திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
திருப்பள்ளித்தாமம் தாங்கல்
tiruppaḷḷittāmam tāṅkal
சண்முகர் வருகை
saṇmukar varukai
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

055. சண்முகர் கொம்மி
saṇmukar kommi

    தாழிசை
    திருச்சிற்றம்பலம்
  • 1. குறவர் குடிசை நுழைந்தாண்டி - அந்தக்
    கோமாட்டி எச்சில் விழைந்தாண்டி
    துறவர் வணங்கும் புகழாண்டி - அவன்
    தோற்றத்தைப் பாடி அடியுங்கடி.
  • 2. மாமயில் ஏறி வருவாண்டி - அன்பர்
    வாழ்த்த வரங்கள் தருவாண்டி
    தீமையி லாத புகழாண்டி - அவன்
    சீர்த்தியைப் பாடி அடியுங்கடி.
  • 3. பன்னிரு தோள்கள் உடையாண்டி - கொடும்
    பாவிகள் தம்மை அடையாண்டி
    என்னிரு கண்கள் அனையாண்டி - அவன்
    ஏற்றத்தைப் பாடி அடியுங்கடி.
  • 4. வேங்கை மரமாகி நின்றாண்டி - வந்த
    வேடர் தமைஎலாம் வென்றாண்டி
    தீங்குசெய் சூரனைக் கொன்றாண்டி - அந்தத்
    தீரனைப் பாடி அடியுங்கடி.
  • 5. சீர்திகழ் தோகை மயில்மேலே - இளஞ்
    செஞ்சுடர் தோன்றுந் திறம்போலே
    கூர்வடி வேல்கொண்டு நம்பெருமான் - வருங்
    கோலத்தைப் பாருங்கள் கோதையர்காள்.
  • 6. ஆறு முகங்களில் புன்சிரிப்பும் - இரண்
    டாறு புயந்திகழ் அற்புதமும்
    வீறு பரஞ்சுடர் வண்ணமும்ஓர் - திரு
    மேனியும் பாருங்கள் வெள்வளைகாள்.
  • 7. ஆனந்த மான அமுதனடி - பர
    மானந்த நாட்டுக் கரசனடி
    தானந்த மில்லாச் சதுரனடி - சிவ
    சண்முகன் நங்குரு சாமியடி.
  • 8. வேதமுடி சொல்லும் நாதனடி - சதுர்
    வேதமு டிதிகழ் பாதனடி
    நாத வடிவுகொள் நீதனடி - பர
    நாதங் கடந்த நலத்தனடி.
  • 9. தத்துவத் துள்ளே அடங்காண்டி - பர
    தத்துவம் அன்றித் துடங்காண்டி
    சத்துவ ஞான வடிவாண்டி - சிவ
    சண்முக நாதனைப் பாடுங்கடி.
  • 10. சச்சிதா னந்த உருவாண்டி - பர
    தற்பர போகந் தருவாண்டி
    உச்சிதாழ் அன்பர்க் குறவாண்டி - அந்த
    உத்தம தேவனைப் பாடுங்கடி.
  • 11. அற்புத மான அழகனடி - துதி
    அன்பர்க் கருள்செய் குழகனடி
    சிற்பர யோகத் திறத்தனடி-அந்தச்
    சேவகன் சீர்த்தியைப் பாடுங்கடி.
  • 12. சைவந் தழைக்கத் தழைத்தாண்டி -ஞான
    சம்பந்தப் பேர்கொண் டழைத்தாண்டி
    பொய்வந்த உள்ளத்தில் போகாண்டி - அந்தப்
    புண்ணியன் பொன்னடி போற்றுங்கடி.
  • 13. வாசி நடத்தித் தருவாண்டி - ஒரு
    வாசியில் இங்கே வருவாண்டி
    ஆசில் கருணை உருவாண்டி - அவன்
    அற்புதத் தாள்மலர் ஏத்துங்கடி.
  • 14. இராப்பகல் இல்லா இடத்தாண்டி - அன்பர்
    இன்ப உளங்கொள் நடத்தாண்டி
    அராப்பளி ஈந்த திடத்தாண்டி - அந்த
    அண்ணலைப் பாடி அடியுங்கடி.
  • 15. ஒன்றிரண் டான உளவாண்டி - அந்த
    ஒன்றிரண் டாகா அளவாண்டி
    மின்திரண் டன்ன வடிவாண்டி - அந்த
    மேலவன் சீர்த்தியைப் பாடுங்கடி.

சண்முகர் கொம்மி // சண்முகர் கொம்மி