திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
சிற்சபை விளக்கம்
siṟsapai viḷakkam
தற் சுதந்தரம் இன்மை
taṟ sutantaram iṉmai
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

015. திருவடி முறையீடு
tiruvaṭi muṟaiyīṭu

    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. சீரிடம் பெறும்ஓர் திருச்சிற்றம் பலத்தே
    திகழ்தனித் தந்தையே நின்பால்
    சேரிடம் அறிந்தே சேர்ந்தனன்257 கருணை
    செய்தருள் செய்திடத் தாழ்க்கில்
    யாரிடம் புகுவேன் யார்துணை என்பேன்
    யார்க்கெடுத் தென்குறை இசைப்பேன்
    போரிட முடியா தினித்துய ரொடுநான்
    பொறுக்கலேன் அருள்கஇப் போதே.
  • 2. போதுதான் விரைந்து போகின்ற தருள்நீ
    புரிந்திடத் தாழ்த்தியேல் ஐயோ
    யாதுதான் புரிவேன் யாரிடம் புகுவேன்
    யார்க்கெடுத் தென்குறை இசைப்பேன்
    தீதுதான் புரிந்தேன் எனினும்நீ அதனைத்
    திருவுளத் தடைத்திடு வாயேல்
    ஈதுதான் தந்தை மரபினுக் கழகோ
    என்னுயிர்த் தந்தைநீ அலையோ.
  • 3. தந்தைநீ அலையோ தனயன்நான் அலனோ
    தமியனேன் தளர்ந்துளங் கலங்கி
    எந்தையே குருவே இறைவனே முறையோ
    என்றுநின் றோலிடு கின்றேன்
    சிந்தையே அறியார் போன்றிருந் தனையேல்
    சிறியனேன் என்செய்கேன் ஐயோ
    சந்தையே புகுந்த நாயினில் கடையேன்
    தளர்ச்சியைத் தவிர்ப்பவர் யாரோ.
  • 4. யாரினும் கடையேன் யாரினும் சிறியேன்
    என்பிழை பொறுப்பவர் யாரே
    பாரினும் பெரிதாம் பொறுமையோய் நீயே
    பாவியேன் பிழைபொறுத் திலையேல்
    ஊரினும் புகுத ஒண்ணுமோ பாவி
    உடம்பைவைத் துலாவவும் படுமோ
    சேரினும் எனைத்தான் சேர்த்திடார் பொதுவாம்
    தெய்வத்துக் கடாதவன் என்றே.
  • 5. அடாதகா ரியங்கள் செய்தனன் எனினும்
    அப்பநீ அடியனேன் தன்னை
    விடாதவா றறிந்தே களித்திருக் கின்றேன்
    விடுதியோ விட்டிடு வாயேல்
    உடாதவெற் றரைநேர்ந் துயங்குவேன் ஐயோ
    உன்னருள் அடையநான் இங்கே
    படாதபா டெல்லாம் பட்டனன் அந்தப்
    பாடெலாம் நீஅறி யாயோ.
  • 6. அறிந்திலை யோஎன் பாடெலாம் என்றே
    அழைத்தனன் அப்பனே என்னை
    எறிந்திடா திந்தத் தருணமே வந்தாய்
    எடுத்தணைத் தஞ்சிடேல் மகனே
    பிறிந்திடேம் சிறிதும் பிறிந்திடேம் உலகில்
    பெருந்திறல் சித்திகள் எல்லாம்
    சிறந்திட உனக்கே தந்தனம் எனஎன்
    சென்னிதொட் டுரைத்தனை களித்தே.
  • 7. களித்தென துடம்பில் புகுந்தனை எனது
    கருத்திலே அமர்ந்தனை கனிந்தே
    தெளித்தஎன் அறிவில் விளங்கினை உயிரில்
    சிறப்பினால் கலந்தனை உள்ளம்
    தளிர்த்திடச் சாகா வரங்கொடுத் தென்றும்
    தடைபடாச் சித்திகள் எல்லாம்
    அளித்தனை எனக்கே நின்பெருங் கருணை
    அடியன்மேல் வைத்தவா றென்னே.
  • 8. என்நிகர் இல்லா இழிவினேன் தனைமேல்
    ஏற்றினை யாவரும் வியப்பப்
    பொன்இயல் வடிவும் புரைபடா உளமும்
    பூரண ஞானமும் பொருளும்
    உன்னிய எல்லாம் வல்லசித் தியும்பேர்
    உவகையும் உதவினை எனக்கே
    தன்னிகர் இல்லாத் தலைவனே நினது
    தயவைஎன் என்றுசாற் றுவனே.
  • 9. சாற்றுவேன் எனது தந்தையே தாயே
    சற்குரு நாதனே என்றே
    போற்றுவேன் திருச்சிற் றம்பலத் தாடும்
    பூரணா எனஉல கெல்லாம்
    தூற்றுவேன் அன்றி எனக்குநீ செய்த
    தூயபேர் உதவிக்கு நான்என்
    ஆற்றுவேன் ஆவி உடல்பொருள் எல்லாம்
    அப்பநின் சுதந்தரம் அன்றோ.
  • 10. சுதந்தரம் உனக்கே கொடுத்தனம் உனது
    தூயநல் உடம்பினில் புகுந்தேம்
    இதந்தரும் உளத்தில் இருந்தனம் உனையே
    இன்புறக் கலந்தனம் அழியாப்
    பதந்தனில் வாழ்க அருட்பெருஞ் சோதிப்
    பரிசுபெற் றிடுகபொற் சபையும்
    சிதந்தரு சபையும் போற்றுக என்றாய்
    தெய்வமே வாழ்கநின் சீரே.

    • 257. சேரிடம் அறிந்து சேர் - ஆத்திசூடி.

பெற்ற பேற்றினை வியத்தல் // திருவடி முறையீடு