திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
திருவருட் கொடை
tiruvaruṭ koṭai
அனுபவ சித்தி
aṉupava sitti
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

090. உற்ற துரைத்தல்
uṟṟa turaittal

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. துனிநாள் அனைத்தும் தொலைத்துவிட்டேன் தூக்கம் தவிர்த்தேன் சுகம்பலிக்கும்
    கனிநாள் இதுவே என்றறிந்தேன் கருத்து மலர்ந்தேன் களிப்புற்றேன்
    தனிநா யகனே கனகசபைத் தலைவா ஞான சபாபதியே
    இனிநான் இறையும் கலக்கமுறேன் இளைக்க மாட்டேன் எனக்கருளே.
  • 2. அருளும் பொருளும் யான்பெறவே அடுத்த தருணம் இதுஎன்றே
    தெருளும் படிநின் அருள்உணர்த்தத் தெரிந்தேன் துன்பத் திகைப்பொழிந்தேன்
    மருளும் மனந்தான் என்னுடைய வசத்தே நின்று வயங்கியதால்
    இருளும் தொலைந்த தினிச்சிறிதும் இளைக்க மாட்டேன் எனக்கருளே.
  • 3. அருளே உணர்த்த அறிந்துகொண்டேன் அடுத்த தருணம் இதுஎன்றே
    இருளே தொலைந்த திடர்அனைத்தும் எனைவிட் டகன்றே ஒழிந்தனவால்
    தெருளே சிற்றம் பலத்தாடும் சிவமே எல்லாம் செய்யவல்ல
    பொருளே இனிநான் வீண்போது போக்க மாட்டேன் கண்டாயே.
  • 4. கண்டே களிக்கும் பின்பாட்டுக் காலை இதுஎன் றருள்உணர்த்தக்
    கொண்டே அறிந்து கொண்டேன்நல் குறிகள் பலவுங் கூடுகின்ற
    தொண்டே புரிவார்க் கருளும்அருட் சோதிக் கருணைப் பெருமனே
    உண்டேன் அமுதம் உண்கின்றேன் உண்பேன் துன்பை ஒழித்தேனே.
  • 5. ஒழித்தேன் அவலம் அச்சம்எலாம் ஓடத் துறந்தேன் உறுகண்எலாம்
    கழித்தேன் மரணக் களைப்பற்றேன் களித்தேன் பிறவிக் கடல்கடந்தேன்
    பழித்தேன் சிற்றம் பலம்என்னாப் பாட்டை மறந்தேன் பரம்பரத்தே
    விழித்தேன் கருத்தின் படிஎல்லாம் விளையா டுதற்கு விரைந்தேனே.
  • 6. விரைந்து விரைந்து படிகடந்தேன் மேற்பால் அமுதம் வியந்துண்டேன்
    கரைந்து கரைந்து மனம்உருகக் கண்­ர் பெருகக் கருத்தலர்ந்தே
    வரைந்து ஞான மணம்பொங்க மணிமன் றரசைக் கண்டுகொண்டேன்
    திரைந்து நெகிழ்ந்த தோலுடம்பும் செழும்பொன் உடம்பாய்த் திகழ்ந்தேனே.
  • 7. தேனே கன்னல் செழும்பாகே என்ன மிகவும் தித்தித்தென்
    ஊனே புகுந்தென் உளத்தில்அமர்ந் துயிரில் கலந்த ஒருபொருளை
    வானே நிறைந்த பெருங்கருணை வாழ்வை மணிமன் றுடையானை
    நானே பாடிக் களிக்கின்றேன் நாட்டார் வாழ்த்த நானிலத்தே.
  • 8. நிலத்தே அடைந்த இடர்அனைத்தும் நிமிடத் தொழித்தே நிலைபெற்றேன்
    வலத்தே அழியா வரம்பெற்றேன் மணிமன் றேத்தும் வாழ்வடைந்தேன்
    குலத்தே சமயக் குழியிடத்தே விழுந்திவ் வுலகம் குமையாதே
    நலத்தே சுத்த சன்மார்க்கம் நாட்டா நின்றேன் நாட்டகத்தே.
  • 9. அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்
    சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்
    இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த
    உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.
  • 10. பெற்றேன் என்றும் இறவாமை பேதம் தவிர்ந்தே இறைவன்எனை
    உற்றே கலந்தான் நானவனை உற்றே கலந்தேன் ஒன்றானேம்
    எற்றே அடியேன் செய்ததவம் யாரே புரிந்தார் இன்னமுதம்
    துற்றே உலகீர் நீவிர்எலாம் வாழ்க வாழ்க துனிஅற்றே.

உற்ற துரைத்தல் // உற்ற துரைத்தல்

No audios found!