திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
சிவசிவ ஜோதி
sivasiva jōti
அஞ்சாதே நெஞ்சே
añsātē neñsē
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

119. ஜோதியுள் ஜோதி
jōtiyuḷ jōti

    சிந்து
    திருச்சிற்றம்பலம்
    பல்லவி
  • 1. ஜோதியுள் ஜோதியுள் ஜோதி - சுத்த
    ஜோதி சிவஜோதி ஜோதியுள் ஜோதி
    ஜோதியுள் ஜோதியுள் ஜோதி.
  • கண்ணிகள்
  • 2. சிவமே பொருளென்று தேற்றி - என்னைச்
    சிவவெளிக் கேறும் சிகரத்தில் ஏற்றிச்
    சிவமாக்கிக் கொண்டது பாரீர் - திருச்
    சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
  • 3. வித்தெல்லாம் ஒன்றென்று நாட்டி - அதில்
    விளைவு பலபல வேறென்று காட்டிச்
    சித்தெல்லாம் தந்தது பாரீர் - திருச்
    சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
  • 4. சொல்வந்த அந்தங்கள் ஆறும் - ஒரு
    சொல்லாலே ஆமென்றச் சொல்லாலே வீறும்
    செல்வம் கொடுத்தது பாரீர் - திருச்
    சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
  • 5. தங்கோல் அளவெனக் கோதிச் - சுத்த
    சமரச சத்திய சன்மார்க்க நீதிச்
    செங்கோல் அளித்தது பாரீர் - திருச்
    சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
  • 6. ஆபத்தை நீக்கி வளர்த்தே - சற்றும்
    அசையாமல் அவியாமல் அடியேன் உளத்தே
    தீபத்தை வைத்தது பாரீர் - திருச்
    சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
  • 7. மெய்யொன்று சன்மார்க்க மேதான் - என்றும்
    விளங்கப் படைப்பாதி மெய்த்தொழில் நீதான்
    செய்யென்று தந்தது பாரீர் - திருச்
    சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
  • 8. என்பால் வருபவர்க் கின்றே - அருள்
    ஈகின்றேன் ஈகின்றேன் ஈகின்றேன் என்றே
    தென்பால் இருந்தது பாரீர் - திருச்
    சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
  • 9. துரியத் தலமூன்றின் மேலே - சுத்த
    துரியப் பதியில் அதுஅத னாலே
    தெரியத் தெரிவது பாரீர் - திருச்
    சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
  • 10. பரைதூக்கிக் காட்டிய காலே - ஆதி
    பரைஇவர்க் கப்பால்அப் பால்என்று மேலே
    திரைதூக்கிக் காட்டுதல் பாரீர் - திருச்
    சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
  • 11. தற்பர மேவடி வாகி - அது
    தன்னைக் கடந்து தனிஉரு வாகிச்
    சிற்பரத் துள்ளது பாரீர் - திருச்
    சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
  • 12. நவவெளி நால்வகை யாதி - ஒரு
    நடுவெளிக் குள்ளே நடத்திய நீதிச்
    சிவவெளி யாம்இது பாரீர் - திருச்
    சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
  • 13. மேருவெற் புச்சியின் பாலே - நின்று
    விளங்குமோர் தம்பத்தின் மேலுக்கு மேலே
    சேருமோர் மேடைமேல் பாரீர் - திருச்
    சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
  • 14. ஆரண வீதிக் கடையும் - சுத்த
    ஆகம வீதிகள் அந்தக் கடையும்
    சேர நடுக்கடை பாரீர் - திருச்
    சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
  • 15. பாடல் மறைகளோர் கோடி - அருட்
    பாத உருவ சொரூபங்கள் பாடி
    தேட இருந்தது பாரீர் - திருச்
    சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
  • 16. நீடு சிவாகமங் கோடி - அருள்
    நேருறப் பாடியும் ஆடியும் ஓடித்
    தேட இருந்தது பாரீர் - திருச்
    சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
  • 17. பத்தி நெறியில் செழித்தே - அன்பில்
    பாடுமெய் யன்பர் பதியில் பழுத்தே
    தித்தித் திருப்பது பாரீர் - திருச்
    சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
  • 18. பித்தாடு மாயைக்கு மேலே - சுத்தப்
    பிரம வெளியினில் பேரரு ளாலே
    சித்தாடு கின்றது பாரீர் - திருச்
    சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
  • 19. தருநெறி எல்லாம்உள் வாங்கும் - சுத்த
    சன்மார்க்கம் என்றோர் தனிப்பேர்கொண் டோங்கும்
    திருநெறிக் கேசென்று பாரீர் - திருச்
    சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
  • 20. எம்பொருள் எம்பொருள் என்றே - சொல்லும்
    எல்லாச் சமயத்துள் எல்லார்க்கும் ஒன்றே
    செம்பொருள் என்பது பாரீர் - திருச்
    சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
  • 21. சைவ முதலாக நாட்டும் - பல
    சமயங்கள் எல்லாம் தனித்தனிக் காட்டும்
    தெய்வம் இதுவந்து பாரீர் - திருச்
    சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
  • 22. எள்ளலில் வான்முதல் மண்ணும் - அமு
    தெல்லாம் இதிலோர் இறையள வென்னும்
    தெள்ளமு தாம்இது பாரீர் -திருச்
    சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
  • 23. எத்தாலும் ஆகாதே அம்மா - என்றே
    எல்லா உலகும் இயம்புதல் சும்மா
    செத்தாரை மீட்பது பாரீர் - திருச்
    சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
  • 24. பிறந்து பிறந்துழன் றேனை - என்றும்
    பிறவா திறவாப் பெருமைதந் தூனைச்
    சிறந்தொளிர் வித்தது பாரீர் - திருச்
    சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
  • 25. வருவித்த வண்ணமும் நானே - இந்த
    மாநிலத் தேசெயும் வண்ணமும் தானே
    தெரிவித் தருளிற்றுப் பாரீர் - திருச்
    சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
  • 26. பாரிடம் வானிட மற்றும் - இடம்
    பற்றிய முத்தர்கள் சித்தர்கள் முற்றும்
    சேரிட மாம்இது பாரீர் - திருச்
    சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
  • 27. உய்பிள்ளை பற்பலர் ஆவல் - கொண்டே
    உலகத் திருப்பஇங் கென்னைத்தன் ஏவல்
    செய்பிள்ளை ஆக்கிற்றுப் பாரீர் - திருச்
    சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
  • 28. உருவும் உணர்வும்செய் நன்றி - அறி
    உளமும் எனக்கே உதவிய தன்றித்
    திருவும் கொடுத்தது பாரீர் - திருச்
    சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
  • 29. எண்ணிய எண்ணங்கள் எல்லாம் - நான்
    எண்ணிய வாறே இனிதுதந் தென்னைத்
    திண்ணியன் ஆக்கிற்றுப் பாரீர் - திருச்
    சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
  • 30. பேருல கெல்லாம் மதிக்கத் - தன்
    பிள்ளைஎன் றென்னைப் பெயரிட் டழைத்தே
    சீருறச் செய்தது பாரீர் - திருச்
    சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
  • 31. ஜோதியுள் ஜோதியுள் ஜோதி - சுத்த
    ஜோதி சிவஜோதி ஜோதியுள் ஜோதி
    ஜோதியுள் ஜோதியுள் ஜோதி.

    • 317. ஈகின்றோம் ஈகின்றோம் ஈகின்றோம் என்றே - ச. மு. க.

ஜோதியுள் ஜோதி // ஜோதியுள் ஜோதி