திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
பாமாலை ஏற்றல்
pāmālai ēṟṟal
உற்ற துரைத்தல்
uṟṟa turaittal
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

089. திருவருட் கொடை
tiruvaruṭ koṭai

    கொச்சகக் கலிப்பா
    திருச்சிற்றம்பலம்
  • 1. சிருட்டிமுதல் ஐந்தொழில்நான் செய்யஎனக் கருள்புரிந்தாய்
    பொருட்டிகழ்நின் பெருங்கருணைப் புனிதஅமு துவந்தளித்தாய்
    தெருட்டிகழ்நின் அடியவர்தம் திருச்சபையின் நடுஇருத்தித்
    தெருட்டிஎனை வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
  • 2. படைத்தல்முதல் ஐந்தொழில்செய் பணிஎனக்கே பணித்திட்டாய்
    உடைத்தனிப்பே ரருட்சோதி ஓங்கியதெள் ளமுதளித்தாய்
    கொடைத்தனிப்போ கங்கொடுத்தாய் நின்அடியர் குழுநடுவே
    திடத்தமர்த்தி வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
  • 3. அயன்முதலோர் ஐவர்செயும் தொழில்எனக்கே அளித்திட்டாய்
    உயர்வுறுபே ரருட்சோதித் திருவமுதம் உவந்தளித்தாய்
    மயர்வறுநின் அடியவர்தம் சபைநடுவே வைத்தருளிச்
    செயமுறவே வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
  • 4. ஐவர்செயும் தொழில்எனக்கே அளித்தாய்நின் அருளமுதென்
    கைவரச்செய் துண்ணுவித்தாய் கங்கணம்என் கரத்தணிந்தாய்
    சைவர்எனும் நின்னடியார் சபைநடுவே வைத்தருளித்
    தெய்வமென்று வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
  • 5. முத்தொழிலோ ஐந்தொழிலும் முன்னிமகிழ்ந் தெனக்களித்தாய்
    புத்தமுதம் உண்ணுவித்தோர் பொன்னணிஎன் கரத்தணிந்தாய்
    சித்தர்எனும் நின்னடியார் திருச்சபையில் நடுஇருத்திச்
    சித்துருவின் வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
  • 6. ஐந்தொழில்நான் செயப்பணித்தாய் அருளமுதம் உணவளித்தாய்
    வெந்தொழில்தீர்ந் தோங்கியநின் மெய்யடியார் சபைநடுவே
    எந்தைஉனைப் பாடிமகிழ்ந் தின்புறவே வைத்தருளிச்
    செந்தமிழின் வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
  • 7. நான்முகன்நா ரணன்முதலாம் ஐவர்தொழில் நயந்தளித்தாய்
    மேன்மைபெறும் அருட்சோதித் திருவமுதும் வியந்தளித்தாய்
    பான்மையுறு நின்னடியார் சபைநடுவே பதித்தருளித்
    தேன்மையொடு வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
  • 8. நாயெனவே திரிந்தேனை வலிந்தழைத்து நான்முகன்மால்
    தூயபெருந் தேவர்செயும் தொழில்புரியென் றமுதளித்தாய்
    நாயகநின் னடியர்சபை நடுவிருக்க வைத்தருளிச்
    சேயெனவே வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
  • 9. புல்வழங்கு புழுஅதனில் சிறியேனைப் புணர்ந்தருளிச்
    சொல்வழங்கு தொழில்ஐந்தும் துணிந்துகொடுத் தமுதளித்தாய்
    கல்விபெறு நின்னடியர் கழகநடு வைத்தென்னைச்
    செல்வமொடு வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
  • 10. தெருமனைதோ றலைந்தேனை அலையாமே சேர்த்தருளி
    அருளொளியால் ஐந்தொழிலும் செயப்பணித்தே அமுதளித்து
    மருவியநின் மெய்யடியார் சபைநடுவே வைத்தழியாத்
    திருவளித்து வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.

திருவருட் கொடை // திருவருட் கொடை

No audios found!