்மார்க்கப் பொதுவில்
    தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
  • 66. என்ஆசை எல்லாம்தன் அருள்வடிவந் தனக்கே
    எய்திடச்செய் திட்டருளி எனையும்உடன் இருத்தித்
    தன்ஆசை எல்லாம்என் உள்ளகத்தே வைத்துத்
    தானும்உடன் இருந்தருளிக் கலந்தபெருந் தகையே
    அன்னாஎன் ஆருயிரே அப்பாஎன் அமுதே
    ஆவாஎன் றெனையாண்ட தேவாமெய்ச் சிவமே
    பொன்னாரும் பொதுவில்நடம் புரிகின்ற அரசே
    புண்ணியனே என்மொழிப்பூங் கண்ணியும்ஏற் றருளே.
  • 67. தன்அரசே செலுத்திநின்ற தத்துவங்கள் அனைத்தும்
    தனித்தனிஎன் வசமாகித் தாழ்ந்தேவல் இயற்ற
    முன்அரசும் பின்அரசும் நடுஅரசும் போற்ற
    முன்னும்அண்ட பிண்டங்கள் எவற்றினும்எப் பாலும்
    என்அரசே என்றுரைக்க எனக்குமுடி சூட்டி
    இன்பவடி வாக்கிஎன்றும் இலங்கவைத்த சிவமே
    என்அரசே என்உயிரே என்இருகண் மணியே
    இணைஅடிப்பொன் மலர்களுக்கென் இசையும்அணிந் தருளே.
  • 68. பரவெளியே நடுவெளியே உபசாந்த வெளியே
    பாழ்வெளியே முதலாக ஏழ்வெளிக்கப் பாலும்
    விரவியமா மறைகளெலாம் தனித்தனிசென் றளந்தும்
    மெய்யளவு காணாதே மெலிந்திளைத்துப் போற்ற
    உரவில்அவை தேடியஅவ் வெளிகளுக்குள் வெளியாய்
    ஓங்கியஅவ் வெளிகளைத்தன் னுள்அடக்கும் வெளியாய்க்
    கரையறநின் றோங்குகின்ற சுத்தசிவ வெளியே
    கனிந்தநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே.
  • 69. வெய்யலிலே நடந்திளைப்பு மேவியஅக் கணத்தே
    மிகுநிழலும் தண்ணமுதும் தந்தஅருள் விளைவே
    மையல்சிறி துற்றிடத்தே மடந்தையர்கள் தாமே
    வலிந்துவரச் செய்வித்த மாண்புடைய நட்பே
    கையறவால் கலங்கியபோ தக்கணத்தே போந்து
    கையறவு தவிர்த்தருளிக் காத்தளித்த துரையே
    ஐயமுறேல் என்றெனையாண் டமுதளித்த பதியே
    அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
  • 70. கொலைபுரிவார் தவிரமற்றை எல்லாரும் நினது
    குலத்தாரே நீஎனது குலத்துமுதல் மகனே
    மலைவறவே சுத்தசிவ சமரசசன் மார்க்கம்
    வளரவளர்ந் திருக்கஎன வாழ்த்தியஎன் குருவே
    நிலைவிழைவார் தமைக்காக்கும் நித்தியனே எல்லா
    நிலையும்விளங் குறஅருளில் நிறுத்தியசிற் குணனே
    புலையறியாப் பெருந்தவர்கள் போற்றமணிப் பொதுவில்
    புனிதநடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.
  • 71. உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்
    உறவினத்தார் அல்லர்அவர் புறஇனத்தார் அவர்க்குப்
    பயிர்ப்புறும்ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக
    பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே
    நயப்புறுசன் மார்க்கம்அவர் அடையளவும் இதுதான்
    நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே
    மயர்ப்பறுமெய்த்284 தவர்போற்றப் பொதுவில்நடம் புரியும்
    மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.
  • 72. வன்புடையார் கொலைகண்டு புலைஉண்பார் சிறிதும்
    மரபினர்அன் றாதலினால் வகுத்தஅவர் அளவில்
    அன்புடைய என்மகனே பசிதவிர்த்தல் புரிக
    அன்றிஅருட் செயல்ஒன்றும் செயத்துணியேல் என்றே
    இன்புறஎன் தனக்கிசைத்த என்குருவே எனைத்தான்
    ஈன்றதனித் தந்தையே தாயேஎன் இறையே
    துன்பறுமெய்த் தவர்சூழ்ந்து போற்றதிருப் பொதுவில்
    தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
  • 73. கொடியவரே கொலைபுரிந்து புலைநுகர்வார் எனினும்
    குறித்திடும்ஓர் ஆபத்தில் வருந்துகின்ற போது
    படியில்அதைப் பார்த்துகவேல் அவர்வருத்தம் துன்பம்
    பயந்தீர்ந்து விடுகஎனப் பரிந்துரைத்த குருவே
    நெடியவரே நான்முகரே நித்தியரே பிறரே
    நின்மலரே என்கின்றோர் எல்லாரும் காண
    அடியும்உயர் முடியும்எனக் களித்தபெரும் பொருளே
    அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
  • 74. தயைஉடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம்
    சார்ந்தவரே ஈங்கவர்கள் தம்மோடுங் கூடி
    நயமுறுநல் அருள்நெறியில் களித்துவிளை யாடி
    நண்ணுகஎன் றெனக்கிசைத்த நண்புறுசற் குருவே
    உயலுறும்என் உயிர்க்கினிய உறவேஎன் அறிவில்
    ஓங்கியபே ரன்பேஎன் அன்பிலுறும் ஒளியே
    மயலறுமெய்த் தவர்சூழ்ந்து போற்றும்மணி மன்றில்
    மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.
  • 75. அருளுடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம்
    அடைந்தவரே ஆதலினால் அவருடனே கூடித்
    தெருளுடைய அருள்நெறியில் களித்துவிளை யாடிச்
    செழித்திடுக வாழ்கஎனச் செப்பியசற் குருவே
    பொருளுடைய பெருங்கருணைப் பூரணமெய்ச் சிவமே
    போதாந்த முதல்ஆறும் நிறைந்தொளிரும் ஒளியே
    மருளுடையார் தமக்குமருள் நீக்கமணிப் பொதுவில்
    வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே.
  • 76. வெம்மாலைச் சிறுவரொடும் விளையாடித் திரியும்
    மிகச்சிறிய பருவத்தே வியந்துநினை நமது
    பெம்மான்என் றடிகுறித்து பாடும்வகை புரிந்த
    பெருமானே நான்செய்த பெருந்தவமெய்ப் பயனே
    செம்மாந்த சிறியேனைச் சிறுநெறியில் சிறிதும்
    செலுத்தாமல் பெருநெறியில் செலுத்தியநற் றுணையே
    அம்மானே என்ஆவிக் கானபெரும் பொருளே
    அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
  • 77. ஆணவமாம் இருட்டறையில் கிடந்தசிறி யேனை
    அணிமாயை விளக்கறையில் அமர்த்திஅறி வளித்து
    நீணவமாம் தத்துவப்பொன் மாடமிசை ஏற்றி
    நிறைந்தஅருள் அமுதளித்து நித்தமுற வளர்த்து
    மாணுறஎல் லாநலமும் கொடுத்துலகம் அறிய
    மணிமுடியும் சூட்டியஎன் வாழ்முதலாம் பதியே
    ஏணுறுசிற் சபைஇடத்தும் பொற்சபையின் இடத்தும்
    இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
  • 78. பான்மறுத்து விளையாடும் சிறுபருவத் திடையே
    பகரும்உல கிச்சைஒன்றும் பதியாதென் உளத்தே
    மான்மறுத்து விளங்குதிரு ஐந்தெழுத்தே பதிய
    வைத்தபெரு வாழ்வேஎன் வாழ்வில்உறும் சுகமே
    மீன்மறுத்துச் சுடர்மயமாய் விளங்கியதோர் விண்ணே
    விண்அனந்தம் உள்ளடங்க விரிந்தபெரு வெளியே
    ஊன்மறுத்த பெருந்தவருக் கொளிவடிவம் கொடுத்தே
    ஓங்குநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
  • 79. மெய்ச்சுகமும் உயிர்ச்சுகமும் மிகுங்கரணச் சுகமும்
    விளங்குபதச் சுகமும்அதன் மேல்வீட்டுச் சுகமும்
    எச்சுகமும் தன்னிடத்தே எழுந்தசுகம் ஆக
    எங்கணும்ஓர் நீக்கமற எழுந்தபெருஞ் சுகமே
    அச்சுகமும் அடையறிவும் அடைந்தவரும் காட்டா
    ததுதானாய் அதுஅதுவாய் அப்பாலாம் பொருளே
    பொய்ச்சுகத்தை விரும்பாத புனிதர்மகிழ்ந் தேத்தும்
    பொதுநடத்தென் அரசேஎன் புகலும்அணிந் தருளே.
  • 80. அண்டவகை எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
    அமைந்தஉயிர் எவ்வளவோ அவ்வளவும் அவைகள்
    கண்டபொருள் எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
    கலந்தகலப் பெவ்வளவோ அவ்வளவும் நிறைந்தே
    விண்தகும்ஓர் நாதவெளி சுத்தவெளி மோன
    வெளிஞான வெளிமுதலாம் வெளிகளெலாம் நிரம்பிக்
    கொண்டதுவாய் விளங்குகின்ற சுத்தசிவ மயமே
    குலவுநடத் தரசேஎன் குற்றமும்கொண் டருளே.
  • 81. சத்தியநான் முகர்அனந்தர் நாரணர்மற் றுளவாம்
    தலைவர்அவர் அவருலகில் சார்ந்தவர்கள் பிறர்கள்
    இத்திசைஅத் திசையாக இசைக்கும்அண்டப் பகுதி
    எத்தனையோ கோடிகளில் இருக்கும்உயிர்த் திரள்கள்
    அத்தனைபேர் உண்டாலும் அணுவளவும் குறையா
    தருள்வெளியில் ஒளிவடிவாய் ஆனந்த மயமாய்ச்
    சுத்தசிவ அனுபவமாய் விளங்கியதெள் ளமுதே
    துயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
  • 82. பொறிகரண முதற்பலவாம் தத்துவமும் அவற்றைப்
    புரிந்தியக்கி நடத்துகின்ற பூரணரும் அவர்க்குச்
    செறியும்உப காரிகளாம் சத்திகளும் அவரைச்
    செலுத்துகின்ற சத்தர்களும் தன்ஒளியால் விளங்க
    அறிவறிவாய் அவ்வறிவுக் கறிவாய்எவ் விடத்தும்
    ஆனதுவாய்த் தானதுவாய் அதுஅதுவாய் நிறைந்தே
    நெறிவழங்கப் பொதுவில்அருள் திருநடஞ்செய் அரசே
    நின்அடியேன் சொன்மாலை நிலைக்கஅணிந் தருளே.
  • 83. உண்ணுகின்ற ஊண்வெறுத்து வற்றியும்புற் றெழுந்தும்
    ஒருகோடிப் பெருந்தலைவர் ஆங்காங்கே வருந்திப்
    பண்ணுகின்ற பெருந்தவத்தும் கிடைப்பரிதாய்ச் சிறிய
    பயல்களினும் சிறியேற்குக் கிடைத்தபெரும் பதியே
    நண்ணுகின்ற பெருங்கருணை அமுதளித்தென் உளத்தே
    நானாகித் தானாகி அமர்ந்தருளி நான்தான்
    எண்ணுகின்ற படிஎல்லாம் அருள்கின்ற சிவமே
    இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
  • 84. கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்
    கூட்டமும்அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
    கள்ளமுறும் அக்கலைகள் காட்டியபல் கதியும்
    காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
    பிள்ளைவிளை யாட்டெனநன் கறிவித்திங் கெனையே
    பிள்ளைஎனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியே
    தள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில்
    தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
  • 85. நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
    நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே
    மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ
    விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே
    கால்வருணங் கலையாதே வீணில்அலை யாதே
    காண்பனஎல் லாம்எனக்குக் காட்டியமெய்ப் பொருளே
    மால்வருணங் கடந்தவரை மேல்வருணத் தேற்ற
    வயங்குநடத் தரசேஎன் மாலைஅணிந் தருளே.
  • 86. எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்குசிவம் ஒன்றே
    என்னாணை என்மகனே இரண்டில்லை ஆங்கே
    செவ்விடத்தே அருளொடுசேர்த் திரண்டெனக்கண் டறிநீ
    திகைப்படையேல் என்றெனக்குச் செப்பியசற் குருவே
    அவ்விடத்தே உவ்விடத்தே அமர்ந்ததுபோல் காட்டி
    அங்குமிங்கும் அப்புறமும் எங்குநிறை பொருளே
    ஒவ்விடச்சிற் சபைஇடத்தும் பொற்சபையின் இடத்தும்
    ஓங்குநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
  • 87. இயல்வேதா கமங்கள்புரா ணங்கள்இதி காசம்
    இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பார்
    மயல்ஒருநூல் மாத்திரந்தான் சாலம்என அறிந்தார்
    மகனேநீ நூல்அனைத்தும் சாலம்என அறிக
    செயல்அனைத்தும் அருள்ஒளியால் காண்கஎன எனக்கே
    திருவுளம்பற் றியஞான தேசிகமா மணியே
    அயல்அறியா அறிவுடையார் எல்லாரும் போற்ற
    ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
  • 88. தோன்றியவே தாகமத்தைச் சாலம்என உரைத்தேம்
    சொற்பொருளும் இலக்கியமும் பொய்எனக்கண் டறியேல்
    ஊன்றியவே தாகமத்தின் உண்மைநினக் காகும்
    உலகறிவே தாகமத்தைப் பொய்எனக்கண் டுணர்வாய்
    ஆன்றதிரு வருட்செங்கோல் நினக்களித்தோம் நீயே
    ஆள்கஅருள் ஒளியால்என் றளித்ததனிச் சிவமே
    ஏன்றதிரு வமுதெனக்கும் ஈந்தபெரும் பொருளே
    இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
  • 89. நான்முகர்நல் உருத்திரர்கள் நாரணர்இந் திரர்கள்
    நவில்அருகர் புத்தர்முதல் மதத்தலைவர் எல்லாம்
    வான்முகத்தில் தோன்றிஅருள் ஒளிசிறிதே அடைந்து
    வானகத்தும் வையகத்தும் மனம்போன படியே
    தேன்முகந்துண் டவர்எனவே விளையாடா நின்ற
    சிறுபிள்ளைக் கூட்டம்என அருட்பெருஞ்சோ தியினால்
    தான்மிகக்கண் டறிகஎனச் சாற்றியசற் குருவே
    சபையில்நடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
  • 90. தவறாத வேதாந்த சித்தாந்த முதலாச்
    சாற்றுகின்ற அந்தமெலாம் தனித்துரைக்கும் பொருளை
    இவறாத சுத்தசிவ சன்மார்க்க நிலையில்
    இருந்தருளாம் பெருஞ்சோதி கொண்டறிதல் கூடும்
    எவராலும் பிறிதொன்றால் கண்டறிதல் கூடா
    தென்ஆணை என்மகனே அருட்பெருஞ்சோ தியைத்தான்
    தவறாது பெற்றனைநீ வாழ்கஎன்ற பதியே
    சபையில்நடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
  • 91. ஐயமுறேல் என்மகனே இப்பிறப்பிற் றானே
    அடைவதெலாம் அடைந்தனைநீ அஞ்சலைஎன் றருளி
    வையமிசைத் தனிஇருத்தி மணிமுடியும் சூட்டி
    வாழ்கஎன வாழ்த்தியஎன் வாழ்க்கைமுதற் பொருளே
    துய்யஅருட் பெருஞ்சோதி சுத்தசிவ வெளியே
    சுகமயமே எல்லாஞ்செய் வல்லதனிப் பதியே
    உய்யுநெறி காட்டிமணி மன்றிடத்தே நடிக்கும்
    ஒருமைநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
  • 92. காலையிலே என்றனக்கே கிடைத்தபெரும் பொருளே
    களிப்பேஎன் கருத்தகத்தே கனிந்தநறுங் கனியே
    மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்
    மேவுகின்ற பெரும்பயனாம் விளைவைஎலாம் தருமச்
    சாலையிலே ஒருபகலில் தந்ததனிப் பதியே
    சமரசசன் மார்க்கசங்கத் தலைஅமர்ந்த நிதியே
    மாலையிலே சிறந்தமொழி மாலைஅணிந் தாடும்
    மாநடத்தென் அரசேஎன் மாலையும்ஏற் றருளே.
  • 93. சிற்பதமும் தற்பதமும் பொற்பதத்தே காட்டும்
    சிவபதமே ஆனந்தத் தேம்பாகின் பதமே
    சொற்பதங்கள் கடந்ததன்றி முப்பதமும் கடந்தே
    துரியபத முங்கடந்த பெரியதனிப் பொருளே
    நற்பதம்என் முடிசூட்டிக் கற்பதெலாங் கணத்தே
    நான்அறிந்து தானாக நல்கியஎன் குருவே
    பற்பதத்துத் தலைவரெலாம் போற்றமணி மன்றில்
    பயிலும்நடத் தரசேஎன் பாடல்அணிந் தருளே.
  • 94. ஆதியிலே எனையாண்டென் அறிவகத்தே அமர்ந்த
    அப்பாஎன் அன்பேஎன் ஆருயிரே அமுதே
    வீதியிலே விளையாடித் திரிந்தபிள்ளைப் பருவம்
    மிகப்பெரிய பருவம்என வியந்தருளி அருளாம்
    சோதியிலே விழைவுறச்செய் தினியமொழி மாலை
    தொடுத்திடச்செய் தணிந்துகொண்ட துரையேசிற் பொதுவாம்
    நீதியிலே நிறைந்தநடத் தரசேஇன் றடியேன்
    நிகழ்த்தியசொன் மாலையும்நீ திகழ்த்திஅணிந் தருளே.
  • 95. கணக்குவழக் கதுகடந்த பெருவெளிக்கு நடுவே
    கதிர்பரப்பி விளங்குகின்ற கண்நிறைந்த சுடரே
    இணக்கமுறும் அன்பர்கள்தம் இதயவெளி முழுதும்
    இனிதுவிளங் குறநடுவே இலங்கும்ஒளி விளக்கே
    மணக்குநறு மணமேசின் மயமாய்என் உளத்தே
    வயங்குதனிப் பொருளேஎன் வாழ்வேஎன் மருந்தே
    பிணக்கறியாப் பெருந்தவர்கள் சூழமணி மன்றில்
    பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்அணிந் தருளே.
  • 96. அடிச்சிறியேன் அச்சமெலாம் ஒருகணத்தே நீக்கி
    அருளமுதம் மிகஅளித்தோர் அணியும்எனக் கணிந்து
    கடிக்கமலத் தயன்முதலோர் கண்டுமிக வியப்பக்
    கதிர்முடியும் சூட்டிஎனைக் களித்தாண்ட பதியே
    வடித்தமறை முடிவயங்கு மாமணிப்பொற் சுடரே
    மனம்வாக்குக் கடந்தபெரு வான்நடுவாம் ஒளியே
    படித்தலத்தார் வான்தலத்தார் பரவியிடப் பொதுவில்
    பரிந்தநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.
  • 97. எத்துணையும் சிறியேனை நான்முகன்மால் முதலோர்
    ஏறரிதாம் பெருநிலைமேல் ஏற்றிஉடன் இருந்தே
    மெய்த்துணையாம் திருவருட்பே ரமுதம்மிக அளித்து
    வேண்டியவா றடிநாயேன் விளையாடப் புரிந்து
    சுத்தசிவ சன்மார்க்க நெறிஒன்றே எங்கும்
    துலங்கஅருள் செய்தபெருஞ் சோதியனே பொதுவில்
    சித்துருவாய் நடம்புரியும் உத்தமசற் குருவே
    சிற்சபைஎன் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
  • 98. இருந்தஇடந் தெரியாதே இருந்தசிறி யேனை
    எவ்வுலகில் உள்ளவரும் ஏத்திடமேல் ஏற்றி
    அருந்தவரும் அயன்முதலாம் தலைவர்களும் உளத்தே
    அதிசயிக்கத் திருவமுதும் அளித்தபெரும் பதியே
    திருந்துமறை முடிப்பொருளே பொருள்முடிபில் உணர்ந்தோர்
    திகழமுடிந் துட்கொண்ட சிவபோகப் பொருளே
    பெருந்தவர்கள் போற்றமணி மன்றில்நடம் புரியும்
    பெருநடத்தென் அரசேஎன் பிதற்றும்அணிந் தருளே.
  • 99. குணமறியேன் செய்தபெருங் குற்றமெலாங் குணமாக்
    கொண்டருளி என்னுடைய குறிப்பெல்லாம் முடித்து
    மணமுறுபே ரருள்இன்ப அமுதமெனக் களித்து
    மணிமுடியும் சூட்டிஎனை வாழ்கஎன வாழ்த்தித்
    தணவிலிலா தென்னுளத்தே தான்கலந்து நானும்
    தானும்ஒரு வடிவாகித் தழைத்தோங்கப் புரிந்தே
    அணவுறுபேர் அருட்சோதி அரசுகொடுத் தருளி
    ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
  • 100. தலைகால்இங் கறியாதே திரிந்தசிறி யேனைத்
    தான்வலிந்தாட் கொண்டருளித் தடைமுழுதுந் தவிர்த்தே
    மலைவறுமெய் அறிவளித்தே அருளமுதம் அருத்தி
    வல்லபசத் திகளெல்லாம் மருவியிடப் புரிந்து
    நிலையுறவே தானும்அடி யேனும்ஒரு வடிவாய்
    நிறையநிறை வித்துயர்ந்த நிலையதன்மேல் அமர்த்தி
    அலர்தலைப்பேர் அருட்சோதி அரசுகொடுத் தருளி
    ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.

    • 281. எண் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
    • 282. தாய் முதலோரோடு சிறு பருவமதில் - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு, க.
    • 283. முடிமேல் - முதற்பதிப்பு. பொ. சு., ச. மு. க. மடிமேல் - பி. இரா., ஆ. பா.
    • 284. மயர்ப்பு - சோர்வு. முதற்பதிப்பு.

அருள்விளக்க மாலை // அருள்விளக்க மாலை

  1. [6-37, 4090]MSS--AruLviLakkee Arutsutaree.mp3 Download
  2. [6-37, 4091-4095]MSS--Kootaiyilee ILaippaaRRik.mp3 Download
  3. [6-37, 4091]MSS--Kootaiyilee ILaippaaRRik.mp3 Download
  4. [6-37, 4096-4098]SBR--Karainthuvitaa Thennutaiya.mp3 Download
  5. [6-37, 4096-4098]MSS--Karainthuvitaa Thennutaiya.mp3 Download
  6. [6-37, 4096]SBR--Karainthuvitaa Thennutaiya.mp3 Download
  7. [6-37, 4099]MSS--Nallaasol Yookaanthap.mp3 Download
  8. [6-37, 4100-4103]MSS--Naattiyathoor Suththaparaa.mp3 Download
  9. [6-37, 4100]MSS--Naattiyathoor Suththaparaa.mp3 Download
  10. [6-37, 4104-4108]MSS--Kaikkisaintha PoruLeeen.mp3 Download
  11. [6-37, 4104]MSS--Kaikkisaintha PoruLeeen.mp3 Download
  12. [6-37, 4109]MSS--UruveLiyee UruveLikkuL.mp3 Download
  13. [6-37, 4110-4112]SBR--NaanenRum ThaanenRum.mp3 Download
  14. [6-37, 4110-4112]MSS--NaanenRum ThaanenRum.mp3 Download
  15. [6-37, 4110]MSS--NaanenRum ThaanenRum.mp3 Download
  16. [6-37, 4113-4114]MSS--Atikkatien Akaththinilum.mp3 Download
  17. [6-37, 4113-4115]TAN--Atikkatien Akaththinilum.mp3 Download
  18. [6-37, 4113]TAN--Atikkatien Akaththinilum.mp3 Download
  19. [6-37, 4115]MSS--Paarththaalum Ninaiththaalum.mp3 Download
  20. [6-37, 4116-4118]MSS--PaRRuthalum VituthalumuL.mp3 Download
  21. [6-37, 4116]MSS--PaRRuthalum VituthalumuL.mp3 Download
  22. [6-37, 4119-4121]TAN--Pakuthipara Muthalnaankum.mp3 Download
  23. [6-37, 4119-4121]MSS--Pakuthipara Muthalnaankum.mp3 Download
  24. [6-37, 4119]TAN--Pakuthipara Muthalnaankum.mp3 Download
  25. [6-37, 4122-4124]MSS--SaaRRukinRa Kalaiainthil.mp3 Download
  26. [6-37, 4122]MSS--SaaRRukinRa Kalaiainthil.mp3 Download
  27. [6-37, 4125-4127]MSS--ViLangkupara SaththikaLin.mp3 Download
  28. [6-37, 4125]MSS--ViLangkupara SaththikaLin.mp3 Download
  29. [6-37, 4128-4131]TAN--Kallaarkkum KaRRavarkkum.mp3 Download
  30. [6-37, 4128-4131]MSS--Kallaarkkum KaRRavarkkum.mp3 Download
  31. [6-37, 4128]TAN--Kallaarkkum KaRRavarkkum.mp3 Download
  32. [6-37, 4132-4134]MSS--TheRRiyilee Naanpasiththup.mp3 Download
  33. [6-37, 4132]MSS--TheRRiyilee Naanpasiththup.mp3 Download
  34. [6-37, 4135-4136]TAN--ThanissiRiyeen SiRithingkee.mp3 Download
  35. [6-37, 4135-4136]MSS--ThanissiRiyeen SiRithingkee.mp3 Download
  36. [6-37, 4135]TAN--ThanissiRiyeen SiRithingkee.mp3 Download
  37. [6-37, 4137-4140]MSS--IruLiravil Orumuulaith.mp3 Download
  38. [6-37, 4137]MSS--IruLiravil Orumuulaith.mp3 Download
  39. [6-37, 4141-4142]MSS--MuurththikaLum Netungkaalam.mp3 Download
  40. [6-37, 4141]MSS--MuurththikaLum Netungkaalam.mp3 Download
  41. [6-37, 4143-4146]MSS--Kaiyaatha Thiingkaniyee.mp3 Download
  42. [6-37, 4143]MSS--Kaiyaatha Thiingkaniyee.mp3 Download
  43. [6-37, 4147-4149]TAN--NaanaLakkun ThooRumathaR.mp3 Download
  44. [6-37, 4147-4149]MSS--NaanaLakkun ThooRumathaR.mp3 Download
  45. [6-37, 4147]TAN--NaanaLakkun ThooRumathaR.mp3 Download
  46. [6-37, 4150-4151]MSS--MannukinRa Ponvativum.mp3 Download
  47. [6-37, 4150]MSS--MannukinRa Ponvativum.mp3 Download
  48. [6-37, 4152-4154]TAN--Vizukkulaththaar Aruvarukkum.mp3 Download
  49. [6-37, 4152-4154]MSS--Vizukkulaththaar Aruvarukkum.mp3 Download
  50. [6-37, 4152]TAN--Vizukkulaththaar Aruvarukkum.mp3 Download
  51. [6-37, 4155-4157]MSS--Enaasai Ellaamthan.mp3 Download
  52. [6-37, 4155]MSS--Enaasai Ellaamthan.mp3 Download
  53. [6-37, 4158-4160]MSS--Veyyalilee NatanthiLaippu.mp3 Download
  54. [6-37, 4158]MSS--Veyyalilee NatanthiLaippu.mp3 Download
  55. [6-37, 4161-4164]TAN--Vanputaiyaar KolaikaNtu.mp3 Download
  56. [6-37, 4161-4164]MSS--Vanputaiyaar KolaikaNtu.mp3 Download
  57. [6-37, 4161]TAN--Vanputaiyaar KolaikaNtu.mp3 Download
  58. [6-37, 4165-4167]MSS--Vemmaalais SiRuvarotum.mp3 Download
  59. [6-37, 4165]MSS--Vemmaalais SiRuvarotum.mp3 Download
  60. [6-37, 4168-4169]TAN--Meyssukamum Uyirssukamum.mp3 Download
  61. [6-37, 4168-4169]MSS--Meyssukamum Uyirssukamum.mp3 Download
  62. [6-37, 4168]TAN--Meyssukamum Uyirssukamum.mp3 Download
  63. [6-37, 4170-4171]SBR--Saththiyanaan Mukarananthar.mp3 Download
  64. [6-37, 4170]SBR--Saththiyanaan Mukarananthar.mp3 Download
  65. [6-37, 4172-4175]MSS--UNNukinRa UuNveRuththu.mp3 Download
  66. [6-37, 4172]MSS--UNNukinRa UuNveRuththu.mp3 Download
  67. [6-37, 4176-4178]MSS--Iyalveethaa KamangkaLpuraa.mp3 Download
  68. [6-37, 4176]MSS--Iyalveethaa KamangkaLpuraa.mp3 Download
  69. [6-37, 4179-4182]TAN--ThavaRaatha Veethaantha.mp3 Download
  70. [6-37, 4179-4182]MSS--ThavaRaatha Veethaantha.mp3 Download
  71. [6-37, 4179]TAN--ThavaRaatha Veethaantha.mp3 Download
  72. [6-37, 4183-4185]MSS--Aathiyilee EnaiyaaNten.mp3 Download
  73. [6-37, 4183]MSS--Aathiyilee EnaiyaaNten.mp3 Download
  74. [6-37, 4186-4189]MSS--EththuNaiyum SiRiyeenai.mp3 Download
  75. [6-37, 4186]MSS--EththuNaiyum SiRiyeenai.mp3 Download