திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
நாள் அவத்து அலைசல்
nāḷ avattu alaisal
ஆனாவாழ்வின் அலைசல்
āṉāvāḻviṉ alaisal
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

043. அவல மதிக்கு அலைசல்
avala matikku alaisal

    திருவொற்றியூர்
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. மண்ணை மனத்துப் பாவியன்யான் மடவார் உள்ளே வதிந்தளிந்த
    புண்ணை மதித்துப் புகுகின்றேன் போதம் இழந்தேன் புண்ணியனே
    எண்ண இனிய நின்புகழை ஏத்தேன் ஒதிபோல் இருக்கின்றேன்
    தண்நல் அமுதே நீஎன்னைத் தடுத்திங் காளத் தக்கதுவே.
  • 2. தக்க தறியேன் வெறியேன்நான் சண்ட மடவார் தம்முலைதோய்
    துக்கம் அதனைச் சுகம் என்றே துணிந்தேன் என்னைத் தொழும்பன்எனில்
    மிக்க அடியார் என்சொல்லார் விண்ணோர் மண்ணோர் என்புகலார்
    செக்கர் நிறத்துப் பொன்மேனித் திருநீற் றொளிசேர் செங்கரும்பே.
  • 3. கரும்பே ஒற்றி யூர்அமர்ந்த கனியே உன்தன் கழல்அடியை
    விரும்பேன் அடியார் அடித்தொண்டில் மேவேன் பொல்லா விடமனைய
    பெரும்பேய் மாதர் பிணக்குழியில் பேதை மனம்போந் திடச்சூறைத்
    துரும்பே என்னச் சுழல்கின்றேன் துணையொன் றறியேன் துனியேனே.
  • 4. துனியே பிறத்தற் கேதுஎனும் துட்ட மடவார் உள்ததும்பும்
    பனிஏய் மலம்சூழ் முடைநாற்றப் பாழும் குழிக்கே வீழ்ந்திளைத்தேன்
    இனிஏ துறுமோ என்செய்கேன் எளியேன் தனைநீ ஏன்றுகொளாய்
    கனியே கருணைக் கடலேஎன் கண்ணே ஒற்றிக் காவலனே.
  • 5. வலமே உடையார் நின்கருணை வாய்ந்து வாழ்ந்தார் வஞ்சகனேன்
    மலமே உடையேன் ஆதலினால் மாதர் எனும்பேய் வாக்கும் உவர்ச்
    சலமே ஒழுக்குப் பொத்தரிடைச் சாய்ந்து தளர்ந்தேன் சார்பறியேன்
    நலமே ஒற்றி நாடுடையாய் நாயேன் உய்யும் நாள்என்றோ.
  • 6. நாளை வருவ தறியேன்நான் நஞ்சம் அனைய நங்கையர்தம்
    ஆளை அழுத்தும் நீர்க்குழியில் அழுந்தி அழுந்தி எழுந்தலைந்தேன்
    கோளை அகற்றி நின்அடிக்கே கூடும் வண்ணம் குறிப்பாயோ
    வேளை எரித்த மெய்ஞ்ஞான விளக்கே முத்தி வித்தகமே.
  • 7. முத்தி முதலே முக்கணுடை மூரிக் கரும்பே நின்பதத்தில்
    பத்தி முதலே இல்லாதேன் பரம சுகத்தில் படிவேனோ
    எத்தி அழைக்கும் கருங்கண்ணார் இடைக்குள் பிளந்த வெடிப்பதனில்
    தத்தி விழுந்தேன் எழுவேனேல் தள்ளா நின்ற தென்மனமே.
  • 8. மனமே முன்னர் வழிகாட்டப் பின்னே சென்று மங்கையர்தம்
    தனமே என்னும் மலைஏறிப் பார்த்தேன் இருண்ட சலதிஒன்று
    முனமே தோன்ற மதிமயங்கி விழுந்தேன் எழுவான் முயலுகின்றேன்
    இனமே என்னை நீஅன்றி எடுப்பார் இல்லை என்அரசே.
  • 9. என்னைக் கொடுத்தேன் பெண்பேய்கட் கின்பம் எனவே எனக்கவர்நோய்
    தன்னைக் கொடுத்தார் நான்அந்தோ தளர்ந்து நின்றேன் அல்லதுசெம்
    பொன்னைக் கொடுத்தும் பெறஅரிய பொருளே உன்னைப் போற்றுகிலேன்
    இன்னல் கொடுத்த பவமுடையேன் எற்றுக் கிவண்நிற் கின்றேனே.
  • 10. எற்றுக் கடியர் நின்றதுநின் இணைத்தாள் மலரை ஏத்தஅன்றோ
    மற்றிக் கொடியேன் அஃதின்றி மடவார் இடைவாய் மணிப்பாம்பின்
    புற்றுக் குழன்றேன் என்னேஎன் புந்தி எவர்க்குப் புகல்வேனே
    கற்றுத் தெளிந்தோர் புகழ் ஒற்றிக் கண்ணார்ந் தோங்கும் கற்பகமே.
  • 11. ஓங்கும் பொருளே திருஒற்றி யூர்வாழ் அரசே உனைத்துதியேன்
    தீங்கும் புழுவும் சிலைநீரும் சீழும் வழும்பும் சேர்ந்தலைக்கத்
    தூங்கும் மடவார் புலைநாற்றத் தூம்பில் நுழையும் சூதகனேன்
    வாங்கும் பவம்தீர்த் தருள்வதுநின் கடன்காண் இந்த மண்ணிடத்தே.

அவல மதிக்கு அலைசல் // அவல மதிக்கு அலைசல்

No audios found!